ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2017

உலகெங்கிலும் நடக்கும் பல அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை டி.வி SOCIAL MEDIA மூலமாகப் பார்த்த பின் நம் உடலுக்குள் அணுக்கள் உருவாகி அது உணவுக்காக ஏங்கும் நிலைகள் – அதனின் விளைவுகள்

விஞ்ஞான அறிவால் உலகெங்கும் நடக்கும் நிகழ்ச்சிகளை நடந்த ஒரு 15 நிமிடத்திற்குள் பத்திரிக்கையிலோ டி.வி.யிலோ கம்ப்யூட்டர் மூலமாகவோ (SOCIAL MEDIA) இன்று நாம் பார்க்கின்றோம்.

பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் ஏனைய எத்தனையோ வகையானவற்றை நாம் காண நேர்கின்றது.

1.இப்படியெல்லாம் நடந்தது... நடக்கின்றது.., என்று
2.உடனுக்குடன் நாம் அறிவாக்கப்படும்போது அந்த அறிவின் தன்மை பதிவாகி
3.அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து
4.அதே அணுவாக நம் உடலுக்குள் உருவாகிவிடுகின்றது.

முதலில் படிக்கும்போது ஒன்றும் தெரியாது. அந்த அணுக்கள் விளைந்தபின் என்ன சொல்வோம்?

பத்திரிக்கையிலும் டி.வி.யிலும் மற்றதிலும் தினமும் அதைப் பார்த்தேன் இதைப் பார்த்தேன் என்று நாம் பேசுகின்றோம் அல்லவா?

1.இப்படி நடந்தது... அங்கே நடந்தது... இங்கே நடந்தது..., என்று சொல்லும்போது
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போகின்றது.
3.அது தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்துவிடுகின்றது.

நம் நல்ல உணர்வு கொண்டு நல்ல வழியில் எதாவது கொஞ்ச நேரம் பேசுகின்றோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

என்னதான் நல்லது செய்தாலும்..., “இப்படி ஆகிவிட்டதே...” என்ற நிலைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இதைத்தான் “நீ விழித்திரு...!” என்ற நிலைகளில் நாம் அந்தத் தீமையின் நிலைகள் நமக்குள் வரப்படும்பொழுதெல்லாம் இதை இடைமறித்தல் வேண்டும் விழித்தல் வேண்டும்.

அப்பொழுது அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். சப்தரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.  எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ..,
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்.
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவர்கள் நல்லவராகும் நிலைகள் ஆக வேண்டும்.
3.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.
4.இத்தகைய நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருத்தல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும்போது சந்தோஷமாகத்தான் இருப்போம். கொஞ்சம் நஷ்டம் ஆகிவிட்டால் என்ன செய்வோம்?

அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை.., இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை.., “இப்படி ஏமாந்து போய்விட்டேன்...” என்று இந்த எண்ணங்கள் தான் வரும்.

அப்போது அந்த எண்ணங்கள் உருவாகியது என்றால் அதனால் உருவான இந்த அணுக்கள் அதே நினைவுகளைச் சுவாசிக்கும்போது அந்த எண்ணங்களை அது உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

இப்பொழுது அதே அணுக்கள் இதற்கு உணவாகப்படும்போது இந்த நல்ல உடலில் அந்த தீமையின் செயலால் சோர்வடையச் செய்துவிடும்.

சோர்வான எண்ணங்கள் அதற்கு உணவானபின் நாம் எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தால் கூட
1.இந்த உடம்பு வலுவாகத்தான் இருக்கும்
2.ஆனால் சோர்வின் தன்மை வரப்படும்பொழுது எந்த வேலையும் செய்ய முடியாது.
3.சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் “நீ விழித்திரு” என்ற நிலையில் துருவ மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மாற்றிப் பழகுதல் வேண்டும்.

எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ உடனடியாக விழித்து அதைத் தனக்குள் அடக்குதல் வேண்டும்.

பத்திரிக்கை மூலமாகவோ, டி.வி மூலமாகவோ, இன்டெர்னெட் மூலமாகவோ
1.தீமையின் உணர்ச்சிகள் உருவாகப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து இதை இணைத்து
3.அந்தத் தீமைகளை உடனுக்குடன் அடக்குதல் வேண்டும்.