ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2018

சொத்துக்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயையே இன்று உதைக்கின்றார்கள்…! – தாயை இம்சித்தோம் என்றால் மனிதனாகப் பிறக்கும் தகுதியையே இழந்துவிடுவோம்


இன்றைக்குத் தாயை உதறி விட்டு உதைக்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கின்றார்கள். பெரும்பகுதி தாய்மார்கள் படுகின்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.

பெண் குழந்தையாக இருந்தாலும் சரி… ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி…!

சொத்தைக் கொடுக்கவில்லை என்றால் நீ நாசமாகப்போ…! என்று தன் தாயைப் பிடித்து இழுத்துப் போட்டு உதைக்கின்ற தாயையும் (மகள்கள்) நான் பார்த்திருக்கிறேன்.

ஆண் வாரிசு இல்லை. அவளுக்கு மட்டும் கொடுக்கின்றாய்...! எனக்கும் கொடு…. என் வீட்டுக்காரர் கேட்கின்றார்,

எனக்குக் கொடுக்கின்றாயா இல்லையா…? என்று சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டு… உனக்குச் சோறும் இல்லை… தண்ணீரும் இல்லை… நீ போ ரோட்டிலே…! என்று சொல்கின்ற தாய்மார்கள் நிறைய இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்த பின் தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் குருநாதர் என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லி அனுபவபூர்வமாகக் காட்டினார்…

1.அவர்கள் தவறு செய்யவில்லை…!
2.நுகர்ந்த உணர்வும் சந்தர்ப்பமும் அவர்களை எப்படிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்பதற்கு என்ன வழி…?
4.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்ற வினா எழுப்பினார் குருநாதர்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள். அவர்கள் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக ஒளியாக இருக்கின்றார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறுவதற்கு மாறாக
2.இந்த உடலின் இச்சைக்காக வேண்டி வாழ்ந்து
3.இருள் சூழச் செய்யும் நிலைகளில் சிக்குண்டு
4.அதிலிருந்து மீள முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதை நீ மக்களுக்கு “எடுத்துச் சொல்…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. அந்த உடலை நீ கோவிலாக மதி. அவன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீ உன்னுடைய பயணத்தைத் தொடர் என்றார் குருநாதர்.

அவர் இட்ட கட்டளைப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த மகரிஷிகளை எண்ணிப் பாருங்கள். தீமையிலிருந்து விடுபட முடியும்.  உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொண்டால் அது உங்களுக்குள் உண்மையின் உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும்.
1.பகைமை உணர்விலிருந்து உங்களை மீட்கும்.
2.மெய் ஒளி பெறும் அந்த மார்க்கத்தைக் காட்டும்.
3.உங்கள் பார்வையில் பல பிணிகளைப் போக்கும் அந்த அருள் சக்தியை ஊட்டும்.

அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு தெளிவாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

“இது நல்லது… இது கெட்டது…” என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கின்ற முதல் குரு தாய் தான். ஆகவே அம்மா அப்பாவைக் கடவுளாக எண்ணி தெய்வமாக மதித்து நடங்கள்.

அந்தத் தாய் சொன்னபடி மதித்து நடந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் “என்றைக்குமே… தலை சிறந்த நிலை பெறுவீர்கள்….!”