ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2018

சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியுமா…? திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?


வீட்டிற்குள் பார்த்தால்
1.”நான் சொன்னதைக் கேட்கவில்லை…” என்ற நிலையில்
2.ஒவ்வொருவருக்கும் கோபம் இருக்கும்.
3.அதனால் அடிக்கடி சண்டை வரும்.

இந்த உணர்வெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

ஆனால் அவரவர்கள் உணர்வுதான் அவரவர்களை இயக்கும். நீங்கள் மெய்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரிடமும் அழுத்தமாகச் சொல்லாதீர்கள்….!

ஏனென்றால் “சொல்லால் சொல்லி… யாரையும் திருத்த முடியாது…!

நீங்கள் சொல்கின்ற வரையிலும் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். பின் “இவருக்கு என்ன தெரியும்…?” என்ற இந்த உணர்வின் தன்மை தான் அங்கே வரும்.

மெய் ஞானிகளைப் பற்றிய உபதேசத்தின் உணர்வுகளைப் பெருக்கித் தன்னிச்சையாக அதைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டினால் அது அவருக்குள் பதிவாகும்.

அந்த ஆர்வத்தின் தன்மைகள் வரும் பொழுது உண்மையின் இயக்கத்தை ஒரு முறைக்கு நான்கு முறை சொன்னால் அது அவருக்குள் இயக்கமாகின்றது.

தவறு தவறு என்று ஒருவரைச் சொன்னால் அந்த தவறின் நிலைகள் நமக்குள் வந்து நம்மையும் அதே தவறு செய்யும் நிலைக்கே கொண்டு செல்கின்றது.

அதாவது திட்டுகிறவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்கும் திட்டத் தோன்றுகின்றது. இல்லையா…!

ஏனென்றால் அப்போது நம்மை அறியாமலே அது வருகின்றது.

இதே போல் தான் அருள் ஞானத்தை யாருக்கும் துணிந்து சொல்லலாம். அவர்கள் கேட்கக் கேட்கச் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் இது அவர்களுக்குள் வளரும்.

அந்த நேரத்தில் அருள் ஞானத்தை போதிக்கத் தவறக்கூடாது. சிறிது நேரம் அவர்கள் கேட்கும் போது ஞான வித்தை விதைத்து விடுகின்றோம். அது வளர்ந்தால்
1.சிக்கலான நிலைகள் வரும் பொழுது
2.இதை எடுத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நல்ல சிந்தனைகள் தோன்றும்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் இக்கட்டான நிலைகள் வரும் போது என்ன செய்கின்றோம்..? பார்த்தவுடனே பதட்டமாகிச் சோர்வடைந்து விடுகின்றோம்…? அதை மாற்றிப் பழக வேண்டும் அல்லவா…!

உதாரணமாக எலி பூனையைக் கண்டால் என்ன செய்கின்றது…? பயந்து ஓடுகின்றது. ஓடுவதற்கு வேறு வழி இல்லை என்றால் பூனையை எதிர்த்து விடுகிறது. எதிர்த்து விட்டது என்றால் பூனை பயப்படுகின்றது.
1.எலி ஓடுகிற வரையிலும் பூனை விரட்டுகிறது.
2.எலி எதிர்த்துத் திரும்பி வந்தால் பூனை நின்று விடுகின்றது.

ஒரு சமயம் நான் ஒரு பூனை பெருக்கானைத் துரத்திக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது எதிர்த்துத் திரும்பியவுடன் புஸ்..புஸ்.. என்று பூனை ஓடுகின்றது.

அது வந்தவுடனே லபக்கென்று காலைப் பிடித்ததோ இல்லையோ தப்பித்துப் போன பூனை அப்பறம் இந்த எலியைத் திரும்பப் பிடிக்க வரமாட்டேன் என்கிறது.

அதே மாதிரி நாய்களை வைத்து இரவில் ரோட்டில் கொண்டு வந்து பூனைகளைப் பிடிப்பார்கள். வாசனையை வைத்து லபக்கென்று அப்படியே பிடிக்கும்.

ஒரு சந்தர்ப்பம் இரண்டு மூன்று நாய்களை வைத்துக் கொண்டு இந்த மாதிரிச் செய்கிறார்கள்.

எல்லாம் ஓடிப்போனாலும் ஒரு பூனை எதிர்த்து வந்து டபார் என்று ஒரு நாயைக் கண்ணிலே கடித்ததோ இல்லயோ “வால்…வால்…” என்று கத்திக் கொண்டு நாய் ஒடத் தொடங்கியது.

ஒரு நாய் நிற்க வேண்டுமே…! எல்லாம் ஓடிப் போனது. அடுத்து ஒரு நாய் கூட வரமாட்டேன் என்கிறது. அப்படியே உட்கார்ந்து கொள்கிறது. இது நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் இதெல்லாம் சந்தர்ப்பத்தில் குருநாதர் இதைப் பார்க்கச் செய்தார். காடு மேடு எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்து உண்மையின் இயக்கத்தை அறியச் செய்தார்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி அந்த வலுவைக் கூட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த உணர்வே நல்வழி காட்டும். மன வலிமை கொடுக்கும்.

பிறிதொரு உணர்வு நம்மை இயக்கமால் தடுத்துக் கொள்ள உதவும். கொஞ்ச நாள் பழக்கம் செய்து வீட்டீர்கள் என்றால் பிறருடைய வேதனைகள் நம்மை வந்து பாதிக்காது.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.