ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2017

விளக்கினுள் ஊற்றப்படும் எண்ணெய் “இருட்டுதான்” ஆனால் எண்ணெயை எரித்தால் அதிலிருந்து “ஒளி” வருகின்றது - விளக்கம்

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்... “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது
3.அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது. அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்...?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார். அவர் காட்டிய வழியில் தான் உங்களுக்குள்ளும் சூட்சமத்தில் மறைந்த நிலைகளை அறியும் வண்ணமாக உபதேசிக்கின்றோம்.

ஆகவே, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிடும் நிலையாக “விழித்திரு” என்ற நிலையில் என்றுமே பேரொளியாக மாறுவோம்.