ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2018

நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஒரு போக்கிரியின் உணர்வுக்குள் சென்றால் அது அவனைத் தடுமாறச் செய்யும் – அவனால் நமக்கு இடைஞ்சல் செய்யவே முடியாது…!

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று
2.அதைக் கவர்ந்து கொண்டால் தான்
3.நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்? கண்ணன். நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ திருடன் வருகிறான் போலிருக்கின்றது நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.
அதைப் போன்று தான்
1.நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம்
3.எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ
4.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது? எப்படி வீட்டு நினைவு வரும்?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது
1.உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது? என்று கேட்பார் குருநாதர்.
2.எல்லாருக்கும் நல்லது செய்தாய்! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது?
3.இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை!

ஏன்?

1.நமக்குள் வேதனை வந்தாலும்
2.அது நம்மைத் தாக்கினாலும்
3.நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடுகிடுவென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான் உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடுகிடுவென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.”போக்கிரி…” என்று சொன்னவுடனே
2.நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது.
3.நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும் முடியாது.

அதற்காக வேண்டித் தான்
1.நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
6.உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது
1.அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ
2.அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..”
3.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
4.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும் “தடுமாறச் செய்யும்.!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபுகுபு என்று போய்
3.அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்!

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறது. விஷத்தின் தன்மையை முறிக்க வேறு ஒரு விஷ முறிவு மாத்திரையைக் கொடுத்தால் விஷம் இறங்கிவிடுகிறது.

நம் சிறு நீரைப் பரிசோதிப்பதற்காக அதிலே ஒரு சொட்டு கெமிக்கல் விட்டால் உடலுக்குத் தகுந்தாற்போல் அதிலுள்ள அனைத்தையும் காட்டுகின்றது.

சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் சிகப்பு நிறமாக மாறுகிறது. அதிலே சர்க்கரை கொஞ்சம் அளவு குறைவாக இருந்தால் வெளுப்பு நிறமாக வருகிறது. மிகவும் கொஞ்சமாக இருந்தால் பச்சை நிறமாக ஆகிறது. ஒன்றுமே இல்லை என்றால் நீல நிறமாக இருக்கிறது.

அந்தக் கெமிக்கலைக் கலந்ததும் சிறு நீருக்குள் உள்ளதைப் பிரித்துக் காட்டும் நிலைக்கு வருகிறது.

இதே போன்று மகரிஷிகளின் நினைவலைகளை நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.பிறருடைய துயரத்தின் நிலையைப் பிரித்துக் காட்டும் நிலையும்
2.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது நம்மைப் பாதுகாக்கும் நிலையாகவும் அமையும்.

செய்து பாருங்கள்! உங்களுக்கு வரும் எத்தகைய தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் பகைமைகளையும் வேதனைகளையும் உங்களால் அடக்கி ஒடுக்க முடியும்.

நல்ல உணர்வைக் காக்கும் சக்தியாக நீங்கள் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றோம்.