ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2017

“இரு..., நான் பார்க்கின்றேன்” என்று நாம் ஒருவரைக் கடுமையாக எண்ணித் தாக்க விரும்புகின்றோம் அல்லது தாக்கிவிடுகின்றோம் - அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று அறிந்திருக்கின்றோமா...?

நாராயணன் பூலோகத்திற்கு வந்து சீதா ராமனாகப் பிறக்கிறான் என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்தனர் ஞானிகள்.

இராமனோ தான் எய்த அம்பைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதையெல்லாம் கதையாகப் படிக்கின்றோம் பார்கின்றோமே தவிர அதில் உள்ள மூலங்களை நாம் அறியவில்லை.

நான் ஒருவரைக் கெடுதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றேன், இது சீதா - சுவை. அது சொல்லாக எனக்குள் வரும் பொழுது உங்கள் மேல் பாய்ச்சுகின்றது.

1.கெடுக்க வேண்டும் என்ற அந்த உணர்வு அம்பாகப் பாய்ந்தவுடனே
2.“இரு உன்னை நான் பார்க்கிறேன்” என்று திரும்பி
3.அந்த அம்பு எனக்குள் வரும் என்று
காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்..

அதே சமயம் வாலி இன்று மிகவும் வலிமை பெற்றவன். ஆனால், பிறர் எவ்வளவு வலிமை கொண்டிருந்தாலும், வாலி தன் கண் கொண்டு பார்ப்பானேயானால் அவனுடைய வலுவில் சரி பகுதி வலு பெற்று விடுவான் என்பார்கள்.

ஒரு போக்கிரியை நாம் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய வலு அதிமாக இருக்கும் பொழுது,
1.நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும்
2.எத்தனை ஆயிரம் பேரை சமாளிக்கக் கூடிய திறன் இருந்தாலும்
3.அவன் மேல் பார்வை பட்டவுடனே...,
4.என்ன பலம் இருந்தாலும் அனைத்தையும் இழக்கச் செய்து நமது வலு பூராவும் அங்கே சென்றுவிடுகின்றது.

“ஒரு கராத்தே மாஸ்டர்...,” அவர் பல அடுக்கு ஓடுகளை ஒரே சமயத்தில் வெட்டிவிடுவார்.

ஆனால் அவர் வீட்டிலே வெறும் தடியைக் கொண்டு கதவை உடைத்து அவரை அடித்து எல்லாப் பொருளையும் எடுத்துக் கொண்டு போகும் நிலை உள்ளது. (பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள்)

1.ஆகவே நாம் எத்தகைய வலுகொண்டு
2.அசுர உணர்வு கொண்டு அதை வளர்த்துக் கொண்டோமோ,
3.அதற்குத் தகுந்த முரட்டுப் புத்தி வரும்.
4.எதைச் சொன்னாலும அலட்சிய புத்தி வரும்.

இதே மாதிரி எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை யாராவது எதையாவது சொன்னால்..., “இரு... உன்னைப் பார்க்கின்றேன்” என்ற இந்த உணர்வுதான் வளரும்.

இதைப் போன்று நாம் எண்ணினால் நமக்குள் வரும் அந்த நிலையையே
1.முரடனின் நிலையை
2.வாலியாகச் சித்தரித்தார்கள் ஞானிகள்.

எண்ணங்கள் பிறருடைய நிலைகளைக் கவரும் சக்தி கொண்டது.

அதனால் தான் நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு அவனை (வாலியை) வெல்வது முடியாது என்று இராமாயணத்தில்..., “மிகத் தெளிவாக” எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தீமையாகப் பேசினால் நேரிடையாகப் பார்க்கும் பொழுது நம் நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றது.

“நான் ஒன்றுமே செய்யவில்லை.., இப்படிப் பேசுகின்றான் பாவி”, என்று அவர்களுடைய உணர்வை எடுத்துக் கொள்வோம்.

அவன் உணர்வை எடுத்துக் கொண்டபின் நஞ்சின் தன்மை கொண்டு “பதட்டத்தில்... நான் ஒன்றுமே செய்யவில்லை பாவிப்பயல்..., இப்படிச் செய்கின்றான்” என்றவுடன்
1.அவன் அடக்கிக் கொண்டு இருப்பான்
2.இந்த வலுவின் தன்மை அங்கே சென்று
3.“இப்படிப் பேசினால், நான் சும்மா இருப்பேனா?” என்று கூறும் நிலையும் அங்கே வருகின்றது.

இவையெல்லாம் நம் வாழ்க்கையில் எவ்வாறு வருகின்றது? என்பதை இராமாயணம், கந்தபுராணம், கீதை, இவைகளில் தெளிவாகக் கூறியிருந்தாலும் நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்...!

அவைகளைக் குப்பையில் போட்டுவிட்டு
1.நம்மை ஏமாற்றும் நிலையிலும், யாகங்கள் செய்தால் வேள்விகள் செய்தால்
2.கடவுள் நமக்கு நேரிடையாகக் கொடுப்பான் என்ற இந்தத் தன்மை கொண்டு,
3.உண்மையை நாம் அறியாது மெய் உணர்வை நாம் அழித்துக் கொள்ளும் நிலைகளில் உள்ளோம்.

விஞ்ஞான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். விஞ்ஞான நிலைகள் நமக்குப் பயன்பட்டாலும்.., “அது உடலுக்கே”. (உடலுக்குப் பின் என்ன என்ற நிலை விஞ்ஞானத்தில் இல்லை...!)

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு என்றும் அழியாத சரீரம் பெறுவதே வேகாக்கலை என்று மெய்ஞானிகள் காட்டியது.

அதை நாம் அனைவரும் பெறுவோம்

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். அருளாசிகள்.