
தீமைகளைத் தடைப்படுத்தும் வழி
தீய உணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும்
தன்மை இல்லையென்றால் பிழை என்ற நிலை உருவாகும்.
பிழை என்ற நிலையில் நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால் பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.
நண்பர்களுக்குள் தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி
இயக்குகின்றது…?
என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சந்தர்ப்பங்களால் நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி
2.நாம் நம்மை முதலில் பாதுகாக்கும் நிலை பெற வேண்டும்.
எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் “ஈஸ்வரா…”
என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக்
கொடுத்திருக்கிறோம். அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க
வேண்டும்…?
எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.
1.“சாமி சொன்னார்கள்…
மறந்து விட்டது” என்று இருக்கக்கூடாது.
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு”
செய்து கொள்ள வேண்டும்.
3.இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.
ஆனால் பிறர் தான் சொல்லும் கஷ்டத்தைக்
கேட்கவில்லை என்றால்
1.“என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார்…!
2.நாம் சொல்கிறோம்…
காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.
ஆகையினால் வேதனையின் உணர்வுகளைக் கேட்டால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அதனைச் செவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… உள்ளே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.
நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளைத் தன்னுள்ளே கவராது.
இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில்
பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.“நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…?
3.ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
4.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.
ஆகையால் ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால்
அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால்
ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.
எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள். அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
1.யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்
2.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
3.அதன் பிறகு யாம் கோபமாக “போங்கள்…
உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.
அப்படி யாம் சொன்னால் “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…!” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி
மடக்கி அனுப்புகின்றோம்.
சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று நீங்கள் சொன்னால், யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால் அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா…?
யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.
அதைப் போல் மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக… இரத்தத்தில் அணுவின் கருவாக மாறும்.
ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.