ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2018

“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இது”


கட்சி நடத்துவோரும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி அரசாங்கத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கட்சியின் அடிப்படையில் அரசாங்கத்தை நடத்தக் கூடாது.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்போர்கள் அரசு எனக்குச் சொந்தம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் மக்களுக்குச் சேவை செய்யத்தான் அங்கே இருக்கின்றீர்கள். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.
1.“பணம் இல்லாது அரசு சேவை செய்யவில்லை…!”
2.நியாயம் எங்கே இருக்கின்றதோ அந்த நியாயப்படி நீங்கள் செய்து பழகுங்கள்.
3.காசு (இலஞ்சம்) வாங்கிச் செய்யப்படும் பொழுது தவறுகள் தான் அதிகமாகின்றது.
4.தானும் கெட்ட பேர் வாங்குகின்றோம்.
5.நம் குடும்பத்தையும் நாம் காக்கத் தவறுகின்றோம்.
6.இதை வழி நடத்தும் அரசாங்க நிர்வாகிகளுக்கும் கெட்ட பேர் வருகின்றது
7.எந்தக் கட்சி வழி நடத்திச் செல்கின்றதோ அவர்களுக்கும் இந்தக் கெட்ட பேர் செல்கின்றது.
6.இந்த அரசாங்கத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்ற கேள்வி வருகின்றது.

“பணத்திற்காக வேண்டித்தான்” உத்தியோகம் பார்க்கின்றார்களே தவிர இன்று பெரும் பகுதி அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அனைவரும் மக்களைக் காக்க அல்ல.

ஆகவே கட்சியில் உள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்கானிக்க வேண்டும்.

தொண்டர்கள் என்றால் எல்லாக் கட்சியிலும் உள்ள தொண்டர்களும் தான். எங்கே தவறு நடக்கின்றதோ உடனே அரசாங்கத்தில் உள்ள மேலதிகாரிகளிடம் “எடுத்துச் சொல்லுங்கள்…!”

அதைக் கேட்கவில்லை… என்றால் நியாயம் வழங்க வேண்டும்…! என்று “மௌனம் சாதியுங்கள்…” அதற்காக வேண்டி அரசாங்கப் பொருள்களைச் சேதப்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் அது எல்லாம் நம் (மக்கள்) பணம்.

காந்திஜி வழி காட்டியபடி நாம் எல்லாம் ஒரு குடும்பம். இந்த அரசியல் வாழ்க்கையில் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்ற நிலையில் வராதீர்கள்.

ஒருவர் ஒருவர் சாடிப் பேசும் நிலைகளிலிருந்து நீக்க வேண்டும் என்றால் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் தான் அதை எடுத்துரைக்க முடியும்.

அதே சமயத்தில் கற்றுணர்ந்த மேலதிகாரிகளாக உள்ள படித்த வர்க்கத்தினரும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கப்படும் பொழுது தவறுகளைக் கண்டால் “இதனைத் தவறு…!” என்ற நிலைகளில் எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அரசாங்க நிலைகளில் தவறு செய்யாத நிலைகளுக்கு வர வேண்டும். உங்களுக்குச் சம்பளம் உண்டு.

1.அப்படியே… தவறு செய்ய ஒருவர் தூண்டினாலும்
2.இந்தத் தவறை “நான் செய்ய மாட்டேன்…” என்ற ஒரு மூன்று நாளைக்காவது விரதம் இருங்கள்.
3.தவறு செய்யச் சொல்வோரும் “விலகிச் செல்வார்…!”

அரசாங்கத் துறையில் உள்ள அதிகம் படித்தோரும் விஞ்ஞான அறிவைக் கற்றுணர்ந்தோரும் மக்களுக்குச் சேவை செய்யும் இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர வேண்டும்.

காந்திஜியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும். சாந்தமும் ஞானமும் விவேகமும் கிடைக்கும்.

மெய் ஞானிகள் நமக்குக் காட்டிய அந்த அருள் ஞானத்தைப் (நல்ல வழிகளை) போதித்து நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

உலகில் நடக்கும் கொடூரமான தவறுகளிலிருந்தும் விஞ்ஞானத்தால் விளைந்த விஷத் தன்மைகளிலிருந்தும் மீட்டிடும் வல்லமை இங்கே உண்டு.
1.”தவப்புதல்வர்கள்…” பிறந்த நாடு இது.
2.”கடும் ஞானிகள்” பிறந்த நாடு.
3.இந்த உலகிற்கே வானுலக ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டிய நாடு இது

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலையில் அந்த அகஸ்தியன் தனக்குள் அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளான்.

தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். இந்த நாட்டில் தோன்றியவன் தான்.

அவன் அருளைப் பெற்றால் நம்மைச் சீராக்கலாம். நாட்டைச் சீராக்கலாம் இந்த உலகையும் சீராக்க முடியும்.