ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2018

தியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…!”


நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து
2.அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து
1.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால்
2.“நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான்
1.நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால்
2.அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

தனுசு கோடி என்ற நிலையில் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் மாற்றி அருள் ஒளியை நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

தனுசு கோடி என்றால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது. பிறவியில்லா நிலை அடைவது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமயாணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கின்றனர். அதை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

என்ன தான் நாம் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் நிற்கின்றதா…? இந்த உடலே நமக்குச் சொந்தமல்ல. இந்த உடலால் தேடிய செல்வம் எப்படி நிற்கும்..?

ஆகவே அந்தப் பேரருளை நாம் கூட்ட வேண்டும். எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாக இருக்கும்.
1.என்றுமே ஏகாந்த நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
3.ஒவ்வொரு மகரிஷிகளும் இந்த நிலையில் தான் விண் சென்றார்கள்.