ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2018

அணுகுண்டை வெடிக்கவிடாது செய்யும் “கண நீர் (HEAVY HYDROGEN) போல” எந்தத் தீமையான உணர்வும் செயல்படாமல் அடக்கி ஒடுக்கச் செய்யும் ஹைட்ரஜன் – “நம்முடைய மெய் ஞானிகள்”

விஞ்ஞானி அணுவைப் பிளக்கும் நிலையாக அணு குண்டைச் செய்து வைக்கின்றார்கள். அதே சமயத்தில் அதைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஹைட்ரஜனை (HEAVY HYDROGEN) உபயோகிக்கின்றார்கள்.

அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கக்கூடிய ஆற்றலைப் பிளந்தாலும் அதனால் மற்ற தீயது விளைவிக்காது தடுப்பதற்காக
1.“கண நீர்” அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி
2.இதனுடைய ஆற்றலைக் கலக்கச் செய்யும் பொழுது வெடிக்க விடாது செய்து விடும்
3.கண நீரின் அழுத்தத்தால் “NUCLEAR REACTION” – அது செயல்படாது

இவ்வாறு ஹைட்ரஜன் கொண்டு அணுக் கதிரியக்கத்தை அடக்குவது போல்
1.விண்ணிலே வரும் விஷக் கதிரியக்கங்கள் அனைத்தையும்
2.அடக்கிடும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள்
3.அதாவது கணநீர் போன்று ஹைட்ரஜன் ஆனார்கள் மெய் ஞானிகள்

விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகப் பளிச்சிடும் நிலைகள் பெறுவோம். எத்தகைய நஞ்சான உணர்வுகளையும் நாம் ஒடுக்க முடியும்.

ஞானிசெய்வது போல அன்று மெய்ஞானி தனக்குள் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு,
அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். பிறர் துன்பப்படுவதைப் பார்த்து இரக்கப்பட்டோம்.
1.அவர்கள் உடலில் விளைந்த துயரமான உணர்வுகள்
2.நமக்குள் மாறி அந்த சக்தியாக நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது.

இதை நீக்க என்ன செய்ய வேண்டும்…? என்ற அந்த நினைவினைக் கூட்டுவதற்குத்தான் விண்ணை நோக்கி ஏங்கும்படியாக ஒவ்வொரு ஆலயத்திலும் தூப ஸ்தூபி வைத்திருக்கின்றார்கள்.

அருள் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் வேண்டிச் சுவாசிக்க வேண்டும்.

பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

இதைத் தான் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று சொல்வது. ஏனென்றால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அது உடலுக்குள் ஒவ்வொன்றும் கருவாகித்தான் அணுவாக விளைகின்றது.

ஆகவே அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுக எண்ணிப்
2.பின் மொத்தமாக உடல் முழுவதற்கும் நினைவு கூட்டி
3.அந்த மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு நினைவின் அலைகளை உடலுக்குள் செலுத்தி
5.கருவிற்குள் (இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு) உபதேசிக்க வேண்டும்.

அப்போது அந்த உணர்வுகள் வீரியம் ஆகி ஒளி பெறும் உணர்வின் அணுக்கருக்களாகி ஒளியான அணுக்களாக உருவாகும்.

பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கப்படும்போது “அஆஇஈ” ஒன்றும் தெரியாது. சொல்லிக் கொடுக்கும் பொழுது இரண்டாவது தடவையோ மூன்றாவது தடவையோ தெரியாது. ஆனால் நான்காவது தரம் சொன்னது பதிவாகிய பின் ஆ ஈ ஊ என்று நாம் பேசுகிறோம் அல்லவா…!

ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியாத பிள்ளைக்கு அவைகளைக் கற்றுக் கொடுக்கின்றோம். அதே மாதிரித்தான் நாம் சுவாசிக்கும் உணர்வின் நினைவின் அலைகளை
1.ஞானிகளின் அருள் உணர்வுடன் கலந்து கொண்டால்
2.நமக்குள் அது என்ன செய்யும் என்று உபதேசம் கொடுக்க வேண்டும்.
3.அப்போது தான் அந்த உணர்வுகள் நமக்குள் அடங்கும் (கண நீரை வைத்து அடக்கி வைப்பது போல்)
4.தீமை செய்யும் அணுக்கள் நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற முடியும்.
5.ஏனென்றால் மனிதன் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்.

டேப் ரெகார்டரில் பதிவு செய்வது போல் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வலைகளுக்குள் மகரிஷிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அன்று ஞானி சொன்னான்.

ஆனால் அதையெல்லாம் தூக்கிக் குப்பையில் எரிந்து விட்டோம். இன்று குருநாதர் காட்டிய வழியில் இதை யாம் உபதேசிக்கின்றோம் என்றால் இவர் என்ன புதிது புதிதாக ஏதோ சொல்கின்றார் என்று எண்ணுகின்றார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளைத்தான் உணர்த்தி வருகின்றோம்.