ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2017

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணி வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோமா...!

இப்போது நாம் வாழ்க்கையில் எதை எதை எண்ணுகின்றோம்? என் பிள்ளைக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அது நடக்கவில்லை கால தாமதம் ஆகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? வேதனைப்படுகின்றோம். வேதனை அதிகமாகி நமக்குள் அந்த வேதனையை உருவாக்கிக் கொள்கின்றோம்.

கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வேதனையாகும்போது அடுத்து அந்தக் குழந்தை திருமணமாகி அது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதை விட்டு விட்டுகின்றோம். (வேதனையையே எண்ணிக் கொண்டுள்ளோம்).

1.ஏனென்றால் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனையை உருவாக்கி
2.அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “வயதாகிவிட்டது.., வயது ஆகிக் கொண்டே போகிறது.., என்ன செய்வது...?
3.“வயதாகிவிட்டது வயதாகிவிட்டது” என்று இங்கே நமக்குள் சமைத்து
4.அந்த உணர்வுகளைத்தான் குழந்தைக்குக் கொடுத்து
5.அது உடலிலும் வளர்க்கச் செய்கின்றோம்.

குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “கல்யாணம் ஆகவில்லை ஆகவில்லை..,” என்று இந்த ராகத்தையே பாடிக் கொண்டிருப்போம்.

யாராவது மாப்பிள்ளை வருகிறார்கள் என்றால் எதை எண்ணினோமோ இந்த உணர்வலைகள் “கம்ப்யூட்டர் ரிமோட் செய்வது போல் செய்து” அங்கே இணங்கி வரும் நிலைகளை மாற்றிவிடும். பார்த்துவிட்டு வேண்டாம் என்று சென்றுவிடுவார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதே மாதிரி குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம். சரியாகப் படிக்கவில்லை என்றால் என்ன ஆகின்றது? நாம் என்ன நினைக்கின்றோம்?

எப்படியோ நல்ல முறையில் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகின்றோம்.

“இப்படி ஆகி விட்டதே...” என்று பல கவலைகளை எடுத்துக் குழந்தைகளிடம் பேசப்படும்போது அதன் மனதில் கவலையான உணர்வுகள் நினைவுக்கு வருகின்றது.

அப்பொழுது நாம் அந்தக் குழந்தைக்கு எதைச் சமைத்துக் கொடுக்கின்றோம். நல்ல உணர்வுகளைக் கொடுக்கின்றோமா..?

ஏனென்றால் நாம் நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் நன்மை செய்தால் “விக்கலாகின்றது”. காரியங்கள் நல்லதாகின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையோடுகின்றது. காரியங்கள் எல்லாமே தடையாகிவிடுகின்றது.

அப்பொழுது பாசத்தால் தன் குழந்தை படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் படிக்கவில்லை என்கிற பொழுது “இப்படிச் செய்கின்றானே.., அப்படிச் செய்கின்றானே...! இவன் எங்கே உருப்படப் போகின்றான்...,?” என்ற கோபப்பட்டு அந்த உணர்வுடன் சொல்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இதை எண்ணி இப்படிப்பட்ட உணர்வுகளைச் சமைத்து என்ன செய்கின்றோம்?

மீண்டும் அவனை எண்ணும்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் சொல்வோம்.

எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் இவனைப் பார்த்தால் இப்பொழுது சுட்டித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டது. வெளியிலே சுற்றப் போகிறான் என்று சொல்வார்கள்.

1.இப்படி நினைத்து
2.மற்றவர்களிடம் தான் சொல்கிறோம் என்று நினைக்கிறோம்.
3.ஆனால், அவனை நினைத்து நாம் சொல்லும் உணர்வுதான்
4.அங்கு குழந்தைக்குள் சென்று பாய்கின்றது என்பதை யாரும் நினைப்பதில்லை.
5.அந்த உணர்ச்சிகள் அவனைத் தூண்டி இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கு தான் போகச் சொல்லும்.
6.அப்போது நம்முடைய உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

எப்படித் தீமை செய்த உணர்வுகளை எண்ணும்போது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி..,” என்றால் நமக்கு வெகு தொலைவில்... இருந்தாலும் அந்த உடலை இயக்குகின்றது.

அதே சமயத்தில் நன்மை செய்தார்கள் என்று எண்ணினால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கலாக வருகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கின்றது.

தொடர்பு இல்லாது எவரும் இல்லை.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?
1.குழந்தை அவன் அறியாமல் இயக்கும் அந்த இருளைப் போக்கும் நிலையை
2.நாம் இங்கு நமக்குள் சமைத்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சி
3.அதை இணைத்துச் சொல்லாக அவனிடம் சொன்னால்
4.குழந்தை உடலில் நல்ல உணர்வுகளாகப் படர்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடல்களில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.

எங்கள் குழந்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவனுக்குக் கல்வில்யில் நாட்டம் வர வேண்டும். கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அவன் தெளிவான நிலையில் வாழ வேண்டும். என்று “இப்படி யாராவது நாம் சொல்கின்றோமா?”

தெய்வ பக்தி கொண்டு சொல்பவர்கள் கூட என்ன செய்கிறார்கள்? வேதனையைத்தான் சொல்கிறார்கள்.

சாமியைக் கும்பிடுகின்றோம். அந்தத் தெய்வத்தை நினைத்து அவன் இப்படி இருக்கின்றானே... நீ பார்க்கக் கூடாதா...,? அந்த வேதனையை நினைத்துத் தான் சொல்கின்றோம்.

நாம் அந்த தெய்வத்தை நினைத்துச் சொன்னால் எப்படிச் சொல்ல வேண்டும்?

அந்த அருளை என் குழந்தை பெற்று இருளை நீக்க வேண்டும். அந்த அருளால் அவனை அறியாத இருள்கள் அனைத்தும் நீங்க வேண்டும். அவன் பேரருள் பெற்று எல்லாவற்றிலும் தெளிந்த மனம் பெற வேண்டும்.

சந்தோஷத்தோடு நாம் இந்த நிலைகளை அடிக்கடி அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் செலுத்தும் உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவி
2.அவன் சுவாசத்தில் கலந்து
3.அவனுக்குள் இயக்கங்கள் நல்லதாகும்.

“உங்கள் உணர்வு” அவனைத் திருத்துகின்றதா இல்லையா என்று அப்புறம் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.