ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2017

தியானத்தின் மூலம் நாம் விடும் மூச்சலைகள் "பத்து மைல் சுற்றளவிற்குப் பரவி" நம் ஊரையே காக்கும் அரும் பெரும் சக்தியாகப் பரவும் – உங்களால் முடியும்

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால் உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீனமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது. 

இது இயற்கையின் செயல்களில் ஒன்று.

விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ மகரிஷி சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள் இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

1.தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும்
2.அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால்
3.அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால் ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

விடும் மூச்சலைகளால் இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்த பூமியில் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள் பரவிப் படர்ந்துள்ளன.
 
நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால்  நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது.

இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது
2.அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில் 
3.குறைந்த பட்சம் “10  மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது. 
4.நாம் விடும் மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து கயிறாகத் திரித்தால் ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

அதைப் போன்று நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் வலிமைமிக்கதாகப் பரவும்.

உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும் 
2.நாம் வெளியிடும் மூச்சலைகள் அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக
3.“10 மைல்” அளவுக்காவது இது பரவும்.

அப்போது  இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்கு தீங்குகள் இல்லாத நிலைகளும் அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன.

நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை “நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்”.

நம் ஊர் மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழச் செய்வோம். 

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.