ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2018

விநாயகருக்கு வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் போட்டு எலியை முன்னாடி வைத்துள்ளார்கள் ஞானிகள் – ஏன்…?


சாணத்தை எடுத்து நம் வீட்டில் மெழுகுகின்றோம். நல்லதற்குத் தான்…! ஆனால் அடுத்து கை கழுவாமல் சாப்பிடுகின்றோமா…?

எந்த வேலை செய்தாலும் எது இருந்தாலும் இரண்டாவது தரம் சுத்தப்படுத்தி விட்டுத் தான் எதையும் சாப்பிடுகின்றோம். சுத்தப்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம் இல்லையா…!

1.கசந்த நிலைகள் நம் வாழ்க்கையில் வரும் போது…
2.கசந்த வாழ்க்கையாக நமக்குள் அது வளர்ந்து விடக் கூடாது.
அதற்காகத் தான் விநாயகருக்கு அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துக் காட்டினார்கள்.

தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் அரசைப் போன்று இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கசந்த நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வைத்து அந்தத் தத்துவத்தை சாதாரண மனிதனும் புரிந்து எடுத்து கொள்வதற்கு இவ்வளவு அழகாக கொடுத்திருக்கின்றார்கள்.

இதில் ஏதாவது அந்த ஞானிகள் காட்டியது தவறு இருக்கின்றதா…? ஆனால் நாம் விநாயகனைப் பார்த்து அப்படி எண்ணுகின்றோமா…! என்ன செய்கின்றோம்?

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துக் கல்யாணத்தைச் செய்து வைத்தோம் என்றால் வீட்டில் கல்யாண காரியங்கள் கூடும். “நம்மைத் தேடி வந்து அவன் செய்து கொடுப்பான்…!” என்று இப்படித் தான் நமக்குச் சொல்லிப் புத்தியை ஊட்டியிருக்கின்றார்கள். ஞானிகள் சொன்னதை நமக்கு ஊட்டவில்லை.

விநாயகருக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு பாம்பைப் பிணைத்து வைத்திருக்கின்றார்கள். ஏன்…?

1.ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் நாம் அதை நுகரும் பொழுது
2.விஷத்தோடு விஷம் பின்னிப் பிணைந்து நம்மையும் வேதனைப்படச் செய்து
3.அதனுடைய வலு கூடிவிடுகின்றது என்று காட்டுவதற்காக
4.அவ்வாறு வைத்திருக்கின்றார்கள். அதை யாராவது பார்க்கின்றோமா…?

அந்த இரண்டு பாம்பையும் சுற்றி வந்து மாலையைப் போட்டு விட்டு வந்துவிடுகின்றார்கள். அடுத்து என்ன செய்கின்றார்கள்…?

என் விநாயகனையே நீ தூக்கி நடந்தாய் அப்பா…! என்று எலிக்குக் கொண்டு போய் அபிஷேகத்தைச் செய்கிறார்கள். நீ விநாயகரிடம் போய்ச் சொல்லு. விநாயகரைத் தூக்கிச் சுமந்தவன் என்பதால் எலிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

நம் பக்தி எந்த வழியில் இருக்கின்றது…? அந்த எலியினுடைய தத்துவம் என்ன? எலி என்ன செய்கின்றது…? தரையில் வங்கு போட்டுக் குடியிருந்து கொள்கிறது.

அதாவது நீங்கள் நல்ல மனதோடு இருக்கின்றீர்கள். பண்போடு இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகும்…!

நுகர்ந்தவுடனே நம் நல்ல உணர்வுக்குள் அது வங்கு போட்டு விடுகின்றது. முதலில் சாந்தமான நிலையில் இருக்கின்றீர்கள். வேதனைப்படுபவர்களைப்  பார்த்தால்
1.ஓமுக்குள் ஓ…ம் - இந்தப் பிரணவத்தையே (இயக்கத்தையே) மாற்றி விடுகின்றது.
2.எம்மா...! என்று வேதனைப்படுகின்றோம்
3.வேதனையை நுகர்ந்தவுடனே “உனக்கு இப்படி ஆகிப் போய்விட்டதா…! என்று சொல்வோம்.
4.நல்லதை வங்கு போட்டு இந்த உணர்வு நம் நாதத்தையே மாற்றுகின்றது.

இது தான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம். நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.ஒன்றை அடக்கி ஒன்றை அடக்கி
2.ஒன்றுக்குள் ஒன்று ஒன்றுக்குள் ஒன்று ஒன்றுக்குள் ஒன்றாகி இப்படி
3.இத்தனை உணர்வும் சேர்த்து மனித உணர்விற்குள் கலந்து வந்தது என்று
4.இவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்.

ஓ…ம் என்றால் பிரணவம். ஓ…ம் ஓ…ம் ஓ…ம் ஓ…ம் சொல்லிக் கொண்டு சில பேர் என்ன செய்வார்கள்…? ஓ…ம் என்று சொன்னாலே எல்லாம் சரியாப் போகும். என்பார்கள்…!

அது எப்படிச் சரியாகும்…?

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்து… முன்னாடி எலியை வைத்து இருக்கின்றார்கள். வேதனைப்படுவோரை நுகர்ந்தால் அது வங்கு போட்டு விடுகின்றது. ஓமுக்குள் ஓ…ம் ஆகி விடுகிறது.

வேதனையான உணர்வை நுகர்ந்தவுடனே அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அடுத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உட;ல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தினால்
3.அந்த வேதனையை வங்கு போட்டு விடுகின்றது
4.ஓமுக்குள் ஓ…ம். இதை அடக்கி விடுகின்றது.

இந்த வேப்ப மரத்தைக் காண்பித்து அந்தக் கசந்த நிலையை அடக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

தீமைகளை நாம் நீக்க இன்றைய வாழ்க்கையில் என்ன செய்கிறோம்…?

யாகத்தை வளர்க்கும் போது என்ன செய்வார்கள். பார்க்கலாம் நீங்கள். ஓ…ம் என்று சொல்லி நமஹ… நமஹ… நமஹ… நமச்சிவாய…! நமச்சிவாய…! என்று அதைக் கூடச் சரியாகச் சொல்ல மாட்டார்கள்.

தீயைப் போட்டு நமஹ…நமய… நமயா…நமயா நாய…நாய… என்று சொல்கிறார்களே தவிர முழுதாகச் சொல்வது கூட இல்லை. ஓ…ம் நமச்சிவாய…! என்று கூட முழுதாகச் சொல்வது இல்லை. ஆரம்பித்த பின் வரிசையில் போகும் பொழுது நாய…நாய என்ற சொல்தான் வரும்.

ஆக… அந்தச் சொல்லிலேயாவது சுத்தம் இருக்கின்றதா என்றால் அதிலேயும் இல்லை. “இதை…!” ஏதோ நாமும் கேட்டுக் கொண்டு இருக்கோம்.

யாகத்தைச் செய்தோ மற்ற சாங்கியங்களைச் செய்தோ எந்தத் தீமையும் நீக்க முடியாது. தீமைகளைச் சேர்க்கத்தான் முடியும்.

இங்கே நான் சொல்கின்றேன். நீங்கள் கேட்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் உயிரில் பட்டவுடன் “ஓ…ம்”. யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பிரணவமாகி அந்த உணர்வின் அணுவாக மாறும்.
1.பிரணவம் என்றால்…,
2.நாம் நுகரக்கூடிய உணர்வை உயிர் ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெற்றது என்று தெளிவாகக் கூறியுள்ளார்ககள் ஞானிகள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் வழியாக எடுத்து உடலுக்குள் அணுக்களாக உருவாக்கினால் தான்
1.எந்தத் தீமைகளையும் அடக்க முடியும்
2.நம் நல்ல குணங்களைக் காக்க முடியும்
3.மகிழ்ந்து வாழ முடியும்
4.உடலுக்குப் பின் பிறவா நிலை அடைய முடியும்.