ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2018

தியானம் செய்வதன் நோக்கம் என்ன...?

விவசாயம் சமபந்தமான படிப்பைப் படித்தவர்கள் (AGRICULTURE) அவர்கள் கண்டுணர்ந்து உருவாக்கிய வீரிய வித்தை நம் கையிலே கொடுத்து அதிகமான பலன் கிடைக்கும். இதை விவசாயம் செய்யுங்கள் என்று கொடுப்பார்கள்.

அதைச் சீராக வளர்க்கும் நிலையாக எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்று எந்தெந்தக் காலத்தில் நீர் ஊற்றவேண்டும் எந்த சமயத்தில் உரமிட வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அவர்கள் காட்டிய சரியான வழியை நாம் கடைப்பிடித்தோம் என்றால் விதைத்ததில் நல்ல ராசியும் பலனும் கிடைக்கின்றது.

இதே போலத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் (ஞானகுரு) உலகம் சுற்றி ஆங்காங்கே பதிவான ஞானிகளின் உடலில் விளைய வைத்த ஞான வித்துக்களைப் பெருக்கிக் கொண்டோம்.

அந்த உணர்வின் வித்தை உங்களுக்குள் பல காலம் தொடர்ந்து பதியச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

1.பதிந்த ஞானிகளின் வித்துக்களுக்கு நீரை எக்காலத்தில் ஊற்றவேண்டும்…?
2.அதற்குச் சீரான உரங்கள் எவ்வாறு இடவேண்டும் என்று
3.காலத்தால் உங்களுக்குள் உபதேசித்திருந்தாலும்
4.அதை மறந்து வித்தை ஊன்றிய பின் பலனில்லையே… இன்று விளையவில்லையே…! என்று
5.இந்த எண்ணத்தை மட்டும் எடுத்து அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தைக் கொடுத்தார். அதை வளர்க்கும் முறையும் அவர் காட்டியிருந்தாலும் அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்ததைப் பெருக்கி அதைச் சீராக வளர்க்காமல் விட்டு விட்டீர்கள்…!

இந்த வித்தின் தன்மையை வளர்க்கும் நிலையை மறந்திருந்தோர் அனைவரும் மறந்ததை நீக்கி விட்டுத் தெளிந்திடுவோம் என்ற நிலைக்கு வாருங்கள்.

செடிக்கு எவ்வாறு நீரை ஊற்றி உரத்தைப் போட்டு அதற்குண்டான பக்குவ நிலையைக் கண்ணும் கருத்தாகச் செய்கின்றோமோ அதே போன்று
1.குருநாதர் கொடுத்த மெய் ஞான வித்தை
2.அந்த அருள் ஞானப் பயிரைச் சீராக நாம் வளர்க்க வேண்டும்.

அந்த அருள் ஞான வித்து வளரும் நினைவாற்றல் உங்களுக்குள் பெருகிட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உறு துணையாக இருக்கும்.

1.ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகள் அனைத்தும்
2.அருள் ஞானப் பயிரை வளர்க்கும் நீராகவும் உரமாகவும் அமைந்து
3.மெய் ஞான உணர்வுகளை விளையச் செய்து
4.அதன் பலனாக அருள் ஞானப் பசியைப் போக்குவோம்.

நம்மை அணுகி வருவோருடைய ஞானப் பசியையும் நாம் வளர்க்கும் அருள் ஞான சக்தியால் போக்குவோம் என்று உறுதி எடுப்போம்.