ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2017

பிரதோஷம் பற்றி குருநாதர் சொல்லவில்லை என்றால் எனக்கும் தெரியாது – பிறருடைய தோஷத்தை அந்தப் “பிரதோஷத்தைக் கழிக்க வேண்டிய முறை”

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அதனின் உட்பொருளை அறிந்துள்ளோமா…?

கோயிலில் போய் நம் கஷ்டத்தை எல்லாம் சொல்லிவிட்டால் அந்தத் தெய்வம் நிவர்த்தி செய்து தரும் என்று தான் நாம் நினைக்கின்றோம்.

வாழ்க்கையில் கஷ்டம் வேதனை என் தொழில் நடக்க வில்லை… அது நடக்கவில்லை… இது நடக்கவில்லை… என்று  வேதனையை எடுத்துக் கொள்கின்றோம்.

பிறருடைய கஷ்டங்களை நாம் கேட்கின்றோம். அறிகின்றோம்.. நுகர்கின்றோம்… பின் உதவி செய்கின்றோம்.

பிறருடைய உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கின்றது. பிறருடைய உடலில் கோபம் இருக்கின்றது. பிறருடைய உடலில் வேதனை இருக்கின்றது.

இதையெல்லாம் நாம் பார்த்து “பாவம்… அவர்கள் குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். நல்லவர்களாக இருக்கின்றார்கள்.

சந்தர்ப்பத்தில் அவர்கள் குழந்தை தான் அத்தனை அட்டகாசம் செய்கின்றான். அவனைப் பார்த்தால் அவர்களுக்குத் தொல்லையாகின்றது என்று நாம் அதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பிறர் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம்.. உணர்கின்றோம்.. அவன் திருந்தி வாழவேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் அதையெல்லாம் கூர்ந்து கவனித்து நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே
1.பிறருடைய அந்தத் தோஷம்
2.”தோஷமாக…” நமக்குள் வந்து விடுகின்றது.

எது…?

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வருகின்றது. இது தான் பிரதோஷம். சிவன் கோயில்களில் இதைத்தான் “பிரதோஷம்…” என்று தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வந்தவுடனே  நாமும் புலம்பத் தொடங்குவோம்.

காசு கொடுத்தவன் கொடுக்கவில்லை. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நம் வீட்டிலேயே “அந்தத் தோஷம்” இங்கே வந்து விடுகின்றது

நம் வீட்டில் இருப்பவர்கள் நன்றாக உயர்வாக இருந்தாலும் உடலில் நோய் வந்து விட்டது என்றால் உற்றுப் பார்க்கின்றோம். “அவர்கள் உடலில் விளைந்த தோஷம்” நம்மிடம் வந்து விடுகின்றது.

நான்கு பேர் நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். அவர்கள் உடலில் சந்தர்ப்பவசத்தால் நோய்கள் வருகின்றது. அதை நாம் கேட்டறிகின்றோம். “நண்பருடைய தோஷம்…” நமக்குள் வந்து விடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
2.வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டறிந்து
3.இதை எல்லாம் நமக்குள் சேர்த்ததும்
4.நமக்குள்ளும் தோஷமாகின்றது.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாக நேசித்தோமோ இந்தக் கணக்கின் பிரகாரம் நம் உடலுக்குள் மாற்றங்களாகின்றது.

கோபம் கோபம் என்று ஆத்திரப்பட்டால் இரத்தக் கொதிப்பு வருகின்றது.

கோபமும் வேதனையும் சலிப்பும், சஞ்சலம் வந்து சரவாங்கி நோயாகிக் கை கால் எல்லாம் முடக்குகின்றது. கோபம் வந்தால் “பளீர்..” என்று வந்து வெட்டி “வெடுக்…”கென்று இழுத்துக் கொள்கின்றது.

விஷம் என்ற நிலைகள் வந்துவிட்டால் பாம்பு போல “தொளக்..” என்று போட்டு விடுகிறது. விஷம் பாய்ந்தவுடனே என்ன செய்யும்? கை இல்லாமல் போகும்.

நம் வாழ்க்கையில் நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாகச் சுவாசித்தோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் அதறிகுத்தக்க மாற்றம் வருகின்றது.

1.நாம் சுவாசித்த நந்தி… “ஈஸ்வரர்”
2.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈஸ்வரனிடம் படுகின்றது.
3.நாம் சுவாசித்தது நம் உடலுக்குள் போய்
4.எந்தக் குணமோ உயிரைப் போலவே ஜீவ அணுவாக உருவாகி
5.அந்தக் கணக்குகள் நமக்குக் கூடும்.

உயிரைப் போலவே ஜீவனாகின்றது. உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆக..,
1.விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
2.எதன் சுவையோ அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் வரும்.
3.வேதனை என்ற சுவை இருந்தால் வேதனை என்ற உணர்ச்சி வரும்.

அது தான் உயிரைப் போலவே அந்த அணுக்கள் அந்த உடலில் உருவாகும் – விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.

எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்? நாம் எந்தக் குணத்தை அதிமாக எடுத்தோமோ அதன் ரூபமாக நம்மை மாற்றும்.

நந்தீஸ்வரன் – நாம் சுவாசித்த உணர்வெல்லாம் உடலில் சிவமாக மாறிவிடுகின்றது.

ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்றால் அது எப்படி…?

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தவுடனே பார்வதி பஜே அரஹரா சம்போ மகாதேவா.

1.பார்வையில் பார்க்கின்றோம் – பார்வதி பஜே
2.வேதனைப்படுபவரின் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை இயக்கி –  அரஹரா
3.சந்தித்த சந்தர்ப்பம் இணைந்து – சம்போ
4.நம் உயிர் மகாதேவன் அதை உருவாக்கி விடுகின்றான் – மகாதேவா

கோபப்படுபவர்களைப் பார்த்தாலே பார்வதி பஜே அந்தப் பார்வையில் படுகின்றது நுகர்கின்றோம். பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா கோபமான உணர்ச்சிகள் நமக்குள்ளே வந்துவிடுகின்றது.

அதாவது… பிறருடைய தோஷங்களை நாம் அறிந்து உதவி செய்தாலும் இந்தத் தோஷங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் நமக்குள் என்ன நடக்கின்றது? எந்தக் கணக்கு கூடுகின்றது?

“சம்போ மஹாதேவா…” – நான் சந்தித்ததை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றான். மஹா தேவனாக இருக்கின்றான்,

யார்…?

நம் உயிர்…!

நமக்கு இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்களே…! நாம் யாராவது நினைக்கின்றோமா?

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருந்து நல்ல குணங்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் “நீ இரு…” என்று இருக்கச் செய்து விடுகிறோம்.

நான்கு மணி வரையிலும் பட்டினியாக இருந்துவிட்டுச் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். விளக்கைக் கொண்டு போய் வைக்கின்றோம் – இது கார்த்திகேயா.

கார்த்திகை என்றால் விளக்கை முன்னாடி வைத்துக் காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு முன்னாடி இருக்கிறது,

விளக்கில் எல்லாப் பொருளும் தெரிகின்றது.

ஆறாவது அறிவால் இதைத் தெரிந்து கொள்…! என்று விளக்கை வைத்துக் காட்டுகின்றான். அந்த விளக்கு எது?

துருவ நட்சத்திரத்தின் விளக்கு. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இப்படித் தூய்மைப்படுத்து. தன்னுடைய மனதை விளக்கு என்று தான் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இதற்குப் பதில் புறத்தீயின் நிலைகளை வைத்து தீபத்தை வைத்துக் காண்பிக்கின்றனர்.

ஆக… சாப்பிடவில்லை என்றால் நல்ல அணுக்கள் கெட்டுப் போகும். இந்த ஆறாவது அறிவால் தெரிந்தும் கூட பட்டினியாக இருந்து விரதம் இருக்கின்றோம்.

ஆனால் எது விரதம்?

வேதனை, வெறுப்பு, சஞ்சலம் அவன் அப்படிச் செய்கின்றான் என் பையன் என்னை எதிர்க்கின்றான் – இதைப் போன்ற உணர்வுகள் எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும் போது அந்தத் தீமைகள் நமக்குள்ளே போகாமல் தடுக்க வேண்டும்.

அது தான் உண்மையான விரதம்.

நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுத்தால் வீரியமாகும். அதற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் சோர்வடையும். சோர்வோடு இருக்கும் போது எப்படி இருப்போம்?

இன்றைக்கு விரதம் என்றால் உற்சாகமாகவா இருக்கின்றீர்கள்…! முகம் அப்படியே வாடிப்போகும்… இல்லையா…! அந்த முகம் மாறினவுடனே என்ன செய்கின்றது,

சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரனுக்குக் கொண்டு வந்து முன்னாடி கொடுத்து “இந்தாப்பா சாப்பாடு….! என்று கொடுக்கின்றோம்.

1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்.
2.என் மாமியார் திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
3.என் மாமனார் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்காரர் திட்டிக்கொண்டே இருக்கின்றார்.
4.கடன் கொடுத்தது அவன் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்.
5.சாப்பாட்டைக் கொடுத்து இதையெல்லாம் நந்தீஸ்வரன் காதில் மிகவும் வேதனையோடு சொல்வார்கள்.

பிரதோஷம் அன்றைக்கு விரதம் எது?

சங்கடம், சலிப்பு, சஞ்சலம், வேதனை, வெறுப்பு இதைப் போன்ற தீமையான உணர்வுகளைச் சுவாசிக்காமல் இருப்பதற்காகவும் தீமைகளை நாம் நினைக்கக்கூடாது என்பதைத்தான் விரதம் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் பிரதோஷம் அன்றைக்கு
1.என் வீட்டுக்காரர் மாமனார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
2.மாமனார் சொல்வது மாமியார் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
3.இவர்கள் பேச்சைகளைத்தான் என் பிள்ளைகள் கேட்கிறது.
4.எங்கள் வீட்டிலேயும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள்
5.இந்தக் குறைகளை நீ போய் ஈஸ்வரனிடம் சொல்லப்பா என்று
தோஷங்களை நீக்குவதற்குப் பதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதர் சொன்ன பிற்பாடு தான் பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இல்லை என்றால் எனக்கும் தெரியாது.

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். அன்றைக்கு நமக்கும் கொஞ்சம் பசி எடுக்கும். நாம் சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் “இப்போது என்ன அவசரம்…?” என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்,

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். எனக்குச் சாப்பாடு கொடு என்று கேட்டால் “சாமிக்குக் கொடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்..” என்று அவர்களுக்குக் கோபம் வரும்.

விரதம் இருக்கும் அன்றைக்கு இது போல நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும் என்று பாருங்கள்…! பிறருடைய தோஷங்களை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

எல்லா தோஷத்தையும் நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருப்பது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நமக்குள் நம்மை அறியாது வந்த – வரும் தீய வினை சாப வினை பூர்வ ஜென்ம வினை பாவ வினை என்று எல்லாத் தோஷங்களையும் நீக்க முடியும்.