ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2018

குருநாதர் என்னை அருள் ஞானப் பாதையில் வளர்த்த முறை…!

இன்றைக்குப் பல எத்தனையோ ஆயிரம் பேர் என்னை (ஞானகுரு) எண்ணிக் கொண்டு வருகின்றீர்கள். சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. தலை வலிக்கின்றது. மேல் வலிக்கின்றது. இதையெல்லாம் பாய்ச்சுவீர்கள். இது உங்கள் உணர்வு.

1.என் உணர்வு உங்களிடம் இருக்கின்றதனால்
2.நீங்கள் எந்த வகையில் என்னை (ஞானகுரு) எண்ணி பதிவுப் செய்கின்றீர்களோ
3.அந்த உணர்வு தான் உங்களிடம் வருகின்றது.

சாமி (ஞானகுரு) தான் கஷ்டத்தை எல்லாம் தீர்க்க வேண்டும்…! என்று எண்ணிப் பதிவு செய்திருந்தீர்கள் என்றால்
1.அது தான் உங்கள் நினைவிற்கு வரும்.
2.அந்த நினைவுடனே என்னிடம் வருவீர்கள்.
3.இப்படி எண்ணினீர்கள் என்றால் “என்னிடமிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியாது…!”

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.சாமி…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிணீர்கள் என்றால்
3.என்னிடமிருந்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.
4.அது உங்களுக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளரும்.

என் கஷ்டமெல்லாம் நீங்கவில்லை…! ஒரே தலைவலியாக இருக்கின்றது…! இன்றைக்கு எனக்கு இப்படியே தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது…! என்று இப்படிச் சொன்னால் இதைத்தான் வளர்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

அதே சமயத்தில் என்னிடம் பேசும் போது இதே உணர்வை பதிவு செய்து விட்டீர்கள் என்றால் என்னை நீங்கள் எண்ணும்போதெல்லாம் இங்கே என் ஆன்மாவில் வந்து மோதும்.

இதை எல்லாம் தடுப்பதற்கு அந்த மகரிஷிகளின் உணர்வை எனக்குள் நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தேன் என்றால் உங்களை மாதிரி என்னையும் கீழே கொண்டு வந்துவிடும்.

ஆகவே அந்த உணர்வுகளை மாற்றி அமைப்பதற்கு அந்த இருபத்தி நான்கு மணி நேரமும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நிலைகள் எல்லாம் அதிகமாகிப் போனதென்றால் அதைக் கழிப்பதற்கு நான் படுகின்ற சிரமம் எனக்குத்தான் தெரியும்.

 குருநாதரிடம் கூட காட்டிற்குள்ளே போகும் போது இத்தனை சிரமம் எனக்குத் தெரியவில்லை.

முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்ட பின்
1.தீமையின் நிலைகளில் இருந்து விடுபடும் சந்தோஷம் வரும்.
2.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாகத் தெரியும்.
3.அப்புறம் சந்தோஷமாக இருக்கும்.
4.எவ்வளவு நேரம் வருத்தப்பட்டமோ அந்த அளவுக்குச் சந்தோஷத்தை உருவாக்கச் செய்யும்.

அப்படித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை வளர்த்தார். உங்களுக்கும் அப்படித்தான் கொடுத்துக் கொண்டுள்ளோம்.

அந்த அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் எடுத்தால் தீமை விளைவிக்கும் நிலைகளை இது அடக்கி உங்களைத் தூய்மைப்படுத்தும்.

உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கும் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
1.மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.நீங்கள் அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று எனக்குள் வளர்த்து
3.அதே நினைவு கொண்டு தான் எல்லா நேரமும் செயல்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் உங்களால் அந்தச் சந்தோசத்தை அனுபவிக்க(வித்திருக்க) முடியும்.