ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2018

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள (மகாலிங்கம்) மலையில் பெற்ற அனுபவம் - நடந்த நிகழ்ச்சி

மந்திரவாதிகள் தன் பிழைப்பிற்காக எவ்வாறு மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று குருநாதர் எம்மிடம் (ஞானகுரு) நிறையச் சொல்லியிருந்தார்.

அப்பொழுது ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியில் தனித்து ஒரு இடத்திற்கு நான் செல்லப்படும் போது திடீரென்று என்னை அறியாது ஒரு உயரமான பாறையில் தூக்கிக் கொண்டு அடக்கமாக வைத்து விடுகிறார்கள்.

ஒரு சிறு பாறை தான். ஆனால் உயரமாக இருக்கின்றது. கீழே பார்த்தால் “கிறு…கிறு.. என்று வருகிறது. அவ்வளவு உயரம். திரும்பிப் பார்க்ககூட இடம் இல்லை.

அந்த பாறை என் பாதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்குத்தான் உள்ளது. இறங்குவதற்கு வழி தெரியவில்லை.

எந்த மகரிஷிகளை எண்ணினாலும் இங்கே வழி இல்லை. அப்பொழுது நான் நினைக்கிறேன் (ஏற்கனவே குருநாதர் சொன்ன மாதிரி மந்திரவாதிகள் தான் யாரோ நம்மை இவ்வாறு செய்து விட்டார்கள் என்று நான் தத்தளித்துக் கொண்டிருக்கின்றேன்,

எந்தத் திசை திருப்பினாலும் தலை சுற்றுகின்றது. கீழே விழுந்தால் எலும்பு சுக்கு நூறாகிப் போய்விடும். ஒரு உருப்படி கூட இருக்காது. அந்த அளவுக்கு உயரமான பாறை. எதுவுமே பிடிமானம் இல்லை. விழுந்தால் அப்படியே நொறுங்கவேண்டியது தான்.

குருநாதர் சொன்ன ஆற்றலை என்னால் எடுக்க முடியாதபடி அந்த மாதிரி நேரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஏதோ மந்திரவாதிகளின் நிலைகளில் யாரோ செய்து விட்டார்கள் என்று தான் எண்ணுகின்றேன்.

ஏனென்றால் குருநாதர் என்னுடைய உணர்வுகள் எவ்வாறு இயங்குகிறது ஒவ்வொரு நொடிக்கும் என் எண்ணங்கள் எப்படி அலை மோதுகின்றது என்று அங்கே என்னை பார்க்கின்றார்.

1.என் மனைவி பிள்ளைகள் மீது பற்றும் அதே சமயத்தில் சொந்த பந்தங்கள் மீது பற்றும்
2.வாழ்க்கையில் எவ்வளவு சுகங்களை அனுபவித்தோம் என்ற நிலையும்
3.கீழே விழுந்தால் சுக்கு நூறாக ஆகிவிடுவோம் என்ற நிலையும்
4.யாரோ ஒரு மந்திரக்காரன் என்னை இப்படிச் செய்து விட்டானே என்ற நிலையும்
5.இப்படித்தான் என் உணர்வுகள் சுழன்று கொண்டிருந்ததே தவிர
6.குருநாதர் கொடுத்த அருள் சக்தியைப் பயன்படுத்த என்னை அந்த உணர்வுகள் விடவில்லை.

கடைசியில் மனக்கலக்கத்துடன் இனி இது தான் முடிவு போல இருக்கின்றது. நம்மால் இதிலிருந்து மீள்வதற்கு முடியவில்லையே என்ற நினைவு வருகின்றது.
1.அப்பொழுதுதான் குருநாதர் மேல் திருப்பமாகி
2.இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலிருந்து மீள்வதற்கு
3.குருநாதர் ஒன்றும் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று நான் எண்ணுகின்றேன்.

குருவின் நினைவு வரப்படும் பொழுது தான் அப்பொழுது எனக்கு காட்சி கொடுக்கிறார். நான் மிகவும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
மனமே…! இனியாகிலும் மயங்காதே…
பொல்லா… மானிட வாழ்க்கையில் தயங்காதே…
பொன்னடி பொருளும் இப்பூமியில் சுகமோ…!
“மின்னலைப் போலே” மறைவதைப் பாராய்…!
நேற்று இருந்தார் இன்று… இருப்பது நிஜமோ…?
இந்த நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…? என்று குருநாதர் இந்தப் பாடலைப் பாடி வினாக்களை எழுப்புகின்றார்.

இந்த உடலின் வாழ்க்கைக்காக என்னுடைய எண்ணங்கள் எங்கெல்லாம் செல்லுகின்றது.

1.குடும்பத்தில் எதை எல்லாம் எண்ணினேனோ எல்லாம் அழியப் போகிறது
2.உடலில் பதிந்த உணர்வுகள் இயக்கி என்னை எப்படிப் பலவீனப்படுத்துகின்றது.
3.தெளிந்த நிலைகள் எடுக்கவிடாது எவ்வாறு தடைப்படுத்துகின்றது என்று
4.அந்தப் பாறை மீது அமர்த்தி தனித்து இருக்கச் செய்து
5.மரண வாயிலில் நிற்கும் போது அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

இதைப் போன்று தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அறியாது எத்தனையோ துன்ப நிலைகள் படுகின்றார்கள்.
1.நன்மையை எண்ணிச் செயல்படும் செயல்களுக்கு எப்படி வலு கொடுக்க வேண்டும்?
2.அவர்கள் உடலில் அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்றால்
3.உன்னுடைய உடைய சக்திகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ற நிலையை உணர்த்துவதற்கு
4.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அனுபவம் பெறச் செய்தார்.

அந்த மூன்று லட்சம் பேருடைய வாழ்க்கையில் அங்கே குடும்பத்தில் யாரும் தவறே செய்யவில்லை…! ஆனால் சாபமிட்ட நிலைகளால் அவர்கள் குடும்பத்தில் எவ்வாறு அல்லல்படுகின்றனர் என்று காட்டுகின்றார்.

ஒரு விருப்பு வெறுப்பால் மந்திரங்களைச் செய்து அந்தக் குடும்பத்தில் பதியச் செய்கின்றனர். அது பரம்பரையாக அந்த மந்திர ஒலிகள் புகுந்து பின் வரும் சந்ததியினைரை எவ்வாறு இயங்குகிறது…? எப்படிப் பாதிப்பாக்குகின்றது?

இதே போல் வறுமையில் வாடுபவர்கள் இடும் சாபங்கள் எந்தெந்த நிலைகளில் அவர்களுக்குள் பதிவாகின்றது?

இரண்டு தலைமுறைக்கு முன்னாடி இப்படிப் பதிந்த உணர்வுகள்
1.இப்பொழுது வாழ்பவர்கள் நல்லவைகளையே செய்தாலும்
2.நல்ல பொருளுக்குள் விஷத்தைக் கலந்தால் நல்லதும் நஞ்சாகுவது போல
3.இவர்கள் செய்யும் நல்லவை நஞ்சின் செயலாக எவ்வாறு மாறுகின்றது என்பதையும் குருநாதர் உணர்த்துகின்றார்.

பல நன்மைகளைச் செய்வார்கள். நல்லதைச் செய்து விட்டுக் கடைசியில் அவரே சலித்துக் கொண்டும் வெறுத்துக் கொண்டும் இருக்கும் நிலையை அவர்களை அறியாத நிலைகள் கொண்டு இயக்கிவிடுகின்றது இந்தச் சாப அலைகள்.

உதாரணமாக நண்பர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். எனக்கு இப்படி மோசம் செய்தான் என்றால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகி சாபம் இட்டால் அது பதிந்த பின் அதே உணர்வு வேலை செய்கிறது.

சாபம் இல்லாதவர் யாருமே இல்லை என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால் மூதாதையர்களில் குடும்பத்தில் பற்றுடன் வளர்ந்து வருவார்கள்.

தொழிலில் சில நிலைகளில் பின்னமாகி (குறைபாடு) விட்டால் ஒருவருக்கொருவர்
1.அவன் உருப்படுவானா…?
2.அவன் நல்லபடியாக வாழ்ந்திடுவானா…! என்ற
3.இந்த நிலைகள் தான் வருகிறது.

காரணம் இந்த உணர்வின் சத்து எவ்வாறு இயக்குகின்றது? எவ்வாறு உடலுக்குள் விளைகின்றது. ஆக ஒருவன் நமக்குச் செய்யும் தீமையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது.
1.அந்த நேரத்தில் அந்தத் தீமை நமக்குள் வராது
2.மனதை எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்று அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

அன்றைய ஞானிகள் காட்டிய அற நெறிகள் எவ்வாறு மறைந்தது? அந்த மகரிஷிகளின் அருளாற்றலை எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து எவ்வாறு மீள வேண்டும்? என்று எமக்குத் தெளிவாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.