ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2017

நம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது - அதை மாற்றி "தியானத்தின் மூலம் ஆற்றலைக் கூட்டும் வழி"

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறிவிடுகின்றது.

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்
2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்
3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்
1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து
2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில்
2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்
3.எழுந்து ஓட வைக்கும்.
4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்
1.உடனே கண்களைத் திறங்கள்.
2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.
4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்
5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை
8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்களை அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

இதை மறவாது செய்து பழகுங்கள்.

நிறையப் பேருக்கு இன்னும் நான் தியானத்தில் உட்கார்ந்தால் எனக்கு மனம் ஒரு நிலைப்படவில்லை என்றும் எனக்கு வெறுப்பு வருகின்றது... என் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்ற நிலைகளில் சொல்வார்கள்.

கண்ணை மூடித் தியானிக்கும் பொழுது இவ்வாறு பல நிலைகள் வந்தால் கண்ணைத் திறந்து நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தி ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டுமென்று ஏங்கும்போது
1.மறுபடியும் கண்ணை அது தன்னிச்சையாக மூட வைக்கும்.
2.நினைவினை துருவ நட்சத்திரத்திடம் அழைத்துச் செல்லும்.

அப்பொழுது அந்தத் துருவ துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் துருவப் பகுதியின் வழியாக பூமிக்குள் வருவதை அங்கிருந்து நமக்குள் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம். 

இதைத் தொடர்ந்து வழிப்படுத்தி வாருங்கள். இது நல்லதாக அமையும். தியானத்தின் மூலம் உங்கள் சக்தியைக் கூட்டிக் கொள்ள முடியும்.