ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2017

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – எப்படித் தடுப்பது...?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது. பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.

அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.

அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.

நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.

பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.

வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.

அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.

நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே  பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.

சில பேருக்கு  ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்.”

ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில்  அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று  எழுந்து ஓடுபவர்களும் பலர்  உண்டு.

விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது
1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.

இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).

Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.

அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.

நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது  அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி  எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.

சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.“ஐயோ என்னைக் கொல்கிறார்களே என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர் கொல்கின்றனர் என்றும் சொல்வார்கள்.

விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது. இங்கே இப்படி ஆனது என்பார்கள்.

நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.

அவர் விபத்தைப் பார்த்தார்; நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.

என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.

அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.
1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.

அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின்  இரவிலே
1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.
  
ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.

“ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.                     

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.

வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.

புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

அதே போல் படுக்கப் போகும் முன்பும் காலையில் எழும் பொழுதும் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று கண்டிப்பாகத் தியானிக்க வேண்டும்.

1.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று இரவிலும்
2.இன்றைய செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று காலையிலும்
ஒவ்வொரு நாளும் இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் என்றுமே குடிகொண்டிருக்கும்.