ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2017

காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் “ஆண்டவன் மெச்சி… நமக்குச் செய்வான்” என்று தான் இருக்கின்றோம் – விளக்கம்

கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகத்தைச் செய்தால் அந்த ஆண்டவன் காப்பாற்றுவான்.
1.நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள்…!
2.காசைச் செலவழித்தால் “ஆண்டவன் தன்னாலே வருவான்” என்று
3.பெரும் பகுதியாவனவர்களுக்கு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இருக்கின்றது

1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்
2. உயிருக்குள் - உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்
3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்
4.அதை விட்டுவிடுகின்றார்கள்.

அதைச் செய்யாது இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்?

காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று... பாலை ஊற்று... அந்தக் கட்டையைப் போடு... இதைப் போடு... என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்...” என்று செய்கின்றார்கள்.

நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் “எனக்கு எல்லாம் செய்வான்”.

ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்...” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

ஞானிகள் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.

அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.
2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.
3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.
4.இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.

புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது...! இப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிர் என்ன வேலை செய்கிறது என்று சொல்லவில்லை.

அந்த நெருப்பில் இன்னென்ன பொருளைப் போட்டால் “உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள். ஏனென்றால்
1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்
2.அதைக் “கரைத்து” (கருக்கி)
3.எல்லாம்... “மணமாகத்தான் கொடுக்கின்றது”.

அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.

ஆக “உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டார்கள். “நெருப்பில் போட வேண்டும்...” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

நாம் எப்படி உருவானோம் என்ற உண்மையை ஆதியிலே கண்டவன் அருள்ஞானி அகஸ்தியன் இதை வெளிப்படுத்தினான்.
1.அந்த உணர்வலைகள் இன்றும் உண்டு.
2.இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.

ஆனால் காலத்தால் அரசர்களால் வேதங்களை தனக்குகந்த நிலைகளாக மாற்றி பேருண்மையின் நிலைகளை மறைத்து இன்றும் அரசுப் போர்கள் நடந்து ஞானிகள் காட்டிய உணர்வின் அலைகள் மறைந்துவிட்டது.

1.தன்னைத்தான் அறிந்து கொள்ளும் சக்தியை இழந்து
2.இன்று மனிதர்கள் நாம் கடவுளைத் தேடிக் கொண்டே உள்ளோம்.
3.நமக்குள் “உள் நின்று இயக்குகிறான்” என்ற நிலையை மறந்தேவிட்டோம்.
4.புறத்தீயில் பொருளைப் போடும் முறைகளைத்தான் அறிந்திருக்கின்றோமே தவிர அகத்திற்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் போட வேண்டிய அருள் உணர்வுகளை நாம் அறியவில்லை.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த உண்மைகளை வியாசகர் நமக்குப் பிற்காலத்தில் எடுத்துரைத்தார். அதை வேதங்களாக மாற்றப்பட்டு தவறான வழிகளில் காட்டப்பட்டு தவறின் நிலையிலே “அரசர்கள்” நம்மை இயக்கிவிட்டார்கள்.

அதிலிருந்து விடுபட்டு அந்த மெய் ஞானியான அகஸ்தியனின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று தான் உபதேசிக்கிறோம்.

இதை உங்கள் உடலுக்குள் பதிவாக்கிவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் அகஸ்தியன்பால் செல்லும். அகஸ்தியரின் அருள் சக்திகளைப் பெற்று தீமையில் இருந்து விடுபடும் உணர்வினை உங்களிலே வளர்த்து அருள் உணர்வை உங்களில் பெருக்கிட உதவும்.

இந்தப் பூமியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக்கும் அந்த உணர்வுகளை நுகர்ந்து கடைசி நிலைகளில் நாம் அனைவரும் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அதைத்தான் ஆலயங்களில் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அந்த ஆலயங்களுக்குச் சென்றால் நாம் நம் உடலுக்காக வேண்டுகின்றோமா… அல்லது உயிருக்காக வேண்டுகின்றோமா…! 

சற்று சிந்தித்துப் பாருங்கள்.