ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2017

அருள் ஞானிகளைப் பற்றிய “பதிவு (RECORD) இருந்தால் தான்” அதை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் பெற்ற ஆற்றல்களை நாம் பெறமுடியும்

ஒரு நாடாவைப் பதிவு செய்யும் பொழுது அதில் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதற்குள் பூசிய முலாமும் அதற்குள் கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.

மீண்டும் காந்தப்புலனால் அதை உராயச் செய்யும் பொழுது அதற்குள் இணைந்த நாத ஒலிகள் வெளிப்படுகின்றது. நாதத்தைப் பெருக்கும் மைக்கிரோஃபோன் அதனுடைய உணர்வுகளைப் பெரிதாக்கிக் காட்டுகின்றது.

பெரியதாக்கும் நுண்ணிய அலைகளைச் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து கொள்கிறது. அந்தக் கவர்ந்த நிலைகளை மீண்டும் ரிக்கார்டு செய்துவிட்டால் இதே உணர்வுகள் இயந்திரத்தில் பதிவு ஆகிவிடுகின்றது.

இயந்திரத்தில் கெமிக்கல் கலந்த முலாமுக்குள் ஊடுருவி வெளிவருவதைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது (இரண்டாவது முறை)
1.எந்த இயந்திரத்தின் துணை கொண்டு கலந்ததோ
2.அதே இயந்திரத்திற்குள் அது ஈர்க்கும் உணர்வலையை வைத்துத்தான்
3.இன்று புதிது புதிதாக "விஞ்ஞானக் கருவிகள்" செய்கின்றனர்.

இதைப்போல
1.மனிதனுக்கு மனிதன் இணைந்து கொண்ட உணர்வுகள் பதிவான பின்
2.அந்த அலைகள் தொடர்ந்து இந்த பூமியில் படர்ந்து கொண்டு இருப்பதும்
3.அதை மீண்டும் நினைவு கூர்ந்தவுடன் அந்த அலைகள் நமக்குள் வந்து
4.அடுத்தடுத்து நினைக்கும்பொழுது நம்மை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

 இன்று மன மகிழ்ச்சிக்காக விஞ்ஞானக் கருவிகள் எத்தனை வகைகளில் எதைச் செய்தாலும் அதுவெல்லாம் மனித உடலுக்குள் அவன் எடுத்துக் கொண்ட உணர்வு “மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வலைகள்தான் அது”,

இயந்திரக் கருவியில் முலாமை இணைக்கச் செய்து அதிலே மற்றதைப் பதிவு செய்யப்பட்டு அது வெளிப்படுத்தும் பொழுது
1.அதே முலாமின் உணர்வு கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
2.எத்தகைய முலாமைப் பூசினானோ அதன் உணர்வின் துணை கொண்ட நிலையைத்
3.திருப்பி வைக்கும் பொழுது காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது.

அதைப்போலத்தான் சம்பந்தமே இல்லாதபடி ஒரு நண்பனிடத்தில் நாம் பேசும்பொழுது அந்த உணர்வின் தன்மைகள் நல்ல எண்ணங்கள் பதிவானலும் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டபின் விஷத்தின் தன்மையாக அது இயக்குவது போல் ஒரு வேதனையான நிலைகளைக் கேட்டால் அதனின் இயக்கமாக மாற்றிவிடுகின்றது.

வேதனைப்படும் அந்த நண்பனிடம் நாம் மிகத் தெளிவான நிலைகளில் தெளிந்து மகிழ்ச்சியூட்டும் சொற்களைப் பேசினாலும் பாலுக்குள் விஷத்தைக் கலந்தால் எப்படியோ அதைபோல நாம் சொல்லும் நிலைகள் வேதனைப்படுவோரின் உணர்வுகளில் ஏறாது. அவர்களுக்குள் புரியும் நிலையோ சிந்திக்கும் நிலையோ அற்றுப்போய்விடும்.

நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் யாம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்குள்
1.சாமி என்னமோ சொல்கின்றார்,
2.நமக்குப் புரியவில்லை என்ற நிலையாகக் கலக்கத்தை ஏற்படுத்தி
3.சிந்தித்து அறிந்துணரும் நிலைகளைப் பதிய விடாதபடி
4.உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

இதைப் போன்று தான் சாதாரண வாழ்க்கையில் உள்ள நிலைகளை நீங்கள் அதிகமாகப் பதிவாக்கிக் கொண்டீர்கள் என்றால் அது தான் நினைவுக்கு வரும்.

அதற்காக வேண்டித் தான்  யாம் அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு அதை எப்படியும் உங்களுக்குள் பதிவு செய்யவேண்டும் என்ற நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வின் நிலைகளை உங்கள் ஆன்மாவில் சேர்ப்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நிலைகளில்
1.எப்படியும் யாம் சொல்வது ஆழமாகப் பதிய வேண்டும்
2.அதனின் நிலைகள் ஊழ்வினையாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கின்றோம்
ஏனென்றால் முதலில் சொன்ன மாதிரி (ஒரு நாடாவில்) பதிவு இருந்தால் தான் நினைவு வரும்.

அருள் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் இருந்தால் தான் அவர்கள் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் கவர முடியும். அதை வைத்து நமக்குள் வரும் எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும்.