ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2017

தீமை, தவறு, குற்றம், கெட்டவர்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தால் அதுதான் வளரும் – தீமையை நீக்கவேண்டும் என்றால் எப்படி எண்ண வேண்டும்...?

உதாரணமாக இன்று கழிவுப் பொருட்களை எடுப்பவர்கள் கழிவுப் பொருள்களின் நிலைகளில் அவர்கள் இருந்தாலும் கழிவுப் பொருள்களை நுகர்வதில்லை.
1.கழிவுப்பொருள்களை எடுக்கிறார்கள்
2.ஆனால் அதை அவர்கள் நுகர்வதில்லை.
3.”அதை நீக்க வேண்டும்” என்று எண்ணத்தில் வரும் பொழுது
4.கழிவுப் பொருட்களின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.
5.அவர்களுக்கு நோயும் வருவதில்லை.

ஆனால் அதே சமயம் கழிவுப்பொருள்களை எடுப்பவர்களைப் பார்த்தோர் “ஐய்யய்ய.., நாற்றமாக இருக்கின்றது...,” என்று சொன்னால்
1.இந்த நாற்றத்தை உள்ளே வைத்து
2.கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்.

எதனின் உணர்வினை நாம் சேர்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து நமக்குள் நாற்றமாகும் நிலையும் நாற்றத்தைக் கண்டால் வெறுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது.

அப்படி வெறுப்பின் நிலைகள் எண்ணங்கள் வந்தபின் யாரைப் பார்த்தாலும் “ஐய்யய்ய.., இவர்களைப் பார்த்தாலே அசிங்கமாக இருக்கின்றது..,” இந்தச் சொல்லே வரும்.

இது சுத்தமில்லை.., அது சுத்தமில்லை..,  இது சுத்தமில்லை.., என்று சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் மற்றவர்களைச் சொல்லி அவர்கள் எடுப்பது அவர்கள் உடலில் அந்த நாற்றம் வந்து கொண்டே இருக்கும்.

யாரொருவர் "இது சுத்தமில்லை..., அது சுத்தமில்லை..,"  என்று சொல்கின்றனரோ முதலில் அவர்கள் உடலிலே அந்த நாற்றம் வரும்.

வேண்டுமென்றால் சட்டைத் துணியை நீங்கள் நுகர்ந்து பாருங்கள். ஏனென்றால்
1.அந்த நாற்றத்தை இவர் பிடிக்கவில்லை என்று சொல்லி
2.அந்தக் கெட்டதைத்தான் இவர் நுகர்கின்றார்.

அப்படி நுகர்ந்த நிலைகள் அவர் சட்டையை முகர்ந்து பார்த்தால் அவர்கள் பக்கத்தில் நீங்களே போக முடியாது. இதைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் சந்தர்ப்பத்தால் இது உருவாகின்றது. இதையெல்லாம் நீங்க்ள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் மனிதனுடைய கொடூரச் செயல்களால் வெளியிடப்படும் மூச்சலைகளும் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட (ஆயுதங்கள்) மற்றவைகளை அழித்திடும் உணர்வின் ஆற்றலும் அதே அழித்திடும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டு வெளிவிடும் மூச்சலைகளும் இந்தப் பூமியில் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) படர்ந்து கொண்டிருக்கின்றது.

பழி தீர்க்கும் உணர்வுகளும் ஒன்றை அழித்திடும் தீவிரவாதத்தின் நிலைகளும் இரக்கமற்றுக் கொன்றிடும் செயல்களின் உணர்வுகளும் நாமும் இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்து நமக்குள் விளையச் செய்து வெளிப்படும் அந்த உணர்வுகளையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இன்று பரமாத்விலே கலந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மனிதன் தூய்மையாக்கும் நிலைகள் கொண்டாலும், தூய்மையாக்கும் நிலைகளே மறைந்து உலமே தூய்மையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது சாக்கடையான காற்று மண்டலத்திற்குள் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

காற்று மண்டலம் நஞ்சின் தன்மையாக இருக்கும் இந்த நிலையில் நமது குருநாதர் சாக்கடைக்குள் அமர்ந்து எனக்கு சாக்கடை உபதேசம் கொடுத்தார்.

சாக்கடைக்குள் மறைந்திருக்கும் நல்ல (உணவு) பொருட்களை பன்றி நுகர்ந்தெடுத்து நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் வளர்த்துக் கொள்கிறது.

1.நாற்றத்தைப் பிளந்திடும் வலிமையான இத்தகைய நிலைகள்
2.அந்த நாற்றமான பன்றியின் உடலைப் பிளந்து
3.அதைப் போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்த இதே உயிர் தான்
4.நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கின்றது.

ஆனால் மனிதனான பின் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும் உணர்வின் எண்ணத்தால் இயக்கும் செயல்களையும்
1.இன்று நாம் எவ்வாறு மாற்றவேண்டும்?
2.அதனை எவ்வாறு மாற்றிக் கொள்ள முடியும்? என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உபதேசித்தார் குருநாதர்.

எப்படிப் பன்றி சாக்கடைக்குள் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதனின் உணர்வின் ஆற்றலை எண்ணத்தால் நம் நினைவின் ஆற்றலை விண்ணிலே வீசி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க உணர்வலைகளை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்.

கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு சென்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படரவேண்டும் என்று உள் முகமாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நாம் பழகிக் கொண்டால், நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து வரும் எத்தகைய தீமையான உணர்வையும் நம் ஈர்ப்புக்குள் வராதபடி தடுக்க முடியும்.

“தீமைகளைப் பிளக்க முடியும்”.

இதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து தெளிவாக உணர்த்தினார்.


ஒவ்வொரு நொடியிலும் உயிருடன் ஒன்றிடும் உணர்வை நாம் ஒளியாக மாற்றும் பொழுது நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறமுடியும்.