ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2017

அகஸ்தியன் “தலைக் காவிரியில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான் – அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்

வராகன் பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கூர்மையாகப் பார்த்துத் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்தது. அடுத்து மனிதனாக உருவானது.

ஆனால் காற்று மண்டலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகள் இன்று ஏராளமாக வருகின்றது.

அதனால் நம் உடலில் இரத்தநாளங்களில் பல விஷத் தன்மைகள் கிருமிகள் உருவாகின்றது. பல விதமான புதுப் புது நோய்களும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுத்துச் சுவாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்
2.அது என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.அது என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
6.நாங்கள் பார்க்க்கும் பார்வையில் தீமைகள் அகன்றிட வேண்டும் என்ற உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதைச் சேர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இனி அணுகுண்டை வெடித்து அதனால் வரப் போகும் எத்தகையை விஷத்தன்மையாக இருந்தாலும் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் தடுத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் உலக யுத்தம் என்ற நிலை வரும்போது அணுகுண்டை வெடித்து இரு மடங்கு மின் உற்பத்தியாகும் நிலை ஏற்படும்.

அந்த அணுக்கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் மோதி எல்லாக் கோள்களும் அதை எடுத்து அது உமிழ்த்தும் போது
1.சூரியன் அருகிலே போனதும் மோதி
2.இரு மடங்கு காந்தத்தை உற்பத்தி செய்யப் போகின்றது.
3.அந்த மாதிரி இயக்கச் சக்தி வரும் பொழுது நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்.
4.உடலில் உள்ள அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.

நம் உணர்வின் தன்மை மடிந்து போகும் நேரத்திலே நாம் நம்மைக் காக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியனின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே எப்படி வராகன் தீமையைப் பிளந்ததோ அந்த அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விஷத் தன்மைகள் நமக்குள் வராது பிளந்து பழகவேண்டும்.

யாம் சொல்வது லேசாகத் தான் தெரியும். இதை நீங்கள் கண்டுபிடித்து அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஆயுள் பத்தாது.

ஏனென்றால் குருநாதர் அந்த அருள் சக்தியின் உணர்வுகள் கொண்டு அகஸ்தியன் உணர்வைக் கவரும்படி செய்தார்.

பாக மண்டலத்தில் அகஸ்தியன் அமர்ந்த இடத்தில் என்னையும் இருக்கச் செய்தார் குருநாதர். அங்கே மேலே தண்ணீர் இருக்கும். ஆனால் கீழே அடிவாரத்தில் நீர் கிடையாது. மேலே ஊற்றுகள் உண்டு.

ஏனென்றால் அங்கே மேகங்கள் கூடி வருவதை நுகர்ந்து அதை நீராக மாற்றுகின்றது. அதனால் தான் அகஸ்தியனுக்கு நீர் சக்தி வருகின்றது. நீர் சக்தி வருவதனால் ஜீவ சக்தியை அவனால் பெற முடிந்தது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது அகண்ட அண்டம் ஆதியிலே எப்படி உருவானது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை அங்கே அமர்ந்து தியானிக்கும்போது அறிய முடிந்தது. குரு அருளால் அதைக் கண்டுணர முடிந்தது.
1.அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்த உணர்வின் அறிவு தான்
2.எனக்குள்ளும் புகுந்து இத்தகைய நிலைகளை எல்லாம் அறிய முடிந்தது.

இதைப் போல நீங்களும் அறிந்து தீமைகளைப் பிளந்து அந்த “அகஸ்தியனின் அருள் ஒளிகளை” உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

அதற்காகத்தான் நான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்வது.