ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2018

“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” கொடுத்தார் குருநாதர்…!


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைப் பெறச் செய்தர்.

விஷத்தன்மை கொண்ட பாம்பினங்கள் அது விஷத்தால் தன் உடலை வளர்த்தாலும் அது உடலை விட்டுச் சென்ற பின் மடிந்த அந்த உடலிலிருந்த விஷத்தின் அணுத் தன்மைகள் அங்கே படர்கின்றது

அது சில கலவைகளாகி தாவர இனங்களில் மோதப்பட்டு புதுவிதமான செடியாக உருவாகின்றது.

அந்தச் செடியின் விழுதைக் காட்டினால் அதை நுகரும் விஷம் கொண்ட பாம்பினங்களும் விஷத்தால் இயக்கும் மற்ற உயிரினங்களும் ஒடுங்குகிறது என்பதனைக் காட்டிற்குள் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.உயிரணுக்களின் வளர்ச்சியில் உடல்கள் உருவாகி
2.இந்த உடலில் பெற்ற உணர்வுகள் மற்ற தாவர இனத்துடன் கலந்து
3.அந்த (உடல்களில் உள்ள) இரத்தத்தைக் கவர்ந்து கொண்ட பின்
4.அந்தத் தாவர இனங்கள் (மணம், விழுது) என்ன செய்கின்றது?
5.விஷத்தின் தன்மை பெருகிய பின் அந்த விஷத்தின் தன்மையால் என்ன செய்கிறது..?
7.இயற்கை எப்படி மாறுகின்றது…
8.எந்தெந்த இயக்க வடிவில் அது வருகின்றது..? என்று
9.காட்டுக்குள் அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டினார்.

இப்படி உருவான தாவர இனங்கள் அக் காலங்களில் ஏராளம் ஏராளம் என்று காட்டி இதன் அறிவாக நீ தெளிந்து கொள் என்றார் குருநாதர்.

இன்று கேன்சர் என்ற விஷத்தன்மையை அடக்குவதற்கு விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளைக் கையாளுகின்றனர். ஆனால் அது முடியவில்லை.

TB நோய் வரும்போது அணுக்களின் தன்மைகளில் கிருமிப் போர் என்ற நிலைகளில் இதைக்காட்டிலும் வல்லமை கொண்ட உணர்வை ஒரு உடலில் உருவாக்குகின்றார்கள். அதாவது
1.TB நோயை உருவாக்கும் அணுக்கள்
2.உடலிலுள்ள எலும்பையும் மற்ற உறுப்புகளையும் அது கரைத்துக் கொன்று புசித்தால்
3.அதற்கு மாறான அவைகளைக் கொன்று புசிக்கும் அணுக்களைப் பெருக்கி
4.அந்த TB அணுக்களைக் கொன்று மனிதனைக் காக்கின்றார்கள்

இப்படிக் காத்து மனிதனை நோயிலிருந்து மீட்டினாலும் இவர்கள் கொடுக்கும் மருந்தால் இன்னொரு விஷத்தன்மையான அணுக்களை வளர்க்கும் பொழுது விஷத்தன்மை கொண்ட சிந்தனைகள் மனிதனின் நினைவில் வருகின்றது.

விஷமான இந்த நினைவுடன் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும்
1.அந்த உடலைக் கரைத்திடும் நிலையும்
2.விஷத்தை உருவாக்கும் தன்மை கொண்டும்
3.மனிதனுக்குள் அது மனிதனாகச் சென்றாலும்
4.மனிதனாகப் பிறக்க முடியாத நிலை ஆகின்றது.

அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா வெளிச் சென்றால் மீண்டும் விஷத்தைப் பெருக்கி விஷத்தால் ஜீரணிக்கும் சக்தி கொண்ட உடலாக மனிதனல்லாத விஷப் பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ தான் பிறக்க நேரும் என்று காட்டுக்குள் வைத்துக் காட்டுகின்றர் குருநாதர்.

இயற்கையின் உண்மை நிலைகள் என்ன..? இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்று அறிவதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த நிலைகளைக் காட்டினார் குருநாதர்.

எந்தெந்த இடங்களில் அதிகமாக அகஸ்தியனின் உணர்வுகள் உந்தப் பட்டதோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றார். இந்த உண்மையின் உணர்வுகளை அறியச் செய்தார்.

இதை அறிந்து கொண்ட பின் எனக்குள் வளர்ந்தால் மட்டும் போதுமா…? நீங்களும் அதைப் பெற வேண்டும் அல்லவா…!

அந்த அகஸ்தியன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளை உலக மக்கள் அனைவரும் பெறச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் உனக்கு இதையெல்லாம் கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.

ஆனால் நீ சுயநலமாக
1.நான் வளர்த்துக் கொண்டேன்… நான் பெரிய மகான்…!
2.நான் அதைச் செய்வேன்… நான் இதைச் செய்வேன்.. என்று உனது பெருமையைச் சாற்றினால்,
3.அதனால் உனக்குச் சிறுமையே வரும்…!

இதனை நீ கற்றுணர்ந்த பின் “நான் இதையெல்லாம் அறிந்தேன்” என்ற அகம் எப்போது உனக்கு தோன்றுகிறதோ அப்போதே உண்மையை அறியும் தன்மையை நீ இழக்கின்றாய் என்றார் குருநாதர்.

ஆகவே இதனை நீ எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு நீ வெளிப்படுத்தப் போகின்றாய்…?

கடுமையான நிலைகளில் உன்னை எதிர்த்துத் தாக்கும் உணர்வுடைய உலகில் நீ வாழ்கின்றாய். இதனின்று மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி வினாக்களைப் போட்டு அவர் கண்டுணர்ந்த உண்மையின் தன்மைகளை உணர்த்தினார். ஆகவே
1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி
2.அவர்களை உயர்த்தும்படி நீ இதைச் செய்தால்
3.நீ உயர்கின்றாய்… அவர்களையும் உயர்த்துகின்றாய்…!
4.உயர்ந்த நிலையை நீயும் நுகருகின்றாய்… அவர்களும் உயர்கின்றனர்.
5.ஒருவர் உயர வேண்டும் என்ற உணர்வை எப்போது நீ உணர்த்துகின்றாயோ…
6.அவர்கள் பெற வேண்டும் என்று எதை நீ ஆசைப்படுகின்றாயோ…
7.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ… அதை உருவாக்குகின்றாயோ…
8.அது உருவான உணர்வின் தன்மை உன்னை வலுவாக்கவும்
9.உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களைப் பாதுகாக்கும் நிலையாகவும் இது வருகிறது.

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.