ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2018

சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது உற்றுக் கேட்கின்றோம். கேட்டதைப் பதிவும் செய்கின்றோம்.

ஆனாலும் கேட்பவர்களில் சிலர் “ஞானிகள் உணர்வுகளைச் சாமி அவ்வளவு நேரம் உபதேசித்தார். இங்கே இவர்களைப் பாருங்கள்…! எல்லாம் கேட்டுவிட்டு இப்படித் தவறு செய்கிறார்களே…!” என்று சாமி சொன்னதை விட்டு விடுகிறார்கள்.

சாமி சொன்னதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
1.மற்றவர்கள் குறைகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று
2.அந்த அடுத்தவரின் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம்.
3.இதைப் போன்ற நிலைகளை நாம் தவிர்த்தல் வேண்டும்.

குறைகளைக் காணும் போதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாங்கள் பெற வேண்டும்.
1.தெரிந்து தெளிந்து நடக்கும் ஆற்றலையும்
2.பிறருக்கு நன்மை செய்யும் உணர்வையும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை அறியாது நமக்குள் தீமை வந்து விட்டால்
1.நாம் தவறு செய்கிறோம் என்று (நமக்கே) தெரியும்
2.இருந்தாலும் நாம் எதற்குத் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்
3.அங்கிருந்து விலகிச் செல்கிறோமே செய்த தவறை தவிர நீக்குவதில்லை.

தனக்குத் தானே தவறின் தன்மை வந்தாலும் அதை நாம் உடனே நீக்கப் பழக வேண்டும். ஏனென்றால் நம்மை அறியாத இயக்கம் தான் அந்தக் குறைகள்.

நாம் நல்லதைச் செய்யும் போது தான் பிறர் குறைகளைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம்மை அறியாது அந்தக் குறைகளைச் செய்யும் உணர்வுகளைத் தூண்டுகிறது.

பாலிலே சுவை கொண்ட பாதாமையும் நறுமணம் கொண்ட பொருள்களைச் சேர்த்தாலும் சிறிது காரம் பட்டு விட்டால் அந்த சுவையின் தன்மையை மாற்றி காரத்தின் தன்மையே வருகிறது.

நல்ல சுவை கொண்ட உணவை உட்கொள்ளும் பொழுது உடலில் நல்ல அணுக்களை உருவாக்குகிறது. ஆனால் உணவிலே ஒரு துளி விஷம் சேர்ந்து விட்டால் உணவை நஞ்சாக மாற்றி நல்ல அணுக்களை அது அழித்து விடுகிறது.

இது போன்று தான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாமலே இயக்கக் கூடிய நிலைகள் தான் அது. அப்படி இயக்கினாலும் அது தவறென்று நமக்குள் உணர்த்தும்.

அந்த நேரத்திலாவது சுதாரித்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்களை அறியாது இயக்கும் தவறான இயக்கத்திலிருந்து நாங்கள் மீள வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என்றென்றும் எங்களுக்கு உறு துணையாக இருந்து
4.மெய் வழி காணும் நிலைகளை எங்களுக்குத் தர வேண்டும்.
5.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்ற
இதைப் போன்ற உணர்வை மட்டும் கொஞ்சம் எடுங்கள்.

உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும். குறைகளை அகற்றி நம் மனதைப் பரிசுத்தப்படுத்தும். அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.