ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2017

ஐம்புலன்களின் இயக்கத்தால் சுவாசம் எப்படி மாறுகின்றது...?

உதாரணமாக ஒரு கோழி ஒரு சேவலிடம் இணைந்திருந்தால் அடுத்த கணம் அந்தக் கோழி அந்தச் சேவலை எண்ணியே “கேரும்”.

அந்தக் கேருதல் ஆனால் அந்த முட்டையில்
1.அந்தச் சேவலின் நிறங்கள் எதுவோ
2.அதனுடைய குணங்கள் எதுவோ
3.அதன்வழி அந்த முட்டைக்குள் அந்த ரூபமான சேவல் உருவாகும் அல்லது கோழி உருவாகும்.

இப்படி இதைப்போல ஒரு வேதனையான உணர்வை நாம் நுகரப்படும்போது என்ன ஆகின்றது என்று பார்ப்போம்.

நம்முடைய நண்பன் வேதனைப் படுகின்றான், வேதனைப் படுகின்றான் என்ற உணர்வை நாம் திரும்பத் திரும்ப நுகர்வோம் என்றால்
1.வேதனைக்குண்டான உணர்வின் அணுவாக
2.(வேதனையைத் தோற்றுவிக்கும்) கரு முட்டையாக மாறுகின்றது.

 நாம் எந்த வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றோமோ அந்த வேதனையான கரு முட்டை நமக்குள் உருவாகி நம் இரத்த நாளங்களில் உடல் முழுவதும் சுழன்று வரும்.

நம் இரத்தநாளங்கள் வழியாக உடல் முழுவதும் பரவப்படும்போது சுழன்று வரும் வேலையில்
1.எதன் அருகில் இணைந்து உறுப்புகளில் அது ஒட்டிக்கொள்கின்றதோ
2.அங்கே அந்தக் குஞ்சு பொரிக்கப்படுகின்றது.
3.அணுவாக மாறுகின்றது.

கோழி முட்டையிட்டு அடைகாக்கின்றது. அடைகாத்தபின் பொரிந்து குஞ்சுகள் வெளி வருகின்றது. வெளிவந்தபின் அந்தக் குஞ்சுகள் கத்தும்போது அதற்குப் பதிலாக அதுவும் எதிர் பதில் கொடுத்து மண்ணைப் பிரண்டி உணவுக்காக அழைக்கும்.

இதைப்போல பறவை இனங்களிலும் எடுத்துக் கொண்டால் இதைப்போல் கருவுற்றுக் குஞ்சானபின் தாயைப் பற்றி அந்தக் குஞ்சுகள் ஏங்கும்.

தாய் வெளியிலே சென்று உணவு எடுத்து வந்து குஞ்சுகளுக்கு வாயிலே ஊட்டும். இதைப் போன்றுதான்
1.நம் உடலில் கருக்கள் உருவாகிவிட்டால்
2.அணுவாக உருவான பின் அது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
3.அப்பொழுது இரத்த நாளங்களில் அதன் உணர்ச்சிகள் பரவி சிறுமூளை பாகம் வரும்.
4.சிறு மூளை பாகம் வரும்போது உடனே அந்தந்த உணர்வுகள்
5.கண் காது மூக்கு வாய் உடம்பு இந்த ஐந்து புலன்களிலும் இந்த உணர்ச்சிகளை ஊட்டி
6.அதனதன் வழி கூடிக் கவர்ந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது.

வேதனையான அந்த உணர்வு தூண்டும்போது உங்கள் உடலைப் பார்க்கலாம். சோர்ந்து போய் இருக்கும்.

அதே சமயத்தில் “யார் இந்தக் கஷ்டத்தைச் சொன்னாரோ... வேதனையைச் சொன்னாரோ... நஷ்டம் என்று சொன்னாரோ...”
1.அந்த உணர்வலைகளை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து
2.அலைகளாக மாற்றி வைத்திருக்கும்.

முதலில் சொன்ன மாதிரி... உடலில் உருவான அணுக்கள் இந்த உணர்ச்சிகளை ஊட்டியபின்
1.கண்ணின் காந்தப் புலனறிவு
2.எந்த நண்பனிடம் பேசினோமோ அந்த நண்பனின் உணர்வலைகளை ஊட்டும்.
3.அதிலிருந்து வந்த அலைகளை இழுக்கும்.
4.தனது உடலுடன் ஆன்மாவாக மாற்றும்.
5.நம் உயிரில் இயக்கும் ஈர்க்கும் காந்தம் இதை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்யும்.
6.இந்த உணர்வுகள் அந்த ஒலிகளை எழுப்பி உடல் முழுவதும் சுழலும்.
7.அப்பொழுது அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்தபின் அந்த அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

எப்படிக் கோழி முட்டையிட்டு குஞ்சு வந்தபின் அது கத்தும்போது தாய் கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றதோ அதைப்போல தான் நம் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

ஆகவே அதை உருவாக்கியது யார்...? நம் உயிர் தான். அது தாயாகின்றது. தந்தையுமாகின்றது.

இப்படித்தான் நம் உடலிலுள்ள பல கோடி அணுக்களும் இயங்கிக் கொண்டுள்ளது. அவைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுப்பது நம் உயிரின் வேலை.

உடலில் உருவான அணுக்கள் தன் பசிக்கு உணர்ச்சிகளை ஊட்டி கிளர்ந்தெழச் செய்து புலனறிவுகளை இயக்கிக் காற்றிலிருந்து அதனதன் உணர்வலைகளை எடுத்து சுவாசிக்கச் செய்கின்றது.
1.இந்தச் சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாம் நம் உடலுக்குள் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அதை மாற்றுவதற்காக வேண்டித்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை மீண்டும் நினைவுபடுத்தினால் அது தன் உணவுக்கு அருள் ஞானிகளின் உணர்வலைகளை ஆகாரமாக எடுக்கும். அருள் ஞானிகளின் அருள் சக்திகள் நம் சுவாசத்திற்குள் வரும். 

இது நமக்குள் வளர்ந்தால் தான் நம் உடலிலுள்ள எத்தகைய தீமைகளையும் மாற்றியமைக்கும். இனி வரும் தீமைகளிலிருந்தும் விடுபடும் ஆற்றலும் நமக்குக் கிடைக்கும்.