ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2017

தெய்வ குணத்தை நமக்குள் வளர்க்கச் செய்வதற்காகவே ஒவ்வொரு ஆலயங்களிலும் “ஓம்…” போட்டுக் காட்டியுள்ளார்கள் ஞானிகள் – நாம் வளர்க்கின்றோமா…

ஓர் அணுவின் தன்மை ஐந்து புலனறிவு என்று வைத்துள்ளளனர் ஞானிகள்.

இதையே
1.வெப்பம் (பராசக்தி)
2.காந்தம் (லட்சுமி)
3.விஷம் (இயக்கும் சக்தி)
4.மணம் (அறியும் சக்தி) இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து
5.உணரும் சக்தியாக மாறுகின்றது என்பதை
மெய்ஞானிகள் அன்று பெயர் வைத்து நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். ஆகவே உணர்வு என்ற நிலை வரும் பொழுது அனைத்தும் சேர்ந்து, ஒன்றாக மாறுகின்றது.

சூரியனில் இருந்து வரும் வெப்பகாந்தம் உள் நின்று அந்த உணர்வின் சக்தியை தன்னுடன் அணைத்துச் செல்லும் பொழுது
1.அந்த உணர்வுக்குள் இருக்கும் 
2.அந்த இயக்கச்சக்தியாக மாறும் நிலையே.., “கடவுள்”

எந்த மணத்தின் சக்தியை எடுத்துக் கொள்கின்றதோ அது விஷமான சத்தாக இருந்தால் நாம் மணத்தால் நுகரப்பபடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை இயக்கச் சக்தியாக இறையாகின்றது.

உயிர் இயக்கும் பொழுது நெகடிவ் பாசிடிவ் (+/-)

ஒரு மேக்னட் சுழலும் பொழுது அது தனக்குள் கரண்டை உற்பத்தி செய்கின்றது. இதைப்போலத்தான் நமது பூமி சுழலும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் காந்தம் ஏற்படுகின்றது.

அத்தகைய காந்தத்தால் பூமிக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் காந்தப்புலன் இருக்கின்றது. பூமி சுழலும் பொழுது தன் எதிரிலே படும் காந்தப்புலனுடன் உராயப்படும் பொழுது கரண்டை உற்பத்தி செய்கின்றது.

அதனால் அதனதன் நிலைகளுக்கொப்ப பூமியின் ஆற்றலை அது பெறுகின்றது. இதைப் போல நமது உயிரின் தன்மை “நெகடிவ்… பாசிடிவ்…” என்ற, எதிர்மறையான இயக்கங்களில் இயக்கும் பொழுது இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

நமக்குள் வெப்பமாக இயங்குவது கடவுள் என்றும் இயக்கத்தின் சக்தியை ஈஸ்வரா என்றும் பெயரை வைத்துள்ளனர். ஏனெனில் வெப்பம் எதனுடன் சேர்ந்தாலும் உற்பத்தி செய்யும் நிலைகள் பெற்றது.

நமது ஞானிகள் இதை நாம் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்காக, தெளிவான நிலைகளில் கண்டுணர்ந்து அந்தப் பேருண்மைகளை நமக்கு எடுத்து உரைத்துள்ளார்கள்.

1.நமது உயிர் இயக்கமாகும் பொழுது இயக்கத்தை ஈஸ்வரன் என்றும்,
2.இயக்கத்திற்குள் எற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்,
3.வெப்பம் எற்படும் நிலையில் ஈர்க்கும் சக்தி வரும்பொழுது விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும்
4.விஷ்ணுவின் மனைவி லட்சுமியானாலும் காந்தம் இந்த உயிருடன் இணைந்து இயக்கச் சக்தியாகும் பொழுது “துடிப்பாகின்றது”.

ஒரு நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் கொதிப்பாகி அதனின் மணம் வெளிப்படுகின்றது. ஆகவே
1.எந்த உணர்வின் சத்தை அது கவர்கின்றதோ
2.கவர்ந்த உணர்வுகள் உயிருடன் உராயும் பொழுது
3.நாம் எண்ணிய அந்த உணர்வுகள் ஜீவன் பெறுகின்றது.

இதைப் போல் உயிருக்குள் இருக்கும் பொழுது ஜீவ சக்தியாக அது மாற்றுகின்றது. இதுதான் “ஓ…” என்ற உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உராயும் பொழுது பிரணவமாகி “ம்...” (சிவம்) உடலாகின்றது. சிவத்திற்குள் அது சக்தியாக மாறுகின்றது.

நாம் எண்ணும் எண்ணத்தை நமக்குள் ஜீவனாக்கச் செய்வது நம் உயிரின் வேலை. அதனால்தான் கோயில்களில் “ஓ…ம்” என்று அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் போட்டிருப்பார்கள்.

நாம் அந்தத் தெய்வத்தைப் பார்க்கும் பொழுது அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அது “ஓ…ம்” என்று ஜீவனாகின்றது.

1.அந்தத் தெய்வ குணத்தின் சக்தி நமக்குள்ளாகும் பொழுது
2.அந்தத் தெய்வ குணத்தின் செயலாக நமக்குள் செயலாற்றும்.
3.தெய்வ குணத்தை நமக்குள் உருவாக்குவதற்கே “ஓ…ம்” என்று காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்றால் நாம் அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி தெய்வ குணங்களை வளர்க்க வேண்டும். நாம் அவ்வாறு வளர்க்கின்றோமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.