ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2017

நாம் ஒளியின் சரீரம் பெற்றால் சூரியனே அழிந்தாலும்  "நமக்கு அழிவில்லை"

இன்று சூரியன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.  கார்த்திகை நட்சத்திரம் சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது.

1.ரேவதி நட்சத்திரமும் விசாக நட்சத்திரமும் இப்படி ஐந்தாறு நட்சத்திரங்கள்
2.பெண்பால் கொண்ட நட்சத்திரங்களும் ஆண்பால் கொண்ட நட்சத்திரங்களும்,
3.தங்களுக்கென்று உபகோள்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாக தன் வளர்ச்சிக்குச் செல்கின்றன.
4.அதனால் நம் பிரபஞ்சத்திற்கு உணவு கிடைக்காது.

நமது பிரபஞ்சம் நாளடைவில் பலவீனமடையும். 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால் நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது. குறுகிய காலமே வாழும் சூரியனும் செயலிழந்து விடும். பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் கோள்களும் செயலிழந்து விடும்.

ஈர்ப்பு வட்டத்தைக் கடந்தால் 2000 சூரியக் குடும்பத்தில் அவைகள் தன் வளர்ச்சிக்கு ஈர்க்கப்பட்டு அதில் சுக்குநூறாகி மற்ற கோள்களுடன் மோதி அல்லது அடுத்த பிரபஞ்சத்தில் நுழையும் போதே ஆவியாக மாறி அதற்கு உணவாகச் சேரும் தன்மைதான் பிறக்கின்றது.

நமது பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள் மீண்டும் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு மற்ற பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்று மற்ற கோள்களில் சென்று சேர்கின்றது.

அந்தக் கோள்களானது நமது பூமியைப் போன்றே தாவர இனங்களையும் மற்ற நிலைகளையும் பெற்றிருந்தால் அங்கு ஈர்க்கப்பட்டு உணர்வுக்கொப்ப உடல் அமைந்து மனிதராக உருப்பெறும் தன்மை உண்டு.

அப்படி இல்லையென்றால் கிருமிகளாக விஷத்தின் தன்மையைக் கொண்ட உணர்வின் தன்மை வளர்ச்சியற்ற நிலையில் தான் இருக்கும். நட்சத்திரத்தில் கிருமிகள் இல்லை. கோள்களில் இருக்கும்.

இது போன்று கால சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் இந்த மனித உடலில் இருக்கும் போதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நம்முள் பெற்றிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நம்முள் பெறுவது எளிதான காரியம்.  கடினமான காரியமில்லை. வருடம் முழுவதும் நாம் தவம் இருக்க வேண்டியதில்லை.

தினமும் காலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளில் ஏங்கியிருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைக் கவர்ந்து உங்களுடைய இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு வீரியச் சத்தைக் கொடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை ஏங்கிப் பெற்றோம் என்றால்

1.நமது உடலில் உள்ள தீய அணுக்களை மாற்றி நல்ல உணர்வுடன் வாழ்ந்திடவும்
2.நோய்களில் இருந்து நாம் தப்பவும்
3.மனபலம் கொண்டு நல்வாழ்க்கை வாழவும் இது உதவும்.

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொள்கின்றோமோ அதன் கலவைக்கொப்ப நமது உணர்வுகளையும் உடலையும் மாற்றிக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

அகஸ்தியர் இருண்ட உலகத்தை வென்று ஒளியின் சரீரமாக உணர்வை ஒன்றச் செய்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து நம்மிடத்தில் பெருக்கும் பொழுது நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

நந்தீஸ்வரன் சிவனுக்கு கணக்குப் பிள்ளை என்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள். இருளை அகற்றிய அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க,
1.அந்தக் கணக்கின் பிரகாரம் நாம் புவியின் ஈர்ப்பைக் கடந்து
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி
3.நமது உடலை விட்டுச் செல்லும் உயிர் எதன் வலு பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும்.

அங்கே (சப்தரிஷி மண்டலம்) அழைத்துச் சென்று தொக்கியுள்ள இருளை உடல் பெறும் உணர்வினைக் கரைக்கின்றது.

அங்கே கரைத்தால்தான் இந்த பிரபஞ்சத்தில் பரவப்பட்டு பிரபஞ்சத்தில் வரும் இருளை ஒளியாக மாற்றுகின்றது.

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இந்த பிரபஞ்சத்திலிருந்து விஷத்தின் தன்மையை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர வேண்டும்.

அதை நுகர்ந்து அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் நமது ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுகின்றது. நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து விண்ணில் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ முடியும்.

சூரியனே ஒரு காலம் அழிந்தாலும் நமது ஒளியின் சரீரம் மாறாது.

அகஸ்தியருக்கு முன் நஞ்சுகள் வலுவை இழந்தது போன்று நம்முள் சேர்ந்த நஞ்சுகளும் வலு இழக்கின்றன.


பேரருள் பேரொளியின் தன்மை நம்முள் பெருகி பிறவியில்லா நிலையினை பெருவீடு பெரு நிலையினைப் பெறும் தகுதியினை நாம் அனைவரும் பெறுகின்றோம்.