சாமி (ஞானகுரு) இத்தனையும் தெரிந்து கொண்டார். எல்லாம் அவருக்குத்
தெரியும். அவர் எல்லாவற்றையும் தெரிந்து தான் செய்தார் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால்
1.தெரிந்து எதுவுமே நான் செய்யவில்லை.
2.குருநாதர் பதிவு செய்தார்.
3.அதைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
4.அதன் வழி எனக்குள் தெரியும் வாய்ப்பு வருகின்றது.
நான் தெரிந்து கொண்டது போன்று நீங்களும் தெரியப்பட வேண்டும்
என்று “ஆசைப்பட்டால்…” அந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஆனால் நீங்கள் எதை ஆசைப்படுகின்றீர்கள்…? அதை ஆசைப்படுகின்றீர்களா…!
சிந்தித்துப் பாருங்கள்.
சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள்
நீங்கும்… உடலில் உள்ள நோய்கள் நீங்கும்… தொழில் நன்றாக இருக்கும்… என்று தான் எண்ணுகிறீர்கள்.
இந்த ஆசை “குறுகிய ஆசையாகின்றது…!”
அருளைப் பெருக்க வேண்டும். இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி
வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் இந்த ஆசை “தீமைகளை நீக்கும் ஆசையாகின்றது…”
இதைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நீங்கள் வந்தால் அருள் ஞானம்
பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அறியாது இடைமறிக்கும் உணர்வின் தன்மைகளை அது “நிச்சயம்”
மாற்றும்.
யாம் உபதேசிக்கும் உணர்வுகளைச் சீராகக் கடைப்பிடிப்போர் இதை
உணர்ந்திருப்பார்கள்.
“சாமி தான் கொடுப்பார்… அவர் தான் எல்லாம்…!” என்றால் நான்
என் குருநாதரை அப்படி எண்ணவில்லையே…
அவர் உபதேசித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்தேன். அவர் சொன்ன
வழியில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தேன். எனக்குள் விளைய வைத்தேன்.
அதனின் காலப் பருவம் வளரும் பொழுது உண்மையின் உணர்வுகளை அது
அறியம்படி செய்தது. அதையே தான் உங்களிடமும் சொல்லிக் கொண்டே வருகிறேன்.
மெய் ஞானம் பெறவேண்டும்… அகஸ்தியனைப் போன்று மகரிஷிகளைப் போன்று
நம் குருநாதரைப் போன்று ஆக வேண்டும்… என்று விரும்புவோர் இதை எடுத்துக் கொள்ளலாம்.
1.அத்தகைய இச்சை இருந்தால்
2.இதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்
3.உங்கள் உயிர் அதைக் கிரியையாக்கி அதைச் செயல்படுத்தி
4,அந்த ஞான சக்தியைப் பெறச் செய்து
5.விண்ணும் மண்ணும் போற்றும் “மகா ஞானியாக” உங்களை ஆக்கும்.