ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2017

நம்மை அறியாது வரும் தீமைகளைக் கூகையாக்கச் (மலடாக்க) செய்யும் வழி முறை

ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா.. என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை என்று
1.எத்தனையோ வகையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும்
2.இவை அனைத்தும் நம் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிவிடுகின்றது.

பின் நாளடைவில் அந்தக் கரு முட்டைகள்
1.அதனதன் குணத்திற்குத்தக்க அணுக்களாக உருவாகி
2.எந்த உறுப்புகளில் இந்த முட்டைகள் தேங்கி விடுகின்றதோ
3.அந்த உறுப்புகளில் இந்த வேதனையாகி அங்கே நோயாகி
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விழுங்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளைத் தடைபடுத்த நம்மால் முடியும்.

ஒரு மல்லிகைச் செடியின் மேல் தட்டான்பூச்சி முட்டையிட்டாலோ அதைப் போல பல வண்ணங்கள் கொண்ட மலரில் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அந்தந்த வண்ணம் கொண்ட பூச்சிகளாக பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை
1.இரத்தநாளங்களில் உருவாகும் பல குணங்கள் கொண்ட அணுக்கருவிற்குள் சேர்த்தால்
2.அந்தக் கரு முட்டைகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறும்  வலிமை பெறுகின்றது.
3.அப்பொழுது இரத்தத்தில் உருவாகும் கரு முட்டையிலேயே தீமையை நீக்கும் சக்தி பெறுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊசி (INJECTION) மூலம் நோய்களை நீக்குகின்றனர். உடல் ஊனமானதையும் மாற்றியமைக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

தாயின் கருவில் உருவான சிசு உடலில்
1.சில குறைபாடுகள் இருந்தாலும்
2.அந்த உணர்வின் தன்மையை மாற்றி
3.உயர்ந்த ஞானக் குழந்தையாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானம் ஊட்டுகின்றது.

இதைப் போல மெய்ஞானிகள் கூறிய உணர்வின்படி கண்ணின் உணர்வினைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்தங்களில் செலுத்த முடியும்.

இரத்தத்தில் வளர்ந்து வரும் கரு முட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அதாவது…
1.அந்தத் தீயவினைகள் உருவாக்கும் கரு முட்டைகளில்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணையச் செய்து
3.அதிலுள்ள தீயதை நீக்கி நல்ல உணர்வு பெறச் செய்யும்
4.அந்த முட்டைகளாக மாற்றி அமையுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். அவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு நமக்குள் அதிகமானால் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும்.

அவர் பட்ட துயரமும் நம் இரத்தத்தில் விளைந்து நமக்குள் கலந்து விடும். அந்தக் கருக்களை உருவாக்கி நம் உடலுக்குள்ளே தீய அணுக்களாகி நம் உடலை வீழ்த்தி விட்டு வெளிச்சென்ற பின் அந்த தீய அணுவின் உணர்வு கொண்டு வேறொரு உடலாக மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவை செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி செய்தால்
3.அதன் வளர்ச்சியில் நம் உடலிலுள்ள நோய்களை நீக்கவும்
4.உறுப்புகளை நல்வழியில் வழி நடத்தவும் உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை அந்தச் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகள் உற்சாகமடைவதை உணர முடியும். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் உற்சாகமடைவதை உங்களால் உணர முடியும்.

நமக்குள் அரும் பெரும் சக்திகளைச் சேர்க்கும் வழி இது தான்.