ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2018

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்க வேண்டிய முறை


தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்தால் தண்ணீர் அந்த நிறத்தின் தன்மையாக முழுமையாக இருக்கிறது. அதற்குள் சிறிதளவு (நல்ல) தண்ணீரை மீண்டும் ஊற்றும் போது அதே நிறமாகத் தான் தெரிகிறது.

ஆனால் அதிகமாக நல்ல நீரை ஊற்ற ஊற்ற அந்த நிறம் மாறுகிறது.

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே இந்த நன்னீரை விட விட அழுக்கு தண்ணீர் பொங்கி வெளியே வருகிறது. நல்ல நீர் சேரச் சேர,,, சேர… அழுக்கின் தன்மை குறைந்து முழுவதும் நல்ல நீராக வருகின்றது.

இதைப் போலத் தான் நுகர்ந்தது (சுவாசிப்பது) உயிரிலே படும் போது உணர்வாகின்றது. உடலுக்குள் செல்லும் போது உடலில் உள்ள எதிர் அணுக்கள் அதை மாற்றப்படும் போது அது எப்படி ஆகிறது…?

ஏனென்றால் அதனுடைய வலு அது.

அதைக் குறைக்க வலுவான உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும் போது அது எப்படி அடங்குகின்றது…?
1.சுவாசித்ததை முதலில் எதிர்க்கிறது.
2.ஆனால் அதைக் காட்டிலும் வலிமையானதை அதிகமாக்கி விட்டால் குறைகிறது.

“சொல்வது புரியவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உன்னுடைய உடலில் எப்படி உரு மாறுகிறது என்பதனை அனுபவ ரீதியாகக் கொடுத்தார்.

நாம் நல்லவர்களாக இருப்பினும் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த குறையான உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்றால் நமக்குள் பொங்க வேண்டியது எது…?
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பொங்கச் செய்து (அதிகமான அளவில் கூட்டி)
2.நமக்குள் வந்த இருளைத் தணியச் செய்ய வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வின் அறிவைக் கூட்ட வேண்டும்

அப்பொழுது வெகு தொலைவிலிருந்து வரும் இருள்களையும் அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கிறது.

வெகு தொலைவில் வரும் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வினை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
1.அந்தத் துருவ தியான நேரத்தில்
2..பொங்கும் மங்கல உணர்வின் தன்மையை நினைவு படுத்தி
3..நீங்கள் எங்கே இருந்தாலும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிரார்த்தனை செய்து கொண்டேயிருக்கின்றேன்

அந்த நேரத்தில் நீங்களும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று சிறிது எண்ணினாலும் அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் நிலைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக உருவாக்கும் போது கல்கி.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.