ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2017

பூகம்பத்தால் உள்ளே செல்லும் மனித உயிரான்மாக்களின் செயலாக்கங்கள் என்ன? இறந்தபின் உடலில்லாத உயிரின் இயக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ளுங்கள்

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே நச்சுத்தன்மை அடைந்துவிட்டது. விஷக் கதிரியக்கங்கள் எல்லாம் பூமியின் நடு மையம் அடைந்து இன்று உருகிக் கூழாக மாறிக்கொண்டே வருகின்றது.

அந்த உருகும் வேகத்தில் தான் மேல்பாகம் வெடிக்கப்படும்போது “பூகம்பம்” என்ற நிலை அடைந்து மேலே எடை கூடி உள்ளே எல்லாப் பொருட்களும் சேர்ந்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் அதற்குள் நாம் சிக்கிவிட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் இந்த உயிரோ கருகிய உணர்வுடன் வெளியே வருகின்றது.

இந்த உயிர் வெளிவந்த பின் அது எந்த வேதனையில் உருவானதோ அந்த உடல் இல்லை என்றால் இந்த உயிருக்குள் இந்த வேதனை என்ற உணர்வுடன் நரகலோகத்தைத் தான் சந்திக்க வேண்டும்.

1.இன்னொரு உடல் பெறும் வரையிலும்
2.நாம் அந்த வேதனையைத்தான் (கருகிய உணர்வை) அனுபவிக்க வேண்டும்.

இன்னொரு உடல் பெறும்போது ஒரு தாவர இனத்தின் மேலேயோ அல்லது வேறொன்று மேலேயோ இது பட்டால் அதையும் “கருக்கும்”. அந்தச் செடியும் என்ன செய்யும்...? வளர்ச்சியற்ற நிலைகள் போய்விடும்.

பின் அதனுடைய நிலைகள் சிறுகச் சிறுகச் சேர்த்து இதே உயிரணு இன்னொரு செடி மீது பட்டபின் அதையும் கருக்கி..., அதில் சேர்த்து கொண்ட உணர்வு கொண்டு “கொஞ்சம் கொஞ்சமாக” மாறுகின்றது.

அப்பொழுது அந்த உடலிலும் வேதனை இந்த உயிரான நிலைகளிலும் வேதனை என்ற நிலையில் அந்த நரகலோகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்.

1.ஏனென்றால் உயிரின் இயக்கத்தால் தான் உணர்வுகள்..,
2.உணர்வின் உணர்ச்சிகளை உயிர் அறியச் செய்யும்.
3.ஆன்மா என்பது தனி.
4.உயிர் என்பது காந்தம் - அந்த உணர்ச்சி கொண்டு உணர்வால் நமக்குள் இயக்கும்.
5.உடல் இருக்கும்போது... மாற்றியமைத்துக் கொண்டு
6.உடல் இல்லாதபோது..., அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இதெல்லாம் சாதாரணமானதல்ல. இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையே தான் தீயிலே மாண்ட ஒரு உயிரான்மா ஒரு உடலுக்குள் புகுந்துவிட்டால் இதன் உணர்வை அங்கு இயக்கப்பட்டு “அங்கு எரிகின்றதே... எரிகின்றதே...,” என்று சொல்லும்.

(முதலில்) தன் உடலை கருக்கிவிட்டு உடலைவிட்டு வெளிவந்த பின் அடுத்த உடலில் புகுந்து அவனையும் தீயில் குதித்து வேக வைக்கும்.

பின் புகுந்த உடலையும் அந்த நிலைக்கு மாற்றிவிட்டு வெளி வந்தபின் இன்னொரு உடல்களில் சென்று எரி பூச்சியாகவோ விஷம் கொண்ட பூச்சிகளாகவோ பிறக்கும்.

இப்படி இயக்கி உடல்களை மாற்றுவதுதான் இந்த உயிரின் வேலை. “நாம் நினைக்கின்றோம்.., உடலை விட்டுப் பிரிந்தால் யாருக்கு என்ன தெரியப் போகிறது...!” என்று.

ஆனால் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். மனிதனாகப் பிறந்தாலே முழு முதல் கடவுள். சிருஷ்டிக்கும் ஆற்றல் கொண்டவன்.

இந்த மனித உடலில் இருக்கும் காலமோ மிகவும் குறுகியது. அதற்குள் நம் மனதைக் குவித்து அருள் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றி அவனுடன் அவனாக வேண்டும்.

மனிதனாகப் பிறந்த பலனை அடைய வேண்டும். இல்லையேல் மற்ற உயிரினங்கள் எப்படி வேதனைப்படுகின்றதோ அதை நாமும் அனுபவிக்க வேண்டியதாகும்.

மகரிஷிகளும் ஞானிகளும் கண்டுணர்ந்த பேருண்மைகளைச் சொல்லி வருகின்றோம். அவர்கள் பெற்ற நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று ஆசையில் சொல்கிறோம்.

இனி இதைக் கடைப்பிடித்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.