ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2018

வேதத்தையே மேலிருந்து கீழ்.. கீழிருந்து மேல்...! என்று சுருதி மாறாமல் பாடக்கூடிய சித்தர்

ஒரு முறை குருநாதர் ரிக் வேதத்தைத் தெளிவாகப் பாடிக் காண்பித்தார். பின் அதை அப்படியே திருப்பித் தலை கீழாகப் பாடிக் காண்பித்தார்.

வேதங்கள் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) ஒரு பிராமணர்தான்.

நானும் (ஞானகுரு) குருநாதர் எங்கள் வீட்டுக்கு எதிரில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரிக் வேதத்தைப் பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை “இங்கே வாடா…!” என்று தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் குருநாதர்.

எமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார் குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்…?” என்று கேட்டார்.

ரிக் வேத ஆசிரியர் முழித்தார்…!

“அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே…, அது எப்படி என்று எனக்குச் சொல்…” என்று கேட்டார் குருநாதர்.

பிறகு குருநாதரே அந்த மந்திரங்களைத் தலை கீழாகச் சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.

ரிக் வேத ஆசிரியரோ… “திரு…திரு…”வென்று முழித்தார்.

எமக்கு இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்… பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.

“இனி இது மாதிரித் தவறு செய்யாதே…!” என்று ரிக் வேத ஆசிரியரை அடித்து “போ…” என்று கூறி விட்டார். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று வேகமாகப் போய்விட்டார்.

பிறகு குருநாதர் எம்மிடம்… இவன் திருடன்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்…! என்று சொன்னார்.

மறு நாள் குருநாதரிடம் அடி வாங்கின ரிக் வேத ஆசிரியர் எம்மைத் தேடி வந்தார். குருநாதரைப் பற்றி எம்மிடம் சொல்லத் தொடங்கினார்.
1.இவர் மனிதரே இல்லை… ஒரு “ரிஷி பிண்டம்…!”
2.இந்த வேதத்தை யாரும் இப்படிச் சொல்லவே முடியாது
3.ஆனால் சொல் பிழையில்லாதபடி சரியான சுருதியுடன் சொல்கிறார்.

அவர் என்னை அடித்த அடியில் நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது. இனி பாடம் சொல்லித் தரும் வேலைக்கே செல்ல மாட்டேன்.

என்னுடைய ஊர் உடுப்பி. நான் என் ஊருக்குச் சென்று அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்.
1.உங்களுடைய அதிர்ஷ்டம்… நீங்கள் அவரை குருவாக பெற்றிருக்கிறீர்கள்.
2.நீங்கள் எனக்கு “ஆசீர்வாதம் செய்யுங்கள்…!” என்று கேட்டார்.

எனக்குச் சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார்.

யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய் வரச்சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.

1.உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ – அத்தனையையும்
2.எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின் கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக் கொண்டே
1.இந்த லைன் (LINE) அந்த லைன் என்பார்.
2.டேய்…! மிளகாய் ஒரு லட்சம்… காரம் கோடி…கோடி… என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக் கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது என்போம்.

அந்தக் கோடி இல்லைடா…! என்பார். “ஈகோடி…!” மிளகாய் கோடி… காரம் கோடி…” என்பார். இன்னும் என்னென்னவோ கோடி என்பார். அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார்…! ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து கலந்து “கோடி கோடி” உணர்வுகளாக மாறுகின்றது என்பதை விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாகப் பாயும் பொழுது அதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…? எப்படி மாறுகின்றது…? என்பதைச் சொல்லாகவும் உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்தார்.
1.முதலில் சொல்லிவிடுவார் (நான் புரியவில்லையே…! என்று எண்ணுவேன்)
2.பின்னர் அதை அப்படியே அனுபவபூர்வமாகப் புரிய வைப்பார்.

குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் அப்படியே பதிய வைக்கின்றோம்.
1.சந்தர்ப்பம் வரும் போது இதன் நினைவு உங்களிடம் வரும்.
2.அப்பொழுது இதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்
3.குருநாதரை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் யாம் பதிவு செய்த நிலைகள் அத்தனையும் உங்கள் நினைவுக்கு வரும்.