ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2018

தெய்வங்களுடன் சேர்த்துப் “பாம்பையும்” காட்டியுள்ளார்கள் ஞானிகள் – ஏன்…?

ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ள சாஸ்திரங்கள்படி பார்த்தால் பெரும் பகுதியான தெய்வங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாம்பினை இணைத்தே காட்டியிருப்பார்கள். ஏன்…!

விநாயகர் கோவிலில் பார்த்தால் இரண்டு பாம்பும் பிணைந்து இருப்பதாகப் போட்டு இருப்பார்கள். அதனின் பொருளை நாம் அறிந்துள்ளோமா…?

நமக்குள் இருக்கும் உணர்வுக்குள் ஒன்றுக்குள் ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை
1.எதனின் நஞ்சின் தன்மை அடைகின்றதோ
2.அதனின் தன்மை கொண்டுதான் நம்மை அடக்கி ஆள்கின்றது
3.ஒரு விஷத்தின் தன்மை இன்னொரு விஷத்தின் தன்மையை அடக்கப்போகும் போது
4.அதனின் தன்மை எப்படி ஒடுங்குகின்றது…?
5.ஓர் உணர்வின் (அணுவின்) தன்மை எங்கே…, அது எப்படிப் பிணைகின்றது…? என்ற தத்துவத்தைத்தான்
6.பாம்புகளாக அங்கே காட்டி இருக்கின்றார்கள்.

அன்றைய ஞானிகள் சாஸ்திரங்களாகக் கொடுத்த மெய் உணர்வுகள் காலத்தால் மறைந்துவிட்டது. மறைந்த உண்மைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உணர்த்திக் கொண்டேயுள்ளோம்.

நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உள்ளான். அவனைப் பின்பற்றியவர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று இருள் சூழ்ந்த நிலைகளில் இருந்து மீள வேண்டும். ஒருவருக்கொருவர் பிரித்தாளும் பகைமை உணர்வுகளை வெல்லும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.

நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே கலந்து நாட்டிலே திரியும் நச்சுத் தன்மைகள் மறைய வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலையாக வளர்ந்து பேரருள் பேரொளியாக வளர வேண்டும் என்ற நிலைக்கேதான் குருநாதர் காட்டிய வழியில் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

1.எனக்குள் இருந்த இருந்த இருளை நீக்க…
2.கல்வி அறிவு அற்றவனுக்கு... மூடனாக இருந்த எனக்கு (ஞானகுரு)
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை
4.உபதேசத்தின் வழி கொண்டு உணர்த்திக் காட்டினார்.

என் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுவின் தன்மை ஒவ்வொன்றுக்கும் அவர் உபதேசித்த அருள் உணர்வு தான் அதற்குள் இருந்து ஞானத்தின் நிலைகளாக இயக்கி அதன் மூலம்
1.என்னால் மெய் உணர்வுகளை நுகர முடிந்தது.
2.மெய் ஒலியின் அலைகளைப் பரப்ப முடிகின்றது.
3.உங்களுக்கும் குருநாதர் காட்டிய வழியினை உபதேசிக்க முடிகின்றது.

இதைப் படிப்போர் அனைவரும் இதைப் பின்பற்றிப் பாருங்கள்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள்.
2.உங்கள் உயிரின் தன்மை ஈசனாக மதித்துப் பழகுங்கள்.
3.உங்கள் உடலை அவன் படைத்த கோயிலாகவும் சிவனாகவும் மதியுங்கள்.
4.மனிதன் என்ற தன் நிலையை அடைய முடியும்.

உங்கள் உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. அது அனைத்திலும் உயர்ந்த தெய்வ நிலைகளினுடைய நிலைகளைச் சேர்த்து உலகைக் காத்திடும் உத்தம மெய் ஞானிகளாக வளர வேண்டும்.

ஒரு குழம்பிற்குள் பல பொருகளைச் சேர்த்து ருசியாக ஆக்கி மகிழ்ச்சியாக எப்படி உட்கொள்கின்றோமோ அதைப் போல பல உணர்வுகளின் தன்மையைப் பலவாறு பல நிலைகள் பெற்றாலும் அவை அனைத்தும் அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய அருள் ஒளியினுடைய நிலைகளை அனைவரும் பருக வேண்டும்.

அந்த அகஸ்தியன் உலகைச் சமப்படுத்தியது போல ஒளியின் தன்மையாக நமக்குள் இருக்கும் எண்ணங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சியின் நிலைகள் தாண்டவமாட வேண்டும்.
1.இந்த இச்சையின் சக்தியே
2.குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு எனக்குள் அது கிரியையாகி
3,என்னை இயக்கிச் சொல்லாக வெளிவருகின்றது.

நீங்கள் ஒவ்வொருவருமே துருவ நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் குருநாதர் ஆசையும் ஆகும். எமது அருளாசிகள்.