ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 11, 2018

சாதாரண மனிதனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை நினைவுபடுத்தும் நந்நாளே ஞானிகளால் கொடுக்கப்பட்ட “தைப் பொங்கல் திருநாள்…!”


ஞானிகள் சாதாரண மக்களும் மகிழ்ச்சியாக ஒன்றுபட்டு எப்படி வாழ வேண்டும் புரிந்து கொள்வதற்காகத்தான் தைப் பொங்கல் பண்டிகையை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நல்ல மணம் கொண்ட ஏலக்காய் ஜாதிபத்திரி முந்திரி இதைப் போல நறுமணங்களை மற்ற எல்லாவற்றுடன் இணைத்து சுவை மிக்க பொங்கலைச் செய்கின்றோம்.

நறுமணங்கள் மற்ற பொருள்களுடன் இரண்டும் கலந்து சுவை மிக்க உணர்வுகளாக மகிழ்ச்சியூட்டும் மணங்களாக வெளி செல்கின்றது. அதைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்தச் சுவையின் உணர்வை மீண்டும் நாம் நுகரப்படும் போது
2.நுகர்ந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து கொண்ட பின்
3.அந்தச் சுவை மிக்க உணர்வின் அணுவாக உருவாக்கும்,

 ஏனென்றால் அந்த பொங்கலை உட்கொள்ளும் பொழுது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டுகின்றது. இரத்தத்திற்குள் கலக்கப்படும் போது அந்த நல்ல உணர்வின் அணுவாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

அதைத் தான் இந்திரலோகம் என்பது.

மகிழ்ச்சியூட்டும் அணுவை உருவாக்கி அந்த உணர்வின் உடலாக ஆக்கப்படும் போது நம் உடலில் மகிழ்ந்திடும் உடலின் அமைப்பாக அமைகின்றது.

சூரியனால் விளையப்பட்ட பொருள்களை வைத்துச் சுவைமிக்க பதார்த்தமாகச் செய்து சாதாரண மனிதனும் சுவைமிக்க மகிழ்ச்சியான உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்ப்பதற்குத் தை மாதத்தை உருவாக்கினார்கள் ஞானிகள். சூரியனை வணங்கும்படி அதைக் காட்டினார்கள்.

ஏனென்றால் நாட்டின் கால நிலைகளுக்கொப்ப இங்கே பயிரினங்கள் உருவாக்கப்படுகின்றது. அறுவடை ஆகி அறுத்தபின்
1.சூரியன் தான் முதலிலே இந்த உணவைக் கொடுத்தான்…!
2.அவனுக்குப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உந்தச் செய்து
3.நல் உணர்வுகளை நமக்குள் வளர்ப்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள் ஞானிகள்.

ஏனென்றால் ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைகளை நாம் நினைவுபடுத்தினால் ஒவ்வொரு உடல்களிலும் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்ச்சிகள் பெருகி நாடே சுபிட்சமாக வாழும்.

 இப்போது ஞானிகள் சொன்னதை யாரும் எண்ணுவதில்லை. தை வந்தது. அன்றைக்குப் பொங்கல் வைத்துச் சாப்பிட வேண்டும். அதனால் சாப்பிடுகின்றோம். அது மட்டும் தான் தெரியும்…!

அதற்கு முந்திய நிலைகளில் இயற்கையின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டி இருப்பினும் அதை அறிந்து செயல்படும் தன்மை கூட இன்று இல்லாது போய்விட்டது.

உதாரணமாக
1.நம்மைத் திட்டியவனை எண்ணும் போது அதே வெறுப்பு நமக்கு வருகின்றது
2.பையன் தவறு செய்தான் என்று ஒரு தடவைப் பதிவு செய்து விட்டால் பையனை நினைக்கும் பொழுதெல்லாம் அது வருகிறது
3.தொழிலிலோ அல்லது மற்ற இடத்தில் ஒரு தவறு செய்பவனைப் பார்த்து நுகர்ந்த பின் அவன் செய்த தவறே நமக்குள் வருகின்றது.

இதைப் போல பொங்கல் நாள் என்பது சூரியனால் கொடுக்கப்பட்டதை உணவாகச் சுவைமிக்கதாக உட்கொள்கின்றோம் என்ற பேருண்மையை மனிதன் அறிந்து மகிழ்ச்சியைப் பெருக்குதல் வேண்டும். மகிழ்ச்சியான உணர்வைப் பொங்கச் செய்தல் வேண்டும்.

1.பல நறுமணங்களைச் சேர்த்து பொங்கலை உட்கொள்ளும் பொழுது
2.அதற்குள் எது சுவையின் உணர்ச்சியைத் தூண்டியதோ
3.அதனின் சுவை (அதிலே கலக்கப்பட்டது) ஆவியாகச் செல்வதைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

சூரியன் கவர்ந்து வைத்த அந்த மணத்தை மீண்டும் நாம் சுவாசிக்கும் போது உணர்ச்சியைத் தூண்டி இரத்தத்தில் கலக்கின்றது.

அதே சமயத்தில் நாம் சுவையாக உட்கொண்ட உணவைக் கரைத்து அதற்குள் இருக்கும் சத்தை வடிகட்டி ஆவியாக்கி ஆவியின் தன்மை இரத்தமாகின்றது.

அந்த இரத்தம் நம் உடல் முழுவதும் சுழன்று வரும் பொழுது அந்தச் சத்து நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுக்கும் போய்ச் சேர்கின்றது. ஆகவே…
1.மகிழ்ச்சி ஊட்டும் இந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் மீண்டும் கலக்கப்படும்போது
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்
3.மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கின்றது.
4.மகிழ்ச்சியைப் பொங்கச் செய்ய உருவாக்கப்பட்ட நந்நாளே பொங்கல் திருநாள்.

அதைப் போன்று தைப் பொங்கல் அன்று மட்டுமல்லாது அன்றாடம் அதிகாலையில் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து
1.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.நமக்குள் இருக்கும் அனைத்து அணுக்களுக்குள்ளும்
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் நிலைகளைச் செய்தல் வேண்டும்…!