ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2018

விஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ளார்கள் ஞானிகள்...?

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி திரித்து அவைகள் காலத்தால் தடைப்படுத்தப்பட்டது. இன்றும் நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்.

எது உண்மை...! எது பொய்..? இராமன் நிஜமாகவே இருக்கிறார் என்று எண்ணுகிறார்கள். ஞானிகள் சொன்னது... என்ன..?

ஒரு உணர்வை நாம் நுகர்கின்றோம். நுகரப்படும் பொழுது இராமனின் பக்தன் - வாயு புத்திரன் “ஆஞ்சநேயன்...!”

1.எந்தக் குணத்தின் தன்மை நமக்குள் எண்ணமாகின்றதோ
2.அது நம்மிடமிருந்து சொல்லாக வெளியில் வரும் பொழுது
3.வாயுவாகத்தான் வருகின்றது.
4.கண்ணில் பார்க்கின்றீர்களா...? இல்லையே!

அது அடுத்தவர் உடலுக்குள் போனவுடனே இந்த உணர்வை
1.அந்த எண்ணங்களைச் (காற்று) சுவாசிக்கும் பொழுது
2.இராமன் இட்ட கட்டளையின் பிரகாரம் அவர்களை இயக்குகின்றது.
3.எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

விஷ்ணு கோவில்களில் எல்லாம் பாருங்கள்! ஆஞ்சநேயர் இருக்கும். சிவன் ஆலயத்தில் எல்லாம் பாருங்கள். விநாயகர் இருக்கும்.

இதையெல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டோம் என்றால் நம் சாஸ்திரம் எவ்வளவு பெரிய உண்மையைக் கொடுத்திருக்கின்றது...? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதை எல்லாம் இழந்துவிட்டு இன்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஏமாற்றுபவர்கள் கையில் சிக்கிக் கொண்டு இந்த யாகத்தைச் செய்தால் பாவம் போகும் என்றும் அந்த மந்திரத்தைச் செய்தால் கஷ்டம் போகும் என்றும் “பாவத்தைச் செய்து... கஷ்டத்தைத்தான் தேடிக் கொள்கிறோம்...!”

நம்மை மீட்டுவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா? நான் (ஞானகுரு) எதுவும் தவறாகச் சொல்லவில்லை!

ஞானிகள் கொடுத்த இயற்கையின் பேருண்மைகளைக் காலத்தால் அரசர்கள் மாற்றிவிட்டார்கள். எப்படியோ..., இன்று வாழ வேண்டும்...! என்று நாம் விரும்புகின்றோம்.

அதற்குண்டான நிலைகளைச் செய்து ஏதோ இன்றைக்கு அந்தக் கஷ்டம் போனால் போதும்! என்ற நிலையில் இருக்கின்றோம்.

தலை வலியை ஒருவர் போக்குகிறார் என்றால் அங்கே போவோம். தலை வலி கொஞ்ச நேரத்தில் போகும்.

உடனே “ஆஹா!” நான் அங்கே போனவுடன் சரியாகி விட்டது என்பார்கள். இரண்டு நாள் கழித்தவுடன் அந்த உணர்வுகள் இங்கே இருக்கும். மீண்டும் முளைத்துவிடும்.

வயலில் களைகளை எடுக்கின்றோம். எடுத்தாலும் மீண்டும் மீண்டும் முளைக்கின்றது.
1.ஒரு தடவை எடுத்தவுடன் முழுமையாகப் போய்விட்டது
2.இனி வராது என்று சொல்ல முடியுமோ!

நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தது எல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாகி இருக்கின்றது. இது முழுமையாகப் போக வேண்டும் என்றால் அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆற்றல்களை நாம் எடுக்க வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற வித்தாக எல்லாம் கலந்து (MIXING) உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகள் கொடுத்த உணர்வின் சக்தியை உபதேசமாகக் கொடுக்கும் பொழுது செவி வழி கேட்கின்றீர்கள். அந்த உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது,

சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் அணுவாக உருவாகும் கருவாக மாற்றுகின்றது.

எப்படியாவது உங்களிடம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும் என்பதற்காக கூடக் கொஞ்சம் நேரம் உபதேசித்து உங்களை நுகரும்படி செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் சக்தி வளர்ந்து விட்டால்
1.வரும் தீமைகளின் பிடியிலிருந்து நீங்கள் விடுபடலாம்
2.தீமையின் பிடியிலிருந்து மற்றவர்களையும் விடுபடச் செய்யலாம்.
3.அந்தச் சக்தியை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற பேராசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதரின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறு துணையாக இருக்கும். எமது அருளாசிகள்.