ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2017

இறந்தபின் மனித உயிராத்மாக்களின் இயக்க நிலைகள் – வேதனையுடன் இறந்தால் அவரின் சாப அலைகள் குடும்பங்களை எப்படிப் பாதிக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்

“மனிதன் இறந்தபின் மனிதனுடைய உயிராத்மா எந்நிலை பெறுகின்றது” என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

நடு இரவில் பழனியிலுள்ள ஒரு குளத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கிணற்றைக் காண்பித்தார். அந்தக் கிணற்றைப் பற்றி ஏற்கனவே யாம் அறிவோம்.

ஏனெனில் அதில் ஒரு பெண்மணி தனது ஏழு குழந்தைகளுடன் விழுந்து இறந்துவிட்டது.

ஊரில் உள்ளவர்கள் அதை “நல்ல தங்காள் கிணறு” என்று அழைப்பர். மற்றும் அதற்கு அருகிலே செல்ல வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அஞ்சுவோர்.

அத்தகைய கிணற்றைச் சுட்டிக் காட்டி அந்த இடத்தில் எமக்கு உபதேசிக்கின்றார்.

1.குழந்தைகள் அலறித் துடித்து இறந்த அந்த இடத்தில் அந்த நினைவலைகள் வருகின்ற பொழுது குழந்தைகளின் சரீரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

1.அந்த இடத்திற்குச் செல்கின்றவர்களிடம்
2.அங்கே துடித்து இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் உதிக்கின்ற பொழுது
3.சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்ட உணர்வலைகள்
4.ஒலி அலைகளாக மாறி
5.குழந்தைகள் துடிப்பது போன்று தாய் அவர்களை அடக்குவது போன்ற குரல்களைக் கேட்க நேர்கின்றது.

இவ்வாறு ஒரு மனித சரீரத்தில் விளைய வைத்த உணர்வலைகளை சூரியனின் காந்தசக்தி கவருமேயானால் அவ்வாறு கவரப்பட்ட உணர்வுகள் எவ்வாறு அலைகளாகப் படர்கின்றன?

ஒரு ஒலி நாடாவில் நமது உரையாடலைப் பதிவு செய்ததை டேப்பில் போட்டு மீண்டும் அப்படியே கேட்கின்றோம்.

அது போன்று ஒருவர் இறக்கின்ற பொழுது வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளைப் படரச் செய்கின்றது.

பிறகு நாம் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வருகின்ற பொழுது அந்த அலைகளை நாம் நுகர நேருகின்றது. இன்னும் அதிகமாக நினைவலைகளைக் கூட்ட அங்கே இறந்தவர்களுடைய உருவங்களைப் பார்க்கவே முடிகின்றது, என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

1.இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை பகலிலும் என்னால் தூங்க முடியவில்லை
2.யாரோ என்னை அழைப்பது போன்றிருக்கின்றது என்றும்
3.என் ஊரிலிருந்து இங்கே தபோவனம் வருகின்ற வரையிலும் யாரோ என்னை அழைத்துக் கொண்டு பின் தொடர்வது போன்று இருக்கின்றது என்றும்
4.தபோவனம் நுழைந்தபின் அது போன்று இல்லை என்றும் கூறிக் கொண்டு
5.இந்நிலைகளால் துன்பப்படுபவர்கள் தபோவனம் வந்து தங்கள் குறையை போக்கிக் கொண்டவர்களும் உள்ளனர்.

“மனிதனாக வளர்ந்தபின் இந்தச் சரீரத்தினுள் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?”

அதே சமயம் இந்தச் சரீரத்தை விட்டுச் செல்லும்போது அந்த உயிராத்மா எத்தகைய வேதனையைக் கொண்டிருந்ததோ அதே வேதனைத் துடிப்புடன் அந்த உயிராத்மா துடித்துக் கொண்டேயிருக்கின்றது  என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அறிந்துணர முடிந்தது.

தொடர்ந்து சற்குருதேவர் எம்மை அந்த இரவு முழுவதும் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்பொழுது சில வீடுகளைச் சுட்டிக் காட்டி அங்கு நிலவும் சூழல்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

அந்தக் குடும்பங்களில் வாழ்கின்ற அங்கத்தினர்களில் ஓரிருவர் பிறிதொருவரை ஏமாற்றுகின்ற பொழுது
1.ஏமாற்றப்பட்டவர் மரணமடைகின்ற பொழுது வெளியிடும் சாப உணர்வுகளை
2.வீட்டிலுள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து
3.அவர்களுடைய ஒலி அலைகளைத் தன்னிடத்தில் பதிவு செய்கின்றன.

மனித சரீரத்தில் ஒருவன் “பிறிதொருவன் எனக்குத் தீமையை விளைய வைத்தான்... பாவி...” என்ற உணர்வை ஓங்கி வளர்த்து அதனின் பேரில் “எண்ணிய எண்ணங்கள்..., வெளிப்படுத்திய உணர்வுகள்...” ஆகியவைகள் ஏமாற்றியவரின் சரீரத்தில் பதிவாகிவிட்டால் அவ்வாறு பதிவான உணர்வுகள் அவரிடத்தில் பெருகி அதன் வழிகளில் அவர் குடும்பங்களில் படர்கின்றது.

மற்றும் அக்குடும்பத்திலுள்ள இளம் தம்பதிகளிடம் பிறிதொருவரை ஏமாற்றிய சம்பவங்களைப் பற்றிய பேச்சுக்கள் எழுகின்ற பொழுது அவர்களுடைய கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடமும் இவ்வுணர்வுகள் பதிவாகின்றது.

இவ்வாறு அவர் இட்ட சாப அலைகள் இரண்டு மூன்று தலைமுறைக்குத் தொடர்கின்றது.

இவைகளை யாம் இங்கு எடுத்துரைப்பதற்குக் காரணம்...,
1.சமூகத்தில் பெரும்பாலானோர்
2.யார் போனால் என்ன...?
3.யார் திட்டினால் என்ன...? என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்லதே செய்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அது பிறருக்குத் தீமையை விளைவிக்கின்ற பட்சத்தில் அவர் நம்மைக் கடுமையாக ஏசுகின்றபொழுது “இவன் இப்படித் திட்டுகிறானே பாவி...” என்று நாம் எண்ணுகிற பொழுது அவ்வுணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகின்றன.

ஒருவர் சாபமிடும் நிலைகளில் பேசிக் கொண்டிருந்தாலும் “இப்படிப் பேசுகிறானே பாவி” என்றால்
1.நமக்குள் அந்த சாப உணர்வுகள் விளைந்து
2.நாமும் சாபமிடும் நிலைகளுக்கே சென்று விடுகின்றோம்.

இந்நிலைகள் சிறுகச் சிறுக நம்மிடம் விளைந்து நம் குடும்பத்தில் பிறக்கின்ற சந்ததிகளுக்கு காக்கா வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களும் கை, கால் முடக்கங்களும் உண்டாகின்றன.

பெண் குழந்தைகள் என்றால் மாறு கண் நோய்கள் உண்டாகின்றன. ஆஸ்துமா போன்றவைகளும் இவ்வழியாக வருவதே ஆகும்.

இவ்வாறு குருநாதர் ஒவ்வொரு உணர்வின் இயக்கத் தன்மையையும் சாப அலைகளின் தொடர் பாதிப்புகளையும் எமக்கு மேலும் அறிவுறுத்தும் பொருட்டு மறுநாள் பகலில் மீண்டும் அதே இல்லங்களுக்குமுன் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்.

அந்த இல்லத்தில் உள்ள அங்கத்தினர்களின் சரீரத்தில்
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் இயக்கத்தையும்
2.அவர்களிடத்தில் செயலாகின்ற சாப உணர்வுகளின் இயக்கத்தையும்,
3.எக்ஸ்ரே படம் போன்று அவர்களின் சரீரத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை எமக்களித்தார்.

இவ்வாறு ஒவ்வொரு இல்லத்திலும் நோய் வருவதும் சாபங்கள் இடுவதும் அந்தச் சாப நிலைகளால் குடும்பம் நசிந்து கொண்டிருப்பதும் நம் முன்னோர் காலத்தின் சாப நிலைகளால் பின் வரும் சந்ததியினர் அனுபவிக்க நேருவதும் போன்ற நிலைகளை எமக்கு உணர்த்தியருளினார்.

மேலும் இந்தச் சாப அலைகளால் தாக்கப்படுபவர்களிடம், அவ்வுணர்வுகள் விளைந்து உடலில் நோயாகி அச்சாப உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு “அந்த ஆன்மா... எவ்வாறு துடிக்கின்றது...?” என்கிற நிலையை குருநாதர் எமக்குக் காண்பித்தருளினார்.

மேலும்  மனிதனாக இருந்து பிறிதொருவர் அழிய வேண்டும் என்று கோபம் கொண்டு சாபமிடும் நிலைகளில் அவர் இறந்தபின் அவருடைய உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும் அவர் இட்ட சாபம் போலவே இயக்குகிறது.

அங்கே மனிதனைக் கருவாக்க விடாதபடித் தடுத்து அந்த உடலில் தீய விளைவுகளை விளையச் செய்து அந்த உணர்வின் தன்மையை இதனுடைய உணர்வுகளுக்கு உணவாகச் சேர்க்கின்றது.

இவ்வாறு உணவாகச் சேர்த்தபின் அந்த உடலைவிட்டு வெளியேறும் அந்த உயிரான்மா மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை.

பிறிதொருவர் அழிய வேண்டும் நாசமாக வேண்டும் என்று எவரொருவர் எண்ணுகின்றாரோ அவருடைய உயிராத்மா சரீரத்தை விட்டு வெளியே வந்த பின்னும் வேதனையடைகின்றது.

இந்த உயிராத்மா பிறிதொரு மனிதனின் சரீரத்திற்குள் புகுந்தாலும், அவரிடத்திலும் மனிதப் பிறவியை மீண்டும் பெறமுடியாத நிலையை உண்டாக்கி விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று நாம் நம் உடலை விட்டுப் பிரியும் பொழுது நமது உயிராத்மவில் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்பத்தான் அந்த இடத்திற்கு நம் உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது என்றும், அங்கே எவ்வாறு அது வேதனைப்படுகிறது...? வேதனையடையச் செய்கிறது? என்றும் குரு காட்டிய வழிகளில் நாம் தெரிந்து கொண்டோம்.

1.இனி ஒவ்வொரு நொடிப்பொழுதும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுவோம்.
2.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடுவோம்,
3.பிறவியில்லா நிலை அடைந்த சப்தரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்.
4.எந்த நேரம் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா பிரிந்தாலும்,
5.சப்தரிஷி மண்டலங்களுடன் இணந்து அழியா ஒளிச்சரீரம் அனைவரும் பெறுவோம் என்று
6.நாம் உறுதி கொள்வோம்.