ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2018

குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய நிலைகளில் நம்மைப் பிறர் வேதனைப்படச் செய்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
4.இவ்வாறு உடலுக்குள் பல முறை செலுத்தல் வேண்டும்.

ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைப்படச் செய்த உணர்வுகளை அடக்கி அந்த விஷத்தை அடக்குகின்றது.

மெய் ஞானியின் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெறுவது தியானம்.

1.நாம் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.என்னைப் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அந்த நிலைகள் பெற வேண்டும்.

மெய் ஞானிகளின் உணர்வை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் அது தவம்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது.
1.மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது
2.அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.