ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2018

அம்மா அப்பாவை முதலில் உயர்த்த வேண்டும் – உயர்த்தினால் தான் மெய் ஞானத்தின் வழித் தொடரை நாம் பெற முடியும்

குடும்பத்தில் எல்லோரும் நல்லது செய்து கொண்டு வருவோம். சகோதர்களுக்குள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.

இருந்தாலும் சிறு பிழையாகி விட்டால்… “தொலைந்து போகிறவன்…” இந்தக் குடும்பத்தையே தொலைத்துவிட்டு எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டான் என்று எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஒருவருக்கொருவர் வேதனைபட்டு நம் வியாபாரம் எல்லாம் மந்தமாகும் கடைசியில் இது தீய வினைகளாக வளர்ந்து ஒருவருக்கொருவர் குறை கூறும் உணர்வுகளாக வந்து விடும்.

ஒரு ஜவுளி வியாபாரம் செய்தாலும் அல்லது வேறு கடை வைத்தாலும் நண்பர்களிடம் பேசினாலும் நன் குறையான உணர்வு வந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்

வரும் வாடிக்கையாளரிடம் நாம் சரக்கை எடுத்துக் கொடுத்தாலும் நம்மை வெறுப்பாகப் பார்க்க வைக்கும். நம் சரக்கையும் மட்டமாகக் காட்டும். அப்படியே வாங்கிச் சென்றாலும் கூடக் குறை கூற வைக்கும். நம் உணர்வு அவர்களுக்குள் சென்று அங்கே குறைகளைக் கூற வைக்கும்.

அப்போது அந்த வேதனைகளை என்ன செய்வது…? அதை யார் நிறுத்துவது…?

1.அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்
2.இவன் அயோக்கியத்தனம் செய்கிறான்
3.வீட்டில் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்று சொல்லி
4.கடைசியில் “எல்லோரையும் அயோக்கியர்கள்..” என்று சொல்ல ஆரம்பித்துவிடுவோம்.

இந்த உணர்வை யார் பேசுவது…? நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் காக்கும்.

அதை மாற்ற வேண்டும் அல்லவா. இந்த மாதிரிக் குறைகளை நீக்குவதற்குத்தான் அந்த ஞானிகள் அன்னை தந்தையரை ஒளிப்படுத்த வேண்டும் என்று சொல்வது.

அதாவது முதலில் அம்மா அப்பாவை உயர்த்த வேண்டும். எங்கள் அம்மா அப்பா மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் அவர் பார்ப்பதெல்லாம் நலமாக இருக்க வேண்டும்.

நம்மை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டி எத்தனையோ வேதனைகளை அனுபவித்த தாய் தந்தையரின் உயிராத்மாக்கள்
1.இருள் சூழ்ந்த நஞ்சின் தன்மையிலிருந்து மீண்டு
2.இன்னொரு (பிறவிக்கு) உடலுக்குள் செல்லாது மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று
3.மெய் ஒளி காணும் மெய்ச் சுடராக என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற்று அவர்கள் பிறவா நிலை பெறவேண்டும் என்று அனு தினமும் எண்ணுதல் வேண்டும்.

1.இப்படி நாம் பழகி நம் எண்ணத்தைக் கொண்டு போனால்
2.தாய் தந்தையர்கள் எப்படி நம்மைக் காப்பாற்றினார்களோ
3.அதே போல நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் உணர்வுகள்
4.அவர்கள் நமக்காக வேதனை பட்ட நஞ்சான உணர்வுகளை ஒளியாக மாற்றச் செய்யும்.

அப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் முதலில் உயர்ந்த நிலைகள் பெறுகின்றார்கள்.

அடுத்து இந்த வாழ்க்கையில்
1.அவர்களுடைய அருள் என்றென்றும் எங்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும்
2.அவர்கள் வாக்கு எங்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்.
3.அவர்கள் அருளாசியால் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சொல்வதெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று அப்படிக் கேட்டுப் பழக வேண்டும்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பை சுலபத்தில் நாம் பெறமுடியும். 

மகரிஷிகளின் அலைத் தொடர்பை நாம் பெற்றபின் நம் வாழ்க்கையில் எப்போது இடையூறு வந்தாலும் அதை எளிதில் அகற்ற முடியும்.