ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2026

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”


நம் குருநாதர் பித்தரைப் போன்று ருந்து தான் எல்லா உலகத்தையும் அறிந்தார். அதே போல அவர் காட்டிய அருள் வழியில் ஒன்றும் தெரியாதவனைப் போன்று…” எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்கின்றேன்.
 
ஆனால் உங்கள் உணர்வைத் தெரிந்து அதற்குத் தக்க
1.இங்கே வந்தோருக்கு குரு காட்டி அருள் வழியினை உபதேசிக்கும் பொழுது
2.நீங்கள் எந்த நிலையில் வந்தாலும் உங்களுக்கு நல்ல சிந்தனையைத் தூண்டி
3.தன் தன் தவறுகளை உணர்ந்து தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகளைப் பெறச் செய்கின்றேன்.
 
குருநாதர் பித்தரைப் போல் இருந்துதான் எனக்கு வழி காட்டினார். ஆக நானும் தெரியாதவனைப் போல் தான் இருக்கின்றேன் தெரிந்து கொண்டவனாக நான் நடப்பதில்லை.
 
ஆனால் நான் தெரிந்து கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும். பொருளறியும் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் நீங்கள் பெற வேண்டும்…! என்ற உணர்வைத் தான் எடுத்துக் கொள்கின்றேன்.
 
ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உம்… கொடுத்துக் கேட்டால் வீட்டில் இப்படி இருக்கின்றது தொழில் இப்படி இருக்கின்றது பையன் இப்படி இருக்கின்றான் என்ற குறைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?
 
1.ஆக நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எனக்குள் நான் மாற்றிக் கொள்கின்றேன்.
3.அதன் வழி உங்களுக்குள் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சுகிறேன்.
4.அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் தீமை புகாது தடுக்கும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
உலகில் விஷத்தன்மைகள் உருவாகிக் கொண்டுள்ளது. எங்கே பார்த்தாலும் இனம் மதம் என்ற நிலையில் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக தன் இனத்தையே அழித்திடும் நிலையாகச் செயல்படுகின்றார்கள்.
 
தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அப்படிப்பட்ட வீரிய உணர்வு தான் வருகின்றதே தவிர இருளை நீக்கி ஒளியான நிலை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை.
 
அசுர உணர்வுகள் பாயும் போது நல்ல உணர்வுகள் செயல்பட முடியாது போகின்றது. இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.
 
1.இந்தத் தியானத்தைத் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அருள் உணர்வைப் பெற்று அதையே வளர்த்து
2.மற்றவர்களுக்கும் அருள் ஞானத்தைப் போதியுங்கள் அதை எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
 
கேட்டுணர்ந்தோர் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் இந்த வளர்ச்சி வருகின்றது. அவரும் அதைப் பெருக்கத் தொடங்கினால் அவரும் நல் வழி பெறுகின்றார். அவருக்கும் வாழ்வதற்கு நல்ல வழி கிடைக்கின்றது.
 
இதைப் போன்று தொடர்ந்து நம் வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும். தீமைகள் புகாது தடுத்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.