ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2018

மனிதன் பெற வேண்டிய பொக்கிஷம் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டுள்ளது…!


ஒரு இடத்தில் சாக்கடையாக இருக்கிறது என்று நாம் பார்க்கின்றோம். அப்பொழுது ஒருவர் அந்தப் பக்கமாகப் போகின்றார் என்றால் அதை அவரிடம் நாம் தெரியப்படுத்துகின்றோம். எதற்காக…?

அவர் சாக்கடையில் விழுகாமல் இருப்பதற்காக அதைச் சொல்கிறோம்.

அதே மாதிரி நீருக்குள் ஒருவன் குளிக்கப் போகின்றான். அந்த இடத்தில் “மடு” இருக்கின்றது நீ விழுந்து விடுவாய் என்று சொல்லத் தயங்கக் கூடாது.

இல்லாமல் போனாலும் அவன் விழுகின்றான் என்றால் அவனைக் கட்டாயப்படுத்தி இழுத்துப் போட்டுக் காக்கின்றோம்.

சொன்னோம்.., கேட்க மாட்டேன் என்கிறானே…! என்று விட்டு விட்டுச் செல்ல மனது வருகின்றதா…! என்றால் இல்லை. அதே போல
1.நாம் பெற்றுக் கொண்டிருக்கும் மெய் ஞானத்தை
2.மற்றவர்களையும் பெறச் செய்து
3.அவர்களையும் அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்று நிலைக்கு வர வேண்டும்.

ஆனால் ஒரு அகராதி பிடித்தவனாக இருந்தால் சொல்லக் கூடாது. அவன் உணர்வு நமக்குள் வந்தால் நம் நல்லதையும் மாற்றிவிடும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…!

அதே சமயத்தில் நம் வீட்டிலே மற்றதுகளிலோ சில சந்தர்ப்பங்களில் குறைபாடுகள் வந்துவிடும். “சொன்னதையே…” திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்துப் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல் நமக்குள் இயங்கிவிடாமல் முதலில் தடுத்துப் பழக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவராகவே மாற்றுகின்றது.

1.“சொல்லிப் பார்த்தேன்… கேட்கவில்லை…! என்ற வேகத்தில்
2.நாம் அதைக் காட்டிலும் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

அடுத்து வெறுப்பு வேதனை என்ற வகையில் வளரப்படும் பொழுது தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியாது போகின்றது. நல்ல ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க முடியாது போகின்றது.

“என்ன வாழ்க்கை…” போ..! என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்வோராகவே மாற்றுகின்றது, இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. மனிதனான பின் தனுசு கோடி. எண்ணத்தால் உருபெற்றோம் என்பது இராமேஸ்வரம்.
1.அங்கே இருபத்தியேழு கிணறுகள் உண்டு.
2.கோடித் தீர்த்தம் என்று உண்டு.
3.இரருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை ஒன்றாகச் சேர்த்து
4.பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

மனிதன் பெற வேண்டிய “பொக்கிஷம்…! அத்தனையும் அங்கே இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டுள்ளது,

துருவ நட்சத்திரத்தை நேரடியாகப் பார்த்து அந்த ஆற்றலை ஒவ்வொரு மனிதரும் பெற்று அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக ஆக வேண்டும் என்பதே இராமேஸ்வரத்தின் தத்துவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற தியானிப்போம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பார்க்கும் அனைவரும் பெற தவமிருப்போம்.