ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2018

சுரங்கப் பாதைகளை கோவிலுக்குள் யார் வைத்தார்கள்...? ஏன் வைத்தார்கள்...?


அன்று வாழ்ந்த அரசர்கள் தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தால் அந்தத் தாய்க்குப் பலவிதமான விஷத் தன்மைகளை ஊட்டுகின்றான்.

பிறக்கும் தன் குழந்தைக்கு எந்த விஷமும் பாதிக்காமல் இருப்பதற்காக வேண்டித் தாய் உணவாக உட்கொள்ளும் ஒவ்வொரு (சோற்று) பருக்கையிலும் தலை முடியில் விஷத்தைத் தொட்டு அந்தப் பருக்கையுடன் சேர்த்துக் கொடுத்து விடுகின்றான்.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான விஷமான பருக்கைகள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாயை அமர வைத்து
1.நம்முடைய அரசின் சட்டங்கள் இப்படி இருக்கின்றது...?
2.நம்முடைய போர் செய்யும் முறைகள் எப்படி...?   
3.நம் எதிரிகள் இப்படி இருக்கின்றார்கள்...?
4.அந்த எதிரிகளை எப்படி வீழ்த்துவது..? என்ற அறிவுகள் அனைத்தையும் போதிக்கின்றார்கள்.
5.குழந்தை பிறக்கும் பொழுதே அந்த அறிவுடன் வருவதற்காக அவ்வாறு செய்கின்றார்கள்.

பல விஷமான சத்துக்களைத் தாய் உட்கொண்டதால் அந்த உணர்வுகள் இரத்தத்தின் வழி குழந்தைக்குச் சேர்ந்து அவன் பிறந்து வளர்ந்த பின் மிக மிக வலிமையான ஆயுதங்களை எடுத்து எதிரிகளை வீழ்த்தும் வீரிய ஆற்றல் கொண்டவனாக வருகின்றான்.

அரசர்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் வலிமை மிக்கவர்களாக உருவாக்கினார்கள்.

அதே போல அரசன் தன் மதத்தின் நியாயங்களையும் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் அரசாட்சிக்கு வரும் போது குல தெய்வங்களை உருவாக்கிச் சட்டங்களை இயற்றிவிடுகின்றார்கள்.

அந்தக் குலதெய்வம் தான் நம்மைக் காக்கின்றது என்ற நிலையில் ஸ்தலப் புராணத்தை வடித்து ஆலயமாகக் கட்டி அங்கே தெய்வத்தை உருவாக்கிவிடுகின்றார்கள்.

மேலும் அந்தத் தெய்வத்திற்கென்று மூல மந்திரத்தையும் உருவாக்கி எல்லோரையும் அதை ஜெபிக்கும்படி செய்வார்கள். இதையெல்லாம் உருவாக்கி
1.அதன் வழியில் மக்களை ஒன்றிணைக்கச் செய்து
2.மக்களைத் தன் வசப்படுத்தி
3.எதிரிகளை வீழ்த்துவதற்குத் தான் அதைப் பயன்படுத்தினார்கள்.

அரசர்கள் கட்டிய பெரும்பகுதி ஆலயங்களில் பார்த்தால் கோயிலுக்குள் (UNDER GROUND) சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.

எதிரிகள் ஜெயித்து வந்து விட்டால்..., “நீங்கள் எல்லாம் எப்படியும் செத்துப் போங்கள்... நான் தப்பித்து ஓடிப் போய்விடுகிறேன்...!” என்று ஆலயங்களில் உள்ள சுரங்கப் பாதை வழியாகத் தப்பிச் சென்று விடுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அரசர்கள் தான் சுகமாக வாழ எல்லா வேலைகளையும் அன்று செய்தார்கள். ஏனென்றால் அவனைக் காக்கும் நிலையில்
1.உயிரோடு இருக்கும் போது அவனுக்கு அடிமை
2.நாம் இறந்த பிற்பாடு நாம் ஜெபித்த அந்த மந்திரத்தைச் சொன்னால்
3.நம் ஆன்மா அவனுக்கு கைவல்யம் ஆகின்றது.

கைவல்யம் செய்த ஆன்மாக்களை எதிரிகளை வீழ்த்த அன்று பயன்படுத்தினார்கள் அன்றைய அரசர்கள்.

ஒருவர் செத்த பிற்பாடு என்ன செய்கின்றோம்..?

மாவிலே ஒரு பிண்டத்தைச் செய்து அதற்கு மந்திரத்தைச் சொல்லி ஆற்றிலே போய்ப் போட்டுவிட்டு வந்தால் “இறந்தவர்கள் செய்த பாவமெல்லாம் போகும்...!” என்பார்கள்.

அதை முடித்து பின் வீட்டில் வந்து எண்ணெய் தேய்த்து மூழ்கி விட்டு விநாயகர் கோவிலுக்குப் போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தலைமகன் அங்கே அர்ச்சனை செய்தால்
1.அது மோட்ச தீபம் என்பார்கள்
2.இப்படி நம்மை முட்டாள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து அமாவாசைக்கு என்ன செய்யச் சொல்கிறார்கள்...? பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துப் பழக வேண்டும் என்பார்கள். ஏனென்றால் பித்ருகளுக்குச் சாப்பாடு கொடுத்தால் அது புண்ணியம்.

புண்ணியமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...!

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து அவரின் நிலையை அதிகமாக நேசித்தால் என்னாகும்..? அவன் இறந்த பின் அவன் ஆன்மா நமக்குள் தான் வந்து விடுகின்றது.

அது நமக்குள் வந்தால் அவன் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டானோ அதே மாதிரி நமக்கும் நோய் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் பித்ருக்களுக்காக வேண்டி மந்திரத்தை ஜெபித்தால் அவர்கள் ஆன்மாவை நமக்குள் இழுத்துக் கொள்ளலாம். அவர்கள் பட்ட நோய்களும் அவஸ்தைகளும் தான் நமக்கும் வரும்.

ஞானிகள் காட்டியதை அரசர்கள் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்தி மக்களை மாக்களாக்கி எல்லோரையும் அவனுக்கு அடிமையாக்கும் நிலைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் வழி தான் நாம் இன்றும் வழி நடந்து வருகின்றோமே தவிர ஞானிகள் காட்டிய மெய் வழியில் செயல்படுத்தவில்லை.

உடலை விட்டு மனிதன் பிரிந்து சென்றால் அவன் உயிரான்மா ஒளியின் நிலை அடைய வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது. இதைத்தான் ஆலயங்களில் காட்டியுள்ளார்கள்.

1.இன்றைய செயலாக தெய்வ குணத்தை உன் வாழ்க்கையில் நீ வளர்த்தால்
2.நாளைய சரீரமாக நீ அழியாத நிலைகள் பெறலாம் என்பதைக் காட்டும் இடமே
3.ஞானிகளால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்களின் நோக்கம்.