ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2018

ஈரக்கொலை எரிச்சலை நீக்கும் வழி


மிளகாயைக் எடுத்து நீங்கள் அரைத்துப் பார்க்கின்றீர்கள். கையில் எடுத்து அரைத்த பிற்பாடு பார்த்தோமென்றால் கையெல்லாம் “மத..மத..மத..” என்று இருக்கின்றது.

சிலர் ஈரக்கொலை எரிச்சலாகின்றது…! ஈரக்கொலை எரிச்சலாகின்றது…! என்பார்கள். “என்னால் தாங்கவே முடியவில்லை…” என்பார்கள்.

உடலில் உருவான அணு அதனுடைய மலத்தைப் பாய்ச்சியவுடனே எரிச்சலை உள்ளுக்குள் கொண்டு வருகின்றது. எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் அது விடாது.

எதனால் இப்படி வருகின்றது…?

பிறரைப் பற்றிக் கோபமாக எண்ணும் உணர்வுகள் “அவன் என்னைக் கோபித்துப் பேசிவிட்டான்… கடுமையாகத் திட்டி விட்டான்…” என்ற
1.கோப உணர்ச்சிகள் அதிகமாகி விட்டால்
2.சுவாசிக்கும் நுரையீரலில் அந்த ஆக்ரோஷமான நிலையில்
3.அணுக்கள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

அப்போது அந்த உறுப்பைச் சீராக இயக்கவில்லை என்றால் கடுமையான எரிச்சல் வந்து விடுகின்றது. ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எடுத்தாலும் என்னால் அது முடியவில்லை… இது முடியவில்லை… என்பார்கள். உடல் உறுப்புகளில் சில முக்கிய பாகங்களில் அந்த உணர்வின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த உறுப்பைச் சீராக இயக்கவிடுவதில்லை.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் இரத்தத்தின் வழி போகும் பொழுது எந்தெந்த உறுப்புகளில் அது கருவாகி அணுத் தன்மையாக வெடிக்கின்றதோ அதனுடைய மலம் உடலாக்கப்படும் போது சிவலோகமாகின்றது.

ஆனால் மற்றவர்களை எண்ணப்படும் பொழுது “இப்படிப் பேசுகின்றார்களே…” என்ற அந்த வேதனையான உணர்வுகளை வளர்த்து விட்டால் உடலுக்குள் எமலோகமே உருவாகத் தொடங்கி விடுகின்றது, மனித ரூபத்தில் எமலோகம் உருவாகின்றது.

இந்த உடல் சிவமாகின்றது. சிவலோகத்தில் நரக வேதனைப்படும் எமலோகமாக மாறுகின்றது. தண்டனை உள்ளுக்குள் வந்து விடுகிறது.

இதைத் தான் சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் “எமன் தண்டனை கொடுக்கின்றான்…!” என்று சொல்வது.
1.அந்தக் கோபமான உணர்வுகளின் எண்ணங்களை
2.தொடர்ந்து பாசக் கயிறாக நாம் வளர்த்தோமென்றால்
3.நம்முடைய அந்த எண்ணமே நமக்கு எமனாகின்றது…! என்பதனை
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

எமன் எதன் மேல் வருகின்றான்…? எருமை மீது வருகின்றான். எருமைக்குச் சிந்தனை உண்டோ…? ஒருவன் தவறு செய்கிறான். அவனை அறியாமல் அதைச் செய்து விட்டான் என்று நமக்குச் சிந்திக்கத் தோன்றுகிறதா…?

ஒரு விதை முளைத்து வரும் போது அந்த நுனியை முளையைக் கிள்ளிவிட்டோம் என்றால் அதன் வளர்ச்சி குறைந்து கொண்டே வரும். அதற்குண்டான சத்தைச் சரியாக எடுக்க முடியாது.

அதே போலத்தான் கோபித்தவனின் உணர்வுளைப் பார்த்தவுடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் நல்ல குணங்களை நாம் இயக்க முடியவில்லை.

அடுத்த நிமிடமே நாம் என்ன செய்ய வேண்டும்…? “ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நேரடியாக அங்கே செலுத்த வேண்டும்.

ஈரக்கொலை என்னும் எரிச்சலை அது தணித்து நம் நுரையீரலைச் சீராக இயக்கச் செய்யும். சுவாசம் சீராகும். மனம் அமைதி பெறும். உடல் நலம் பெறுவோம்.