ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2017

நமக்குள் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கி “நம் எண்ணப் பார்வையில்” பிறருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர உடலில் விளைந்த உணர்வுகளைத் தேடாதீர்கள். அதை நாடாதீர்கள்.

நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு மெய் ஒளியை எடுத்து வளர வேண்டுமேயொழிய இந்த உடலில் பெற்ற உணர்வுகளை நாடக் கூடாது.

இந்த உடல் மடிவது. மெய் ஞானிகள் பெற்ற உணர்வை  வலுக் கொண்டு எடுக்க வேண்டும்.

இந்த உடலை எண்ணினால் அதில் என்னென்ன உணர்வு விளைந்ததோ அதுதான் வரும்.

தியானிக்கும்போது காட்சிகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்  என்று மெய் ஒளியுடன் இணைத்து வலுப் பெறவேண்டும்.

குருநாதர் வந்தார். காட்சி கொடுத்தார். எனக்கு நல்லதாகிவிட்டது என்பதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும். இந்த நிலையில் இருந்து மாறுபட வேண்டும்.

1.நாம் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும்.
2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்.
3.சாமி (ஞானகுரு) செய்கின்றார் என்பதற்கு பதில்
4.சாமி பார்வை எப்படிப் பிறரின் தீமையைப் போக்குகின்றதோ அதே உணர்வை
5.பிறரின் தீமையை நீக்கும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும்.
6.அதை நீங்கள் பெற்றால் தான் "குருநாதர் பெற்ற சக்தியை",  நீங்கள் பெற்றதாக அர்த்தம்.
7.இல்லாவிடில் அதில் அர்த்தம் இல்லை.
8.அத்தகைய வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமையை இது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் பிறருக்குள் நுழையும் பொழுது பிறருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறருடைய துயரத்தைக் கேட்கும் பொழுது நம்முள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதுதான் உருவாகின்றது.

நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டுமென்றால்...,
1.பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டும்.
2.வளர்த்துக் கொண்ட உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிய வேண்டும்.

யாராவது தீமையின் நிலைகளைச் செய்தார்களென்றால் அந்த உணர்வை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம்.

உடனே, “ஈஸ்வரா”  என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று அதனுடன் இணைத்துவிட வேண்டும்.

என் பார்வை அவர்களைத் தீமைகளில் இருந்து மீட்டவேண்டும். அவர்களும் மெய்ப்பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த உணர்வை நமக்குள் படைத்து அனுப்பிவிட வேண்டும். மெய் ஒளி கொண்டு இதை எண்ணிவிட வேண்டும்.

அவ்வாறு எண்ணிவிட்டால் எத்தீமையாக இருந்தாலும் நமக்குள் வேலை செய்யாது.

1.அருள் உணர்வை நம் பார்வையால் செலுத்தும் பொழுது நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வராது நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.
3.இந்த இரண்டு நிலையும் வேண்டும்.

நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுப் பெறச் செய்து “நம் எண்ணப் பார்வையில்” அவர்களுடைய தீமைகளைப் பிளந்திடல் வேண்டும்.

அவர்களைக் காக்கும் உணர்வுகள்தான் நமக்குள் விளைய வேண்டும்.  மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

இதை ஒவ்வொரு நொடியிலும் நாம் செய்தாக வேண்டும்.

கடலில் பயணம் செய்யும்பொழுது அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. நாம் எந்தத் தீவிற்கு போகவேண்டும் என்று அதை எல்லையாக வைக்கின்றோமோ வரும் அலைகளைப் பிளந்து அங்கே சென்றடைகின்றோம். அதைப் போன்றுதான்,
1.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான நிலைகள்
2.அது பேரானந்தப் பெரு நிலையான எல்லை

அந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.