ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2018

தாய் தந்தையரை விட்டு நான் பிரிந்து சென்றால் தான் சொத்தையும் சுகத்தையும் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுகின்றார்கள்…! – அன்று அகஸ்தியன் சொன்னது என்ன..?

ஓர் பிரபஞ்சத்திற்குள் கோளோ மற்றதோ விலகிச் சென்றால் அது செயலற்றதாகிப் பெரும் பாறைகளாக (ASTEROIDS) இந்தப் பிரபஞ்சத்திற்குள்  திரிவதைப் பார்க்கலாம்.

அது பூமியின் சுழற்சி வட்டத்திற்குள்ளோ சூரியனுக்குள்ளோ சிக்காது மற்ற கோள்களின் உணர்வு எடுக்க முடியாது அதனுடைய நிலைகள் சுழன்று வந்து கடைசியில் எந்தெந்தக் கோள் இழுக்கின்றதோ அதன் ஈர்ப்புக்குள் சிக்கி எரி கல்லாக எரிந்துவிடுகின்றது.
1.இங்கே இந்தக் கோலில் ஈர்ப்புக்குள் வந்தாலும்
2.அது ஜீவிதம் பெறும் பாறையாக ஆவதில்லை.
3.வெறும் கல்லாகவே நிலைத்து விடுகின்றது.

நம் பூமிக்குள்ளே எரிகல்லாக விழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இதெல்லாம் சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்காது மற்ற கோளின் உணர்வின் உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது அதாவது மலையாக விளைந்து அது நம் பூமிக்குள் வரும் போது கல்லாக மாறுகின்றது.

அதாவது ஒரு கோளின் தன்மையாக முழுமையாக வளர்ச்சி அடைய முடியாது தன்னுடைய ஜீவிதத் தன்மையையே இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் எல்லோருமே நம் அன்னை தந்தையரால்தான் மனித உடல் பெற்றோம். தாய் தந்தையர் தான் நம் முதல் தெய்வங்கள்…!

நம்மை மனிதனாக முதலில் ஆக்கிய அவர்களுடைய ஈர்ப்பை விட்டு நாம் விலகிச் சென்றால் கடைசியில் இந்த உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்வோம் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

குழந்தை சொன்னபடி கேட்கவில்லை சரியாகப் படிப்பிலே வரவில்லை என்றால் குழந்தைக்கு
1.அந்த மகரிஷியின் அருள் ஒளி அவன் பெற வேண்டும்.
2.அவன் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.பொருள் அறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
4.அவன் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்.
5.அவன் செயல் எல்லாம் புனிதம் பெற வேண்டும்.
6.அவன் பார்ப்பது எல்லாம் நலம் பெற வேண்டும்.
7.அவனைப் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று
அன்னை தந்தையர் இத்தகைய உணர்வுகளை எடுத்துப் பாய்ச்ச வேண்டும்.

இதையே குழந்தையும் தன் அன்னை தந்தையர் சொன்ன இந்த முறைப்படி
1.அவர்கள் அருள் ஆசிகள் பெற வேண்டும்
2.அவர்கள் அருளால் என் வாழ்க்கையிலே அறியாது வந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.பொருள் கண்டுணரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இப்படி இருந்தால் தான் அந்தக் குடும்பத்தினுடைய நிலைகள் அது சீராகச் செயல்படுத்த முடியும்.

ஆனால் சில பேர் சொல்வார்கள்…!

எங்கள் அம்மா அப்பாவை விட்டுப் பிரிந்து சென்று விட்டேன் என்றால் நான் அதிகமாகச் “சொத்தைச் சம்பாதித்து விடுவேன்” என்று சொல்வார்கள்.

பிரிந்து போனவுடனே சொத்து வரும். ஆனால் உள்ளுக்குள் வேதனை நோயாக மாறும். நோயின் தன்மை தான் கடைசியில் வரும். தனித்த நிலையில் அல்லல்பட வேண்டி வரும்.

தாய் தந்தையர் தன் குழந்தையை எண்ணி எண்ணி வேதனைப்படும் போது
1.சாப அலைகளாக அது மாறி
2.மனிதனுடைய ரூபத்தை அற்றுவிடும் நிலைகளுக்கும்
3.சிந்தனை அற்ற நிலைகளுக்கும் அது உருவாக்கி விடும்.
4.தாயினால் உருவாக்கப்பட்ட (நம்) நல்ல உணர்வின் சக்திகளை இழக்கும் தன்மைக்குத்தான் அது கொண்டு செல்லும்.

நாம் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது எத்தனையோ துன்பத்தைத் தனக்குள் ஏற்று எத்தனை வேதனைகளைத் தனக்குள் தாங்கி நம்மை ஆளாக்கிப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டினார்கள்.

அடுத்து நமக்கு நல்ல வழியும் காட்டி கல்வியையும் செல்வத்தையும் பெறச் செய்தார்கள்.

இதையெல்லாம் செய்த பின்
1.நம்மால் அவர்கள் வேதனைப்படும் போது
2.நல்ல உணர்வுகளை அவர்களால் இயக்க முடியாது தவித்துக் கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில்
3.”அவர்களைக் காக்கும் நிலைக்கு நாம் வரவில்லை…, என்றால்”
4.நரகத்திலும் நரகமான நிலைகள் கொண்டு மிருகத்திலும் மிருகமான மோசமான நிலைகளுக்குத்தான் நாம் செல்ல நேரிடும்.

ஒவ்வொரு உயிரினங்களும் தன் உணவை எடுக்கப்படும் போது எத்தனை அவஸ்தை கொண்டு அந்த உணவை உட்கொள்கின்றது என்று இன்று நாம் பார்க்கலாம். அந்த அவஸ்தையின் நிலைகள் கொண்டு அதிலிருந்து மீள முடியாதபடி அதற்குள்ளேயே அடங்கிவிடுகின்றது.

இதைப் போல தாய் தந்தையரை எந்த அளவுக்கு இழிநிலைப் படுத்தி அது செயல்படுத்தினரோ அவர்கள் அனைத்துமே அந்த நிலைக்குத்தான் செல்ல முடியும்.

தாய் தந்தைரைப் பழித்துக் கொண்டிருந்தால் எந்த நல்ல சக்தியும் நாம் பெற முடியாது. மகரிஷிகளின் அருள் சக்தியும் மெய் ஞானமும் பெறக் கூடிய தகுதியும் இழந்துவிடுவோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு தான் அகண்ட அண்டத்தையும் அறிந்து இன்றும் துருவ நட்சத்திரமாக (தாய் தந்தையருடன் இணைந்து) உள்ளான்.
1.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் படைக்கத் தெரிந்தவர்…
2.முழு முதல் கடவுள் என்று
3.விநாயகர் தத்துவத்தில் அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளான்.

அந்த மெய் ஞானி காட்டிய வழிப்படி நாம் அனைவரும் அன்னை தந்தையுடன் இணைந்து சேர்ந்து அவர்கள் நல்லாசிகள் என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என்ற நிலைகளில் செயல்பட வேண்டும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து அந்த மகா ஞானி காட்டிய வழியில் தாய் தந்தையர் தெய்வ சக்தி பெறவேண்டும் என்று வேண்டுவோம்… தியானிப்போம்…!