ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2017

அனுமான் இலங்கையைத் தீ வைத்தான்... ஏன்...?

இப்போது நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் பிறருடைய கஷ்டங்கள் பிறருடைய நஷ்டங்கள் பிறருடைய தொல்லைகள் எல்லாம் சேர்க்கப்படும்போது நம் உடலுக்குள் என்ன செய்கின்றது?

அரக்க உணர்வுகள் அதிகமாகின்றது.

அப்போது நமக்குள் சந்தோஷம் என்ற சீதாவைச் செயலற்றதாக மாற்றுகின்றது. நமக்குள் என்ன செய்கின்றோம்?

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் -  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை - இராவணன்)

1.ஒவ்வொரு நாளும் நாம் தேடிக்கொண்ட உணர்வுகள் பலவானாலும்
2.இலங்கேஸ்வரன் (இராவணன்) இந்த உடலின் இச்சைகள் தனக்குள் ஆகி நல்லதை உருவாக்காதபடி
3.நமக்குள் நல்லதைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.
4.சீதா என்ற அந்த நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? இராமன் என்ன செய்கின்றான்? இராமன் சீதாவை எண்ணிச் செயல்படுத்தும்போது சீதா என்ன செய்கின்றது.

1.தன் கணவனின் உணர்வின் தன்மையை எண்ணி
2.அதை அதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.உயிரான விஷ்ணுவிடம் ஏங்குகின்றது.

இந்த அரக்கனோ தீமையின் உணர்வு கொண்டு நான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணி அவனும் (உயிரான) விஷ்ணுவை நோக்கித் தவம் செய்கின்றான்.

அவன் உணர்வு அதிகமாக்கப்படும் போது அவன் உடலுக்குள் நல்ல குணங்களைக் கொல்கின்றான். இந்திரலோகத்தில் (உடலுக்குள் அணுக்கள் உருவாகும் இடத்தில்) இவன் எடுத்துக் கொண்ட உணர்வு எதிர்மறையாக மனிதனின் ஆறாவது அறிவை இழக்கச் செய்துவிடுகின்றான்.

அப்பொழுது சீதா எண்ணிய அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது
1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு
2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.
3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

தீமைகளை நீக்குவதற்காக நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை வலுவான நிலைகள் கொண்டு எடுக்கும்போது நம் உணர்வின் தன்மை எப்படி ஆகின்றது?

நமக்குள் அந்த நல்ல குணத்தைச் சேர்க்கச் சேர்க்க நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் வானரப்படைகளாகச் சேர்க்கின்றது.

தீமைகளை நீக்கும் நிலையாக தனக்குள் அந்தப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு அது போர் செய்து சீதாவை மீட்டும் தன்மை வருகின்றது.

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் அசுர உணர்வுடன் இங்கே மனதிலேயே போர் நடக்கின்றது.
2.உடலுக்குள் சென்றபின் அரக்க உணர்வுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது.
3.சீதா இருக்கும் அந்த நிலையில் இலங்கைக்குள் (உடலுக்குள்) பல உணர்வுகளின் தன்மை கொண்டு நெருப்பு வைத்து ஆஞ்சநேயர் கொளுத்துகின்றார்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் சேர்கின்றது. தீமைகள் அகற்றப்படுகின்றது.

ஆகவே நம் உடலுக்குள் அந்தத் தீமையை நீக்கும் உணர்வைச் செலுத்தப்படும்போது அந்த சீதாவை - சந்தோஷத்தை நாம் மீட்ட முடியும்.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?