ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2018

கோடி கோடியாகச் செல்வம் தேட வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம்…! – அந்தச் செல்வத்தைத் தேடி வைத்தவர்களின் நிலை என்ன ஆனது என்று பார்க்கின்றோமா…?


இறந்த பிரிட்டிஷ் இளவரசி டயாணாவிற்குக் எல்லோரும் மதிக்கும் அளவுக்குக் கோடிக்கணக்கில் செல்வங்கள் இருந்தது... மிகுந்த செல்வாக்கும் இருந்தது...!

அப்படி வாழ்ந்த போதிலும் விபத்துக்குள்ளான பின் ஒரு நொடிக்குள் எல்லா ஆசையும் மறைந்துவிட்டது.

அதற்குப் பின் அவர் அணிந்த ஆடைளை ஏலத்தில் விடுகின்றார்கள். அதையும் பல கோடி கொடுத்து வாங்கினார்கள். அந்த ஆசையைத்தான் மீண்டும் அங்கே ஊட்டுகின்றார்கள்.., வளர்த்துக் கொள்கின்றார்கள்…!

அவ்வளவு செல்வாக்காக இருந்த அந்த இளவரசியும் நொடிக்குள் மறைந்தார் என்று நாம் அறிகின்றோம்... பார்க்கின்றோம்… நுகருகின்றோம்...! இருந்தாலும் செல்வத்தின் மீது கொண்ட ஆசை நம்மை விட்ட பாடில்லை.

1.அந்த டயாணா வளர்த்துக் கொண்ட ஆசையை நமக்குள் பதித்துக் கொண்ட பின்
2.”ஏன் நாமும் அப்படி வரக்கூடாது..!” என்ற அந்த நிலை தான் வருகின்றது.

ஆனால்...,
1.எத்தனையோ ஞானிகளும் மகரிஷிகளும் பிறவி இல்லா நிலை அடைந்தனரே...
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றார்களே...
3.அதை நாம் பெற வேண்டும்… “ஏன் அதன் வழி நாமும் வளர முடியாது…” என்ற அந்த உணர்வை வளர்த்தால்
4.நாம் அந்த அழியாச் செல்வத்தை அருள் செல்வத்தைப் பெறுகின்றோம்.

அப்படி இல்லையென்றால் மீண்டும் இழி நிலையான சரீரம் பெறுவோம்.

மனிதனுக்குள் “பேய் மனம்” தோன்றி விட்டது. அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது. மற்றோர் கொலையாவதையோ துன்புறுத்துவதோ பார்த்தால் அதை ரசிக்கும் தன்மை தான் வருகிறதே தவிர மனிதனைக் காக்கும் உணர்வுகள் அடியோடு மடிந்து விட்டது.

பேய் மனம் கொண்டு மற்றோரைத் தாக்கிடும் நிலை வரும் போது பேய் மனமே உருவாகி மற்றொன்றைத் தாக்கி அதை உணவாக ரசிக்கும் தன்மை வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்குத் தெளிவாக உணர்த்திய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து கொள்ளுங்கள். உங்களை அறியாது வரும் இருளை மாய்த்துப் பழகுங்கள்.

மெய்ப் பொருள் காணும் அருள் நெறிகள் எனக்குள் வளர வேண்டும் என்று ஏங்குங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களிலே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் பெற்ற மெய் உணர்வுகளை மற்றவருக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.

பிறருக்குச் சொன்னாலும்…,
1.மற்றவர்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு
2.என்னை இப்படிச் சொன்னார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று
3.அவர்கள் உணர்வை வளர்த்துக் கொண்டால் பின் அதன் வழியில் தான் நாம் செல்ல முடியும்… மீளும் வழி இல்லை.

அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை ஊட்டி அவர்கள் அருள் வழி வாழ வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலிமை பெறச் செய்ய வேண்டும்.

அந்த வலிமையை நாம் பெற்றுவிட்டால் யாருடைய தீமையும் நம்மை இயக்காது.