ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2017

தியானத்தில் பெறும் அனுபவம் எதுவாக இருக்க வேண்டும்...?

நீங்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்கின்றீர்கள் ஆராதனை செய்கின்றீர்கள். பழம் கனிகளை வைத்துச் செய்கின்றீர்கள்.

இதே போன்று தான் குரு காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனுக்கு அருள் ஞானி கொடுத்த கனியை அந்த ஞானக் கனியை அபிஷேகம் செய்கின்றோம்.

மனிதர்களில் சுவை மிக்கதாக வாழ்ந்து உணர்வை ஒளியின் சிகரமாக மாற்றிக் கனியின் தன்மை அடைந்தவர்கள் மெய் ஞானிகள். அவர்கள் உணர்வுகள் தான் அந்த ஞானக் கனி.

வாழை மா பலா சேர்ந்து முக்கனி... அருள் கனி என்றெல்லாம் சொல்வார்கள். முக்கனியின் சுவை என்று சொல்வார்கள். அதைப் போல
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு சுவையின் தன்மையாகப்
2.பஞ்சமிர்தம் என்ற நிலையில் ஐந்து புலன் அறிவு கொண்டு
3.மகிழ்ந்திடும் உணர்வாகச் சமைத்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
4.நம்மில் நாம் வளர்த்திட முடியும்.

ஆறாவது அறிவால் தெளிந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அவருக்குள் பல கோடிக் குணங்கள் (பல கோடிக் கனிகள் போன்று) இருப்பினும்
1.இனிமை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வாக
2.தனக்குள் ஒருக்கிணைந்த உணர்வின் ஒளியாக இருக்கும் அந்தக் கனியை
3.ஐந்து புலனால் கேட்டுணர்ந்து உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்.

அத்தகைய அருள் ஞான வித்தை உங்களில் பதிவு செய்து இந்தக் கனியை அறுவடை செய்து உங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ வேண்டும்.

நண்பராக என்று இருந்தாலும் சிறிது பிழைகள் ஏற்பட்டால் அவரை நினைத்தால் கொதித்தெழும் நிலைகளும் நமக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளும் வரும்.

இதைப் போல நம்மை அறியாதபடி நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் பேதங்கள் உருவாகிவிடுகின்றது.

அந்தப் பேத உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து விட்டால் அந்த நண்பரை உற்று நோக்கும் போதெல்லாம் நம்மை அறியாது பேத உணர்வுகள் வந்து நமக்குள் நல்ல உணர்வுகளை மறைத்துக் கொண்டே போகின்றது.

நாம் எப்படி ஒரு குழம்பில் காரம் புளிப்பு இனிப்பு உப்பு இவை அனைத்தும் சேர்த்துச் சுவை மிக்கதாக உருவாக்குகின்றோமோ இதைப்போல நம் வாழ்க்கையில் தீமைகள் வந்தாலும் அதைக் கேட்டுணர்ந்தாலும் அருள் ஞானி உணர்வை நமக்குள் நுகர்ந்து அதைச் சமப்படுத்தி மகிழ்ந்த நிலையாக ஆக்க வேண்டும்.

எத்தகைய தீமையின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஞானி உணர்வுகளை உயிருடன் கலந்து சுவை மிக்கதாகப் படைத்திட முடியும்.

1.பாம்பினம் எவ்வாறு அது நஞ்சினைத் தனக்குள் உணவாக எடுத்து மகிழ்கின்றதோ
2.சூரியன் நஞ்சால் அது உருவாகி நெருப்பானாலும் நெருப்பின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கி ஒளியின் சுடராக மாறுகின்றதோ
3.நஞ்சினைத் தன்னுடன் இணைத்து வைரம் எவ்வாறு ஜொலித்திடுகின்றதோ
4.நஞ்சின் இயக்கமாக நம் உயிரின் துடிப்பு இருப்பினும்
5.ஒவ்வொரு நஞ்சான உணர்வலைகள் நம்மை இயக்கினாலும்
6.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பளிச்சிடும் நிலைகள் கொண்டு
7. நஞ்சே நஞ்சற்ற நிலையாகத் தனக்குள் ஒளியின் சிகரமாக ஆகி
8.எத்தகைய நஞ்சு மோதினாலும் நம் உணர்வுகள் பேரொளியாக மாறும்.

ஏனென்றால் நஞ்சின் தாக்குதல் தாங்காதுதான் சூரியன் ஒளியின் தன்மை அடைகின்றது. ஒரு அணுவின் தன்மை தனக்குள் நஞ்சின் தன்மை தாக்கும்போது தான் அமைதி கொண்ட உணர்வின் தன்மை - நெருப்பாக மாறியது.

நெருப்பின் தன்மை அதிகமான பின் நஞ்சின் தன்மை அங்கே ஒடுங்குகின்றது. இதைப் போலத் தான்
1.நஞ்சால் உருவான நிலைகள் கொண்டு
2.நஞ்சினை அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றுகின்றது.

அதைப் போன்றுதான் நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வின் தன்மை நமது ஆறாவது அறிவிற்கு உண்டு. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் தீமைகள் நம்மை அணுகாது காத்திட வேண்டும்.

ஒளியின் சிகரமாக வாழ்ந்திடும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ்ந்திடல் வேண்டும். ஆகவே
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விளைவித்துக் கொடுத்த ஞான வித்து என்னிடம் முளைத்திருக்கின்றது
2.அதில் மெய்ப் பொருளைக் காணுகின்றேன்
3.என் சிரமங்கள் நீங்கிவிட்டது.
4.வாழ்க்கையில் வந்த தீமைகளில் உள்ள பொருள் கண்டுணர்ந்தேன்.
5.பொருள் கண்டுணரரும் திறனால் தீமைகளை அகற்றினேன்
6.என் குடும்பம் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது என்ற நிலைகளில்
7.நீங்கள் எப்போது சொல்கின்றீர்களோ அப்போது தான் உங்களிடம் நான் குருவைக் காண முடியும்.
8.என் குருவை உங்களிடம் காண விரும்பித்தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.