ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2017

எத்தகைய துன்பங்களிலிருந்தும் “நீங்கள் விடுபடுவீர்கள்”

நீங்களெல்லாம் மகிழ்ந்து மகிழ்ச்சியான மூச்சலைகளை விட்டீர்கள் என்றால் ஊருக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது என்கிற நிலையில்தான் இப்பொழுது உபதேசமே செய்கின்றோம்.

ஆகையினால் இதை அலட்சியப்படுத்த வேண்டாம். வியாச பகவான் அந்தத் தருணத்திலே (கடலிலே வீழ்ந்து இறக்கும் தருவாயில் அதிலிருந்து மீண்டு) சிரமப்பட்டுத்தான் பெற்றார்.

அதைப் போல சந்தர்ப்பத்தை உருவாக்கி அந்தச் சிரமத்தின் எல்லை கடந்த இந்தக் கடைசி நிலையை உணர்த்தித்தான் குருநாதர் எமக்கு அந்த அருள் ஒளியைக் கொடுத்தார்.

1.குடும்பத்தில் சிக்கல் இருந்தாலும், சரி
2.வியாபாரத்தில் மந்தமாக இருந்தாலும் சரி,
3.மற்ற நிலைகளில் தொய்வாக இருந்தாலும் சரி
4.நமக்கு ஒருவர் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாலும் சரி,
5,உடனுக்குடனே ஆத்ம சுத்தி செய்து
6.யாம் சொல்லும் பக்குவ நிலைகளில் நடந்து வாருங்கள்.
7.இதில் வெல்வீர்கள்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் இதை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்றால் அடுத்து வரும் விஞ்ஞான உலகத்தின் உணர்வு உங்களைப் பாதிக்காது.

அதே சமயம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியின் ஜோதியாக நாம் விண் செல்லலாம்.

எற்கனவே வாரத்தில் ஒரு நாள் குடும்பக் கூட்டுத் தியானம் இருக்கும் நிலையைச் சொல்லியிருக்கின்றோம். நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி மெய்ஞானத்தின் மெய் உணர்வின் தன்மையை மகரிஷிகளினால் வெளியிடப்பட்ட அந்த மூச்சின் அலைகளை யாம் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்த அந்த உணர்வின் அலையை உங்கள் ஈசனான உயிருக்குள் கிடைக்கப் பெறவேண்டும் என்ற உணர்வினை
1.உயிருக்குள் தட்டியெழுப்பி,
2.அதை நீங்கள் சுவாசிக்க
3.உங்கள் உயிரான ஈசனுக்கு யாம் ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆராதனையின் மதிப்புதான் உங்களுக்குள் இருக்கும் தெய்வங்களான நல்ல குணங்களும் உங்கள் உடலை உருவாக்கிய
1.அந்த நற்குணங்களின் உணர்வுக்குள் அது புத்துயிர் பெற்று
2.நீங்கள் சிந்திக்கும் நல்ல எண்ணங்களுக்கு வலு கூட்டி
3.நீங்கள் அந்தச் சுவாசத்தின் நிலைகள் வரப்படும் பொழுது
4.உடலிலே துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கக்கூடிய பிணிகள் நீங்கும்.

உங்கள் எண்ணமும் மூச்சும் சொல்லும் உங்களை மகிழச் செய்யவும் உங்களைச் சார்ந்தவரிடத்தில் நீங்கள் பேசும் பொழுது அவர்களுடைய துன்பங்களை நீக்கவும் இது உதவட்டும்.

இதுவரை பதிய வைத்த இந்த உணர்வின் ஆற்றலின் நல் அலைகள் உங்களுக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருகச் செய்வதற்கே நமது குருநாதர் காட்டிய வழியில் இந்த ஆராதனையைச் செய்கின்றோம்.

ஆக அந்தச் சக்தியினுடைய நிலைகளில் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் வீற்றிருக்கக் கூடிய ஆலயம் என்று உங்கள் உடலை நினைத்து யாம் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.