ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2018

பிறிதொரு ஆன்மா நம் உடலுக்குள் இருந்தாலும் அல்லது வந்தாலும் நாம் அதைப் புனிதப்படுத்திடல் வேண்டும் - நடந்த நிகழ்ச்சி

நாம் ஒரு நண்பர் கூடப் பழகுகின்றோம். எல்லாம் செய்கின்றோம். ஆனால் அதே சமயத்தில் அவர் திடீரென எதிர்பார்க்காமல் தன் குடும்பத்தில் வெறுப்படைந்து அதனால் தற்கொலை செய்து கொள்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவருக்குத் தன் வீட்டிலுள்ளோர் மீது வெறுப்பு, ஆனால் நண்பன் மீதோ அதிகமான பற்று.

எங்கள் வீட்டிலுள்ளோரின் தொல்லை தாங்காதபடி நான் மருந்து குடித்துச் சாகப் போகிறேன்டா நண்பா...! என்று சாகும்போது நினைத்தால் போதும்.

இந்த உணர்வின் தன்மை என்ன ஆகும்?

உங்கள் நண்பர் திடீரென்று மருந்து குடித்து இறந்துவிட்டார் என்று  காதில் கேட்டவுடன் “அடப் பாவமே...! ரொம்ப நல்லவன் ஆயிற்றே... எனக்கு எவ்வளவோ உதவிகள் எல்லாம் செய்தான்..! என்று இந்த மாதிரி எண்ணினோம் என்றால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இங்கே வந்தவுடன் அவன் எப்படித் தற்கொலை செய்தானோ அதே உணர்வு நமக்குள்ளும் வரும்.

இதே மாதிரி இங்கே ஒரு அம்மா என்னிடம் வந்தது. அவர்கள் உடலில் எப்போது பார்த்தாலும் அதே அவஸ்தை தான்.

உபதேசம் கொடுத்த பின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து எடுத்துக் குறைத்து கொண்டே வருகின்றார்கள். பின் சரியாகியது.

உடலுக்குள் வந்த அந்தத் தீய அணுக்களை மாற்ற வேண்டும். அதே சமயத்தில் உடலுக்குள் வந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அதையும் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

அப்பொழுது நாமும் பிறவியில்லா நிலை அடையலாம்.

அதைச் செய்யாமல் “பேயை ஓட்டுகிறேன்… அடக்குகிறேன்…” என்று  இதெல்லாம் இன்னொரு ஆவியின் தொடர் வைத்து அழைக்கலாம். பின் இந்த ஆவியும் சேர்த்து கொண்டு மந்திரவாதியின் கையில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டும்.

ஆகவே இதையெல்லாம் அடக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் கொண்டு வர வேண்டும்.

நண்பர்கள் என்று மாணவ மாணவிகள் பழகுகின்றார்கள். திடீரென எதிர்பாராமல் பரீட்சையில் தோல்வி அடைகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

“இப்படி ஆகிவிட்டதே” என்று அம்மா அப்பாவை எண்ணிப் பயமாகித் தற்கொலை செய்து கொள்கிறது.

இதைக் கேள்விப்பட்டதும் கூடப் பழகிய பெண் அடடா…! இறந்துவிட்டதே என்று பாசமாக எண்ணினால் இந்த உடலுக்குள் அந்த ஆன்மா வந்து இதுவும் பரீட்சைக்குப் போகாது.

நேற்று வரை பரீட்சைக்குப் போன இந்தப் பெண் இறந்த நண்பரின் ஆன்மா உள்ளே புகுந்த பின் இப்படி இயக்கிவிடுகின்றது.
ஒரு சமயம் டாக்டருக்காக அவரை நன்றாகப் படிக்க வைத்திருக்கின்றார்கள். படிக்கும் சமயம் செத்த உடலை அறுத்துப் படிப்பு சம்பந்தமாகக் கற்றுக் கொள்வார்கள்.

அதிலே ஒருவன் என்ன செய்து விட்டான்?

அவரைப் பயமுறுத்துவதற்காக வேண்டி தெரியாமல் செத்தவன் மாதிரிப் படுத்துக்கொண்டான். படுத்துக் கொண்டவுடனே உடலை கிழித்துப் பார்ப்பதற்கு வேண்டிப் பக்கத்தில் போயிருக்கின்றார்.

திடீரென அவன் “ஆ…!” என்று எழுந்தவுடனே டாக்டருக்குப் படித்த பையன் அதிர்ச்சியாகி அதிலிருந்து பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டான். எங்கேயும் போகவில்லை படிக்கவில்லை.

அப்புறம் என்னிடம் அழைத்து வந்தார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2.என் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் உடலில் உள்ள ஆன்மாவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெறவேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் அது புனிதமாக வேண்டும் என்று
4.திரும்பத் திரும்பத் தியானித்த பின் அவன் சீராக ஆனான்

மறுபடியும் டாக்டராகப் படிக்கும் நிலை வந்தது.

இதுவெல்லாம் பிறருடைய உணர்வுகள் (ஆன்மா) நமக்குள் எப்படி வந்து சேர்கின்றது? அது நாம் எங்கே போகின்றோம்? தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக நமக்குள் பிறிதொரு ஆன்மா இருந்தாலும் அது இயக்கத்துக்கு வரக் கூடாது. அதற்கு வேண்டிய பக்குவத்தை நாம் இப்போதே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பகைமையாகிச் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதிகமாகி விட்டால் சாபமும் இடுவார்கள்.

அடப் பாவமே…! சும்மா இருக்கின்றவனை இப்படியெல்லாம் “நாசமாக வேண்டும் என்று தாக்கிப் பேசுகின்றானே…” என்ற இந்த உணர்வை நுகர்ந்தோமென்றால்
1.”கெட்டுப் போக வேண்டும்” என்று அவன் எப்படிச் சொன்னானோ
2.அந்த உணர்வுகள் நம் உயிர் நுகர்ந்தறிந்து நமக்குள் அணுவாக மாற்றிவிடும்.

இது எல்லாம் தீய வினைகள் சாப வினைகள். அப்போது நாம் அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்திக்கு நினைவிக்குக் கொண்டு வந்து அதைப் போன்ற வினைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இது தான் விநாயகர் சதுர்த்தி.